• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 1

Member
Joined
Jan 26, 2024
Messages
50
அருமையான பதிவு
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
140

ஆடம்பரமான நகர வாழ்க்கைக்கு ஏற்ற அப்பார்ட்மெண்ட் பகுதி எது.. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டின் ஒரு அறையில்.. மேஜை மீது வைக்கப்பட்டிருந்த 15 தூக்க மாத்திரைகளின் முன்பு வெறுமையான எண்ணங்களும் விரக்தியான மனதும் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்..

துரோணா மகரிஷி..

தூக்கமின்மையை தவிர்க்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய் போட்டுக் கொள்வதற்காக வாங்கப்பட்ட மாத்திரைகள் அல்ல.. மொத்தமாய் விழுங்கி வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக முடிவெடுத்து முதல் மாத்திரையை கையில் எடுக்கிறான்..

"லொள்.. லொள்..!"

விபரீதம் உணர்ந்து எம்பி எம்பி குதிக்கிறது அந்த குட்டி நாய்..

எழுத்தாளர் சுஜாதாவின் வரிகள்..

விளக்கை சுற்றி வரும் சுவற்று பல்லிக்கு அந்த விளக்கு எரிவதற்கான இயக்க விதிகளை தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து சொல்லிக் கொடுத்தாலும் புரியப்போவதில்லை..! இரை தேடும் பல்லிக்கு அது தேவையும் இல்லை..

ஆனால் இந்த ஐந்தறிவு ஜீவராசிகளால் ஆறறிவு படைத்த மனிதனின் உணர்வுகளை எப்படி துல்லியமாக புரிந்து கொள்கிறது என்பது புரியாத புதிர் தான்..

சலனமின்றி அவன் மேஜையில் மாத்திரைகளை கொட்டி வைத்து.. வெறுமையான விழிகளோடு அதை உற்று நோக்கிக் கொண்டிருக்க.. ஏதோ தவறான முடிவெடுக்கப் போகிறான் என்று இந்த குட்டி நாய்க்கு எப்படித்தான் புரிந்ததோ..!

அவன் காலை சுற்றி வந்து முன் கால்களால் அவன் பாதத்தை இறுக்கப் பற்றிக் கொண்டு விரல்களை பொய்யாக கடிக்கிறது.. நிமிர்ந்து பார்த்து குரைக்கிறது.. அதன் உயரத்திற்கு எம்பி குதித்து ஏதேனும் செய்ய முடியுமா என்று முயன்று பார்க்கிறது..

"மோத்தி.."

"லொள்.. லொள்..!"

"மோத்தி.. பிரசந்தக்கா உண்டு! (அமைதியாய் இரு)

ஆம் துரோணா மகரிஷி சுந்தர தெலுங்கன்..

துரோணா மகரிஷி சூர்ய நாராயண ராஜுலு..

ஹைதராபாத் இவன் சொந்த நகரம்..!

ஆந்திராவிலிருந்து வந்தாரை வாழவைக்கும் தமிழ்த் திருநாட்டிற்கு விஜயம் செய்து இரண்டு வருடங்களே முடிவடைந்திருந்த நிலையில்

ஏன் இந்த விபரீத தற்கொலை எண்ணம்..?

அவன் வீடு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அதி நவீன அபார்ட்மென்ட்..

இத்தனை நாட்களாக அந்த இரண்டாவது படுக்கையறையை ஆக்கிரமித்திருந்த அந்த உயிர் இப்போது அங்கே இல்லை..

வெற்றுபடுக்கையும்.. தனிமையும்.. நிசப்தமும் இதயத்தை இரண்டாக பிளக்கிறது..

அவன் தாய் சந்திரா..! அவனின் ஒரே உறவு.. ஊரே தூற்றி அவமானப்படுத்தி அவனை ஒதுக்கி வைத்த போதிலும் என் மகன் நல்லவன்.. அப்படி ஒரு தவறை எந்நாளும் அவன் செய்திருக்க மாட்டான் என்று நம்பிக்கையோடு மகனை அரவணைத்துக் கொண்டு இத்தனை நாட்களாக மகரிஷிக்கு ஆதரவாக பாசக்கரம் நீட்டியவள்..!

உலகை விட்டு செல்லும்போது மகனின் ஜீவ சக்தியை உருவிக் கொண்டு சென்றுவிட்டாளோ என்னவோ..!

ஆறடி ஆண்மகன் எலும்பில்லாத சரீரமாக துவண்டு போனான்..

சொந்த ஊரில் மகாராஜா போல் வாழ்வதற்கான அத்தனை சொத்துக்களையும் மற்றவரின் மேற்பார்வையில் விட்டு இருவரும் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு இடம்பெற வேண்டிய காரணம் என்ன..?

கம்பீரமான ஆண்.. உலகைவிட்டு ஒதுங்கி நிலை குலைந்து போகுமளவிற்கு அப்படி என்ன துன்பம் நேர்ந்தது..

புனரபி ஜனனம் புனரபி மரணம்.. என்பதை அறியாதவன் இல்லை இந்த மகரிஷி..

பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி ஆனால் அதையும் தாண்டி பெற்ற தாயின் மரணம் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அளவிற்கு அவன் மனதை பாதித்திருக்கிறது என்றால் அதற்கான காரணம்..?

அன்னையின் அனுசரணையின்றி தன்னால் வாழ முடியாது என்ற சோகம் மட்டுமல்ல..

பெற்றவளைத் தவிர இந்த உலகத்தின் அத்தனை ஜீவராசிகளும் காமுகனாய் தன்னை பார்க்கும் கோபமும் கூட..

தன் சொந்த மாநிலத்தில் வசதிக்கு குறைவில்லாத மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவன் தான் இந்த மகரிஷி..!

பெரியப்பா சித்தப்பா.. சித்தி பெரியம்மா அண்ணன் தங்கை தம்பி அக்காள் என்று அத்தனை சொந்தங்களோடு வாழ்ந்தவன்..‌

அவன் பிறந்த சில வருடங்களிலேயே அவன் தந்தை கோவிந்தராஜுலு விபத்தில் தவறிவிட்டார்..

சின்ன சின்ன குடும்ப அரசியல் போட்டி பொறாமைக்கு நடுவில் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத சூழலில் அவன் ஒரு இளவரசனாக கொண்டாடப்பட்டதில் சந்தேகமே இல்லை..

"ஏமி மகா..! எலா சேஸ்தி பாகுன்டுந்தா..?" ( இப்படி செஞ்சா சரியா வருமா மகா?)

குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போது சின்னவர்களை ஓரங்கட்டி விட்டு அவனை மட்டும் ஆலோசனைக்காக தொட்டுக் கொள்வது பெரியவர்களின் வழக்கம்..

புத்திக் கூர்மையாகட்டும்.. முடிவெடுக்கும் திறனாகட்டும்.. அந்த வீட்டில் மற்றவர்களோடு ஒப்பிடும்போது இவன் ஒரு படி முன்னால் நின்றான் என்று தான் சொல்ல வேண்டும்..

மகன் தன் குடும்பத்தாரால் கொண்டாடப்படுவதில் சந்திரமதிக்கு பெருமை தாள வில்லை..

"ஏன் இப்படி இழுத்தடிக்கிறீங்க மகரிஷி போனா ஒரே நாள்ல இந்த வேலையை முடிச்சிடுவான்.."

"உன் அப்பா நான் சொன்னா கேக்க மாட்டார் மகாவை விட்டு பேசச் சொல்லு..! அவன் பேச்சை தட்ட மாட்டார்..‌" தெலுங்கு உரையாடல்களோடு ஒவ்வொரு முறையும் மகரிஷியின் புகழ் பாடப்படும் போது தன் மகனின் முக்கியத்துவத்தை எண்ணி சந்திரமதி சந்தோஷத்தில் பூரித்துப் போவார்..

முதுகலை பட்டத்தோடு.. பி.எச்.டி முடித்து ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தான் மகரிஷி..!

பணிக்கு சென்று வந்த ஐந்து வருடங்களும் எந்த பிரச்சினையும் இல்லை..!

சல்லடை போட்டு சலித்து வீட்டார் அவனுக்காக தேர்வு செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான்..

அனன்யா..

அவனுக்கு ஏற்ற அழகி..

ஜோடி பொருத்தம் பிரமாதம் என்று ஊரே மெச்சி கொண்டது..

ஆடம்பர நவீன காலத்து திருமணம் போட்டோ சூட் தடபுடல் விருந்து..! என திருமண வாழ்க்கை அமர்க்களமாய் துவங்கியது..

வசதியான வீட்டு ஒற்றைப் பெண்ணான அனன்யாவிற்கு கூட்டுக் குடும்பத்தில் ஒன்றி வாழ்வதில் அத்தனை தொந்தரவுகள் இருந்த போதிலும் புது கணவனின் மயக்கம்.. அவன் வசீகரம் அழகு ஆளுமை அனைத்தும் அனன்யாவை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்தி வாய் மூடச் செய்து குடும்ப பிரச்சினைகளில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைத்திருந்தது..

திகட்ட திகட்ட தாம்பத்தியத்தை அனுபவித்து நீயின்றி நான் இல்லை என அப்படி ஒரு வாழ்க்கை..

கிட்டத்தட்ட செலிபிரிட்டிகள் போல்.. காதல் நாடகங்களை கேமராவில் பதிவு செய்து கொண்டு ரீல்களாக ரிலீஸ் செய்தாள் அவன் தர்ம பத்தினி..

இன்றைக்கு என்ன ஸ்பெஷல் என்பதைப் போல் தினம் ஒரு சுவாரசியத்துடன் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவன் வாழ்க்கையை திடீரென சுழற்றி போட்டது பெரும் சுழல் ஒன்று..!

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகு ஆபத்துதான்..

நெடுநெடு உயரமும் திடகாத்திரமான உடற்கட்டும் கம்பீரமான பேச்சும் ஆளுமையான தோரணையும் கூர்மையான பளிச்சென்ற கண்களும்.. அடர்த்தியான கேசக்கட்டும்.. ஆண்மைக்கே உரிய கட்டான மீசையும்.. வலிமையான தோள்களும் இறுகிய வயிறும்.. நரம்போடிய வலிமையான கரங்களும் நீண்ட கால்களும் என்று ஆயிரத்தில் ஒருவனாக தனித்து நிற்கும் இப்படி ஒரு ஆணழகனை கண்டு கல்லூரி பெண்கள்‌ மையல் கொள்ளாமல் போனால் தான் ஆச்சரியம்..!

அவனுக்கு திருமணமானதை பற்றியெல்லாம் இளம்பெண் முதல் பேரிளம் என்பவரை யாரும் கவலை கொள்ளவில்லை..

பார்த்து ரசிக்கவும் நட்பாக பேசவும் வரைமுறை எதுவும் தேவையில்லையே..!

எத்தனையோ திருமணமான ஹீரோக்களை இளம் பெண்கள் ரசிப்பதில்லையா என்ன..!

பாட சம்மந்தமாக சந்தேகம் கேட்கிறேன் பேர்வழி என்று அத்தனை இளம் பெண்களும் அவனை சுற்றி வட்டம் போடும்போது அங்கிருக்கும் மற்ற ஆண்களின் அடி வயிற்றிலிருந்து புகை கிளம்பும்..

ஆனால் அதிலும் ஒரு படி தாண்டி மகரிஷி மீது அதீத மோகம் கொண்டு அவனால் நிராகரிக்கப்பட்ட ஒரு கல்லூரி பெண் ஸ்வாதி வஞ்சங் கொண்டு மிகப்பெரிய சதி வலையில் அவனை சிக்க வைத்து அந்த பேராசிரியனின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விட்டாள்..!

கல்லூரி ஸ்டாப்ரூமில் எந்த நேரத்தில் அவன் தனியாக இருப்பான் என்று தெரிந்து கொண்டு குடிக்கும் தேனீரில் எதையோ கலந்து.. அவனை போதைக்குள்ளாக்கி அவளே வரம்பு மீறி.. ஆதாரங்களோடு அவன் மீது பழியை தூக்கி போட்டு குற்றவாளியாக்கி சமூகத்தின் முன்பு நிறுத்தியிருந்தாள்..

மாணவிகளை பலவந்தப்படுத்தும் சில பேராசிரியர் போர்வையிலிருக்கும் காமவெறி பிடித்த மிருகங்களை கண்ட இந்த சமூகம் அவனையும் நிர்தாச்சண்யமின்றி குற்றவாளியாகவே பார்த்தது.. சமூக வலைத்தளங்கள் முழுக்க பெண்ணின் முகம் மறைக்கப்பட்டு போட்டோக்களும் வீடியோக்களுமாக வைரலாக பரவின..

மாணவியின் செயல் தவறு என்று பெற்றோருக்கு தெரிந்த போதிலும்.. தங்கள் பெண்ணை காட்டிக் கொடுத்து ஒரு நல்லவனை காப்பாற்ற அவர்கள் தயாராக இல்லை.. ஆதாரங்கள் வலுவாகின.. மகரிஷி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்..

கரிய காட்டுக்குள் சின்ன வெளிச்சமாய் நண்பர்களை வைத்து தேநீரில் கலந்திருந்த போதை மருந்தை பற்றி வெளியே கொண்டு வர முயன்ற போது அந்தக் கல்லூரி பெண்ணான சுவாதி தற்கொலைக்கு முயன்று.. மக்களிடமிருந்து இரக்கத்தை சம்பாதித்துக் கொண்டு வழக்கை திசை திருப்பி விட்டிருந்தாள்..

அவன் நண்பர்களுக்கும் மகரிஷிக்கு உதவி செய்யக்கூடாது என்று குடும்பத்திலிருந்து நெருக்கடி..

கடைசியாய் மனைவி அனன்யாவை எப்போது பார்த்ததாக ஞாபகம்..!

"இதந்தா ஏமிதி ரிஷி.. ஏமி‌ ஜருகுதுந்தி.."

(என்ன ரிஷி.. என்ன நடக்குது?)

"நீ இவ்வளவு மோசமானவனா..!"

"செக்ஸ்ல நீ அப்நார்மல் இன்டெரெஸ்ட்டோட இருந்ததுல.. உனக்கு என் மேல ரொம்ப ஆசை பிரியம்ன்னு நெனச்சேன்.. ஆனா இப்பதான் தெரியுது நீ ஒரு வெறி புடிச்ச காமுகன்னு..! நீ சுதந்திரமா தப்பு செய்யத்தான் என்னை இவ்வளவு பெரிய குடும்பத்தில் கொண்டு வந்து அடைச்சு வச்சிருந்தியா..! அப்பதானே நான் இவங்களோட பிஸியா இருப்பேன்.. எனக்கு எந்த வகையிலும் மேல சந்தேகம் வராது.. அப்படித்தானே ரிஷி..?"

மனைவியின் கொடும் விஷ வார்த்தைகளால் உடைந்து போனான் மகரிஷி.. இத்தனை நாட்களாக என் உலகமே நீதான் என்று கொஞ்சி குலவிய மனைவியே அவனை நம்பவில்லை.. உயிருக்கு உயிரான தாம்பத்திய பந்தத்தையும் புரிந்து கொள்ளவில்லை..!

"நுவ்வு இன்டக அனுமான்டோ மாட்லாடுன்னா தருவாத்தா நீக்கு இ விவரமா‌ செப்பினா உபயோகம் லேது."

(நீ இவ்வளவு சந்தேகப்பட்டு பேசின பிறகு உனக்கு விளக்கம் சொல்லி எந்த பயனும் இல்ல)

உணர்வில்லாத குரலில் சொன்னவனை ஆக்ரோஷமாக முறைத்தவள்..‌

"இனி உன் கூட வாழ நான் தயாரா இல்லை.. விவாகரத்து நோட்டீஸ் உன்னை தேடி வரும்..!" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்று விட்டாள்..

கணவனுக்கு ஒரு பிரச்சனை என்றதும்.. பக்கத்துணையாக நிற்க விரும்பாமல்.. நம்பிக்கையற்று ஊராரோடு சேர்ந்து அவனை குற்றம் சாட்டிவிட்டு நழுவிக் கொள்ளும் இவளையா உயிருக்குயிராக நேசித்தேன்..

வெட்கிப் போனான் மகரிஷி..

ராஜா ராஜகுமாரா என்று அவனை தூக்கி வைத்துக் கொண்டாடிய குடும்பமும் கைவிட்ட நிலையில் அவன் நம்பிக்கையில் அடுத்த அடி..

தாய் சந்திரா சிறைக்கு வந்து..
"வல்லோ எவரோ நின்னு நம்பலேதுரா.." (அவங்க யாருமே உன்னை நம்பலையே!)

என்று சிறைக்கம்பியில் முட்டிக்கொண்டு ஓவென்று கதறினாள்..

அருவியின் நீர்வீழ்ச்சி போல் அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென இப்படி ஒரு பெரும் புயலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏன் என்று புரியவில்லை..

அதிக சேதாரத்தில் இறுகிப் போயிருந்தான் மகரிஷி..

இறுதியில் அவன் பெரியப்பா வெங்கட ராஜூதான் மகரிஷியை ஜாமீனில் எடுத்தார்..

"மா குடும்ப மானம் போகுடதன்னி நீக்கு ஜாமீன்லோ தீஸ்கோன்னம்.. அன்ட்லோ தப்ப ஏ குடும்பநிக்கி நீக்கு ஏமி சம்பந்தம் லேது.."

(நம்ம குடும்ப மானத்துக்காகதான் உன்னை ஜாமின்ல எடுத்தேன்.. மற்றபடி இந்த குடும்பத்துக்கும் உனக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை..)

"தயவு செஞ்சு வீட்டை விட்டு வெளியே போயிடு.. எங்க வீட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வளரணும்னு நினைக்கறோம்.."

"நீ இவ்வளவு கேவலமானவன்னு நினைச்சு கூட பாக்கலையே ரிஷி..!"

"அப்போ நம்ம வீட்டு பெண்களையும் இப்படித்தான் வக்கிரமா பாத்தியா..! ச்சீ இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு இந்த கையால சோறு போட்டு உன்னை தூக்கி வைச்சு கொண்டாடி இருக்கோம்ன்னு நினைக்கும் போது என் உடம்பெல்லாம் கூசுது..!

எத்தனை பேச்சுக்கள்..

சின்னதும் பெரியதுமாய் பத்தும் பனிரென்டும் வயதுமான பெண் பிள்ளைகள் கூட அவனருகில் வர பயந்து ஓரமாய் நின்று கொண்டிருந்தன..
எல்லாம் பெரியவர்களின் போதிப்பு..

"போதும்.. ஒரு மனுஷனுக்கு பிரச்சனை வரும்போது அவன் குடும்பம் தான் உறுதுணையா நிக்கணும்.. ஆனா நீங்க எல்லாரும் என் பிள்ளைய கைவிட்டுட்டீங்க..! யார் என்ன சொன்னாலும் சரி.. என் மகன் ரொம்ப நல்லவன்.. ஒழுக்கமானவன்.. இனி இந்த வீட்ல நாங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டோம்..!" என்று சுக்குநூறாக உடைந்து தலைத் தாழ்ந்து நின்றிருந்த மகனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள் சந்திரா..

அவன் தந்தை உழைத்து சம்பாதித்து வாங்கி போட்ட வீடு காக்கி நாடாவில் இருக்கிறது.. தோட்டம் துறவு என சொத்தும் இருக்கிறது.. அதுவுமில்லாமல் அவனும் போதிய அளவு சம்பாதித்து வைத்திருக்கிறான்.. இரண்டு தலைமுறைக்கு வேலைக்கு போகாமல் உட்கார்ந்து சாப்பிடக் கூடிய அளவு கையிருப்பு உண்டு..

கும்பல் கும்பலாக நின்று கொண்டு அவனை நோக்கி பாயும் போன் கேமராக்களும்.. அவதூறு பேச்சுக்களும்.. கேலியும் கிண்டலும்.. கெட்ட வார்த்தைகளும் அவன் தலையை வெடிக்க செய்கிறது..

வெளியில் எங்கும் போவதில்லை..

உறவுகளின் ஒதுக்கம்.. விவாகரத்து செய்துவிட்டு வேறு கணவனை தேடிக்கொண்ட மனைவியின் துரோகம்.. சமூகத்தின் அவதூறு பேச்சு.. உண்மையை நிரூபிக்க முடியாத இயலாமை..!

கூட்டுப் புழுவாய் தனக்குள் சுருண்டு கொண்டான் ரிஷி..

எத்தனை பேரை அடிக்க முடியும்.. எத்தனை பேரிடம் உண்மையை நிரூபிக்க முடியும்.. எத்தனை மீடியாக்களுக்கு தன் தரப்பு நியாயத்தை விளக்க முடியும்..!

பெண்களின் பாதுகாப்புக்காக எழுதப்பட்ட சட்டங்கள் சில நேரங்களில் மகரிஷி போன்ற நல்ல ஆண்களுக்கு எமனாகி விடுகின்றன..!

கெட்ட பெயரோடு பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டான் மகரிஷி..

பாக்க அழகா இருக்கான்.. ஆனா குணம் சாக்கடை.. ச்சீ..

உலகமே அவனை நோக்கி கைகாட்டி தூற்றி இழிவு படுத்திய இந்த நேரத்தில் ஒற்றைத் துணையாய் ஆறுதலாய் மடியில் தாங்கிக் கொண்டவள் அவன் தாய் சந்திரா..

"எல்லாம் ஒரு நாள் சரியாகிபோகும் ரிஷி.. நிச்சயமா உன் வாழ்க்கை மாறும்.. வசந்தம் வரும்.. நம்புடா ராஜா..!"

அவன் தலையை தடவி கொடுத்தபடி குழந்தைக்கு கதை சொல்வதைப் போல் நிலவை பார்த்தபடி சின்ன புன்னகையோடு சொல்லுவாள்..

தன்னை ஆறுதல் படுத்தும் தாயின் ஏமாற்று வித்தையாக தோன்றும் அவனுக்கு..

எல்லா விதத்திலும் சரியாக இருந்தும் சமுதாயத்தின் முன்பு கருமைப்படர்ந்த ஒரு அழுக்கு மனிதனாக.. வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து குற்றம் சாட்டப்பட்டு கல்லடி படுவதை ஜீரணிக்கவே முடியவில்லை அவனால்..!

யாராவது ஒருத்தராவது என்னை நம்பறீங்களா.. நான் அப்படிப்பட்டவன் இல்லைன்னு எனக்காக யாராவது பேசுவீங்களா..!

சமூக வலைதளங்களிலும் தன்னை சுற்றி நிற்கும் மக்களின் நடுவிலும்.. தன் மீது நம்பிக்கை கொண்ட அந்த ஒற்றை ஜீவனை தேடி தேடி பார்க்கிறான்..

இதுவரை கிடைக்கவில்லை..

ஐந்து வருடங்களாய் அந்த பெரிய வீட்டுக்குள் மட்டுமே வாசம்..‌ வெளி உலகத்தை அறவே வெறுத்தான் ரிஷி..

மகனின் வாழ்க்கை இப்படி நான்கு சுவற்றுக்குள்ளே முடிந்து விடுமோ என்ற பயந்த சந்திரா

"நமக்கு இந்த ஊரே வேண்டாம் ரிஷி.. கண் காணாத இடத்துக்கு போயிடலாம்..! புது வாழ்க்கையை தொடங்கலாம்.." என்று கூற

மகரிஷிக்கும் அதுவே சரியென்று தோன்றியது..

சென்னையில் தனக்குத் தெரிந்த ஒரு நண்பன் மூலம் ஒரு ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கி போட்டு தாயை அழைத்துக் கொண்டு வந்து விட்டான்..

ஒரு தனியார் ஆண்கள் பள்ளியில் ஆசிரியனாக பணிபுரிகிறான்..!

தமிழ்நாட்டிலும் அவன் முகம் பலருக்கு தெரிந்திருக்கிறது..

எங்க போனாலும் எதிர்ப்பு வெறுப்பு..

மாணவர்களிடம் கூட இயல்பாக பழக முடியாமல் இறுகி போயிருந்தான்..

பள்ளி வேலை முடிந்து காரில் திரும்பி வந்து கொண்டிருந்த வழியில்.. திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை நோக்கி சென்று கொண்டிருந்த சின்னஞ்சிறு நாய்க்குட்டியை கண்டதும் அவனுக்குள் ஏதோ ஒரு துடிப்பு..

காரை ஓரமாக நிறுத்திவிட்டு கதவை திறந்து கொண்டு ஓடி சென்று அந்த குட்டியை கையில் தூக்கி கொண்டான்..

அவன் பெரிய இரு கரங்களுக்குள் அடைக்கலமான பின்பும் நடுங்கிக் கொண்டிருந்தது அந்த நாய்க்குட்டி..

அங்கேயே விட்டுச் செல்ல மனமில்லாமல் வீட்டுக்கு தூக்கி வந்திருந்தான்..

"ஏமிரா குக்கபிள்ளைன்னு இன்டிக்கு என்துக்கு தெஸ்துன்னாவு.."

(என்னடா நாய்க்குட்டி எல்லாம் வீட்டுக்கு தூக்கிட்டு வர்றே)

"நம்மள போல இவனுக்கும் யாருமே இல்லைம்மா விட்டா செத்துடுவான் போலிருக்கு.. நம்ம கூடவே இருந்துட்டு போகட்டும்..' என்று கீழே விட்டு ஒரு தட்டில் கொஞ்சமாய் பாலை ஊற்றி வைத்தான்..

நான்கு நாட்கள் தள்ளி நின்று எரிச்சலாய் பார்த்த சந்திரா ஐந்தாவது நாள் நாய் குட்டியை மடியில் தூக்கி வைத்து கொஞ்ச ஆரம்பித்து விட்டாள்.. மோத்தி என்ற பெயரையும் அவள் தான் சூட்டினாள்..

இரண்டு வருடங்கள் கூட முடிந்திராத நிலையில் இடி விழுந்த வீட்டில் பூச்செடிகள் தளிராய் முளைப்பது போல் கொஞ்சமாய் நிம்மதி மீண்டு வந்து கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் ஒரு பேரிடி..

இரவில் படுக்கைக்கு சென்ற சந்திரா அடுத்த நாள் எழுந்திருக்கவே இல்லை..!

உலகமே இருண்டு போனது.. கண்களில் கண்ணீர் கூட வரவில்லை.. பாறையாக விரைத்து போனான்..‌ அன்னையை தாண்டி அவன் வாழ்க்கையில் அனுபவிக்க எதுவுமே இல்லை..‌

பேருக்காக தன் தாய்க்காக வாழ்ந்து கொண்டிருந்தான். இனி அதுவும் தேவையில்லை..

ஒரு ஆசிரியர் அவன்..

தற்கொலை செய்துகொண்டு மாணவர்களுக்கு தப்பான உதாரணமாகி விடக்கூடாது..

ஆனாலும்.. உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரியாத இப்படிப்பட்ட ஜனங்களின் நடுவே வாழவே பிடிக்கவில்லை..

உலகத்தின் மீது விரக்தி.. மக்கள் மீது வெறுப்பு.. கண்டபடி அடுத்தவர்களை தூற்றிவிட்டு சந்தோஷமாக சிரித்து வாழுபவர்களை பார்த்தாலே வயிறு எரிகிறது..

தாரம் உதறித்தள்ளி சென்றாள்..

தாய் உலகை விட்டு சென்றாள்,

குடும்பமாக மகிழ்ச்சியாக வலம் வரும் மக்களை பார்த்தால் மனம் கனக்கிறது..

காலை சுற்றி வந்த மோத்தியை தூக்கி முத்தமிட்டு..

"நீக்கோசம் எவரோ வஸ்தாவு.. டோன்ட் வரி" (உனக்காக யாராவது வருவாங்க. கவலை படாதே) என்று சொல்லிவிட்டு

பக்கத்து அறைக்குள் விட்டு கதவை சாத்தியவன்..

மீண்டும் மேஜையில் வந்து அமர்ந்து மோத்தி குரைப்பதையும் கதவை சுரண்டுவதையும் பொருட்படுத்தாமல் கையில் மாத்திரைகளை அள்ளி வாய்க்குள் போட்டு மொத்தமாய் விழுங்கியிருந்தான்..

தொடரும்..
Startingae செம்ம.... Sisy... Rishi en ippadi முடிவு எடுக்கணும்....
அது தான் அவங்க அம்மா விரும்புணதா.... இதை யோசிப்பானா.....😔😔😔😔😔
 
Top