சந்திரா உனக்காக மலையைக் கூட புரட்டிப் போட்டுடுவா உங்க அம்மா...வட்டிக்காரன் வீட்டு வாசலில் நின்று அவமானப்படுத்தி சென்றதை காட்டிலும் பெருங்கவலை ஒன்று அருந்ததியை சிதைத்துக் கொண்டிருக்கிறது
இத்தனை பெரிய விஷயம் நடந்திருக்கிறது.. அந்நியன் ஒருவன் காது கூசுமளவிற்கு கேவலமான வார்த்தைகளால் அருந்ததியை குத்தி கிழித்திருக்கிறான்.. யாரோ ஒருவன் பெருந்தன்மையோடு பணம் தந்து உதவி செய்திருக்கிறான் ஆனால் பெற்ற மகள் இதைப் பற்றி கடுகளவும் கவலைப்படவில்லை..
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே..! கண்களில் நீர் நிறைந்து திக்கு திசை தெரியாமல் நிற்கும் என்னை பார்த்து ஒரு சிறு கலக்கம் கூட இவள் மனதில் தோன்றவில்லையா..!
எந்த நிலையிலும் இந்த மாபாதகனின் கண்களில் என் மகள் பட்டுவிடக்கூடாது என்று உயிரை கொடுத்து போராடிக் கொண்டிருக்கிறேன்..
எனக்காக வெளியே வந்து போராட வேண்டாம் நியாயம் கேட்க வேண்டாம் அதற்கான வயதும் பக்குவமும் இல்லைதான்..!
இந்தப் போராட்ட வாழ்க்கையில் உயிரை உனக்காக சுமந்து கொண்டிருக்கும் என் அன்னைக்காக ஒரு துளி வருத்தம்..? ஒரு சொட்டு கண்ணீர்..? அம்மா அழாதீங்க எல்லாம் சரியாயிடும்.. நான் படிச்சு உங்களை காப்பாத்துவேன்..! ஒரு அணைப்பும் நான்கு வார்த்தைகளும்..? இதற்கு கூட தகுதி இல்லாதவளாகி போய் விட்டேனா..?
என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சந்திரமதி ஒன்றும் கை குழந்தையில்லையே..! எதுவுமே நடக்காதது போல் சிரித்துக் கொண்டே விடைபெற்று சென்ற அந்த கோலம் தான் அருந்ததிய உறுத்துகிறது..
தன் வறுமையும் வருத்தங்களும் பெற்ற மகளுக்கு தெரிய வேண்டாம் அவளாவது சந்தோஷமாக இருந்து விட்டு போகட்டுமென்று நினைப்பவள் அருந்ததி..! ஆயினும் தனக்கொரு கஷ்டம் வரும்போது தன் உதிரத்தில் பிறந்த மகளை விடுத்து வேறு யாரிடம் ஆறுதல் தேடிக் கொள்ள முடியும்..!
சந்திரமதி மட்டும் கொஞ்சம் அனுசாரனையாங இருந்திருந்தால் பக்கத்தில் வந்து தோள் தொட்டு ஒரு பார்வை பார்த்திருந்தால் இந்நேரம் அவளை கட்டியணைத்து ஓவென்று கதறி தீர்த்திருப்பாள்..!
தாயிடம் ஒட்டுதல் இல்லாத மகளின் புறக்கணிப்பில் அந்த சிறு வாய்ப்பு கூட கிடைக்கப் பெறாத துரதிஷ்டசாலியாகி போனாள் அருந்ததி..
தன்னந்தனிமையில் கைவிடப்பட்ட நிலையில் நின்றவளின் காலை சுரண்டினான் மோத்தி..!
கீழே குனிந்து பார்த்தவள் மனம் நிறைந்த விரக்தியுடன்.. "உனக்கு என்ன வேணும்..! இதுக்கு மேல உயிரை தவிர என்கிட்ட கொடுக்கறதுக்கு எதுவும் இல்ல இங்கிருந்து போ..!" தன் ஆற்றாமையை உள்ளுக்குள் கீறல் விட்டு சிதறி தெளித்த ஆதங்கத்தை ஒன்றுமறியாத அந்த வாயில்லா ஜீவனிடம் காட்டிவிட்டு உள்ளே சென்று வேலைக்கு புறப்பட தயாரானாள் அவள்..!
எடுத்துக் கொண்ட காலக்கெடு முடிய இரண்டு நாட்களே இருந்த நிலையில் தெரு தெருவாய் சென்று தேடித் திரியாமலேயே வாடகைக்கு வீடு கிடைத்து விட்டது..!
இந்த முறை அறிந்தவர் தெரிந்தவர் அனைவரின் காதுகளிலும் வாடகைக்கு வீடு வேண்டும் என்ற விஷயத்தை போட்டு வைத்திருந்தாள்.. மளிகை கடை.. அண்ணாச்சி பால்காரர்.. இட்லி வாங்க வரும் சில பெண்கள்.. அந்த வழியாக செல்லும்போது ஒரு பாழடைந்த கட்டிடத்தை பாதுகாக்கும் செக்யூரிட்டி என்று யாரையும் விட்டு வைக்கவில்லை..!
அத்தனை பேரிடம் சொல்லி வைத்த பிறகு.. மளிகை கடைக்காரர்தான் வீடு வாடகைக்கு இருப்பதாகச் சொல்லி ஒரு போன் நம்பரை துண்டு சீட்டில் எழுதி தந்தார்..
வீடு பார்ப்பதற்காக எண்ணிக்கையில் ஒரு ஆர்டரை தியாகம் செய்து.. இழக்கப் போகும் தன் இன்சென்ட்டிவ் தொகையில் சமரசம் செய்து கொண்டு வீட்டு ஓனர் சொன்ன முகவரிக்கு விரைந்து சென்றாள்..
அக்கம் பக்கத்தில் ஜன நெரிசலுடன் நிறைய வீடுகள்.. போகும்போது வரும்போது அவளை ஆராய்வதற்காகவே ஒரு கூட்டம் குழந்தைகளுக்கு தலை வாறுவதும்.. சில பெண்கள் வாசலில் அமர்ந்து காய்கறி நறுக்குவதும்.. வேறு சிலர் குழாயில் தண்ணீர் பிடிப்பதுமாக நடமாடும் சிசிடிவி கேமராக்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.. நான்கு வீட்டுக்கு ஒரு பொது கழிப்பறை.. பொது குளியல் அறை..! கார்ப்பரேஷன் குழாய்.. இதை தவிர்த்து அந்த வீடுகளுக்காக போர் போட்டு வாட்டர் கனெக்ஷன் எடுத்திருக்கும் குழாய் இரண்டு உள்ளது.. தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம் ஆனால் அதிகமாக தண்ணீர் செலவழித்தல் கூடாது.. தண்ணீருக்கு மாதம் 100 வாடகை 4000.. முன்பணம் 20000..
இப்போது குடியிருக்கும் வீட்டோடு இந்த வீட்டை ஒப்பிட்டால் நிச்சயமாக மனதில் திருப்தி என்பதே வராது.. ஆனால் இரண்டு பேர் கொண்ட தன் குடும்பத்திற்கும் தன் வருமானத்திற்கும் இந்த வீடு போதும் என்று மனதுக்குள் சமாதானம் செய்து கொள்ள வேண்டிய நிலை.. இதையும் கோட்டை விட்டால் பாதுகாப்பாக வேறு வீடு கிடைப்பது குதிரைகொம்புதான்..! மறுபடியும் தெருத்தெருவாக சுற்றி வீடு தேட உடம்பில் தெம்பில்லை.. வீட்டு உரிமையாளர் தன் உதவாக்கரை கணவனை பற்றி பெரிதாக கேள்வி எழுப்பி நச்சரிக்காமல் போனது இன்னொரு ஆறுதலளிக்கக் கூடிய விஷயம்..
வீடு பிடித்திருக்கிறது நல்ல நாளாக பார்த்து குடி வருகிறோம் என்று வீட்டு உரிமையாளரிடம் 200 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் வந்துவிட்டு மீதி பணத்தை 15 நாட்களில் மொத்தமாக தருவதாக வாக்கு தந்து விட்டு வெளியே வந்தாள்..
எப்படி அட்வான்ஸ் தொகையை தரப் போகிறாய் அருந்ததி.. வட்டி கட்டவே காசில்லாமல் அவமானப்பட்டதெல்லாம் மறந்து போனதா..! கடனுக்கு மேல் கடனா..! அவளுக்குள் எச்சரிக்கை மணி..
குழந்தை பிராயத்தில் சந்திரமதிக்காக வாங்கிய அரை பவுன் செயின் இன்னும் விட்டு பிரிய மனமில்லாமல் மிச்சமிருக்கிறதே.. அதை அடக்க வைத்துக் கொள்ளலாம்..!
இத்தனை நாட்களாக தங்கமென சொல்லிக் கொள்ள வீட்டில் நூலிழைப் போல் சின்னதாக ஒரு செயின் இருந்தது.. அதையும் கொண்டு போய் அடைக்கு கடையில் தாரை வார்க்க வேணுமா..! சந்திரமதிக்காக நீ ஆசையாக வாங்கியதில்லையா..?
சந்திரமதிதான் நெற்குதிராக வளர்ந்து நிற்கிறாளே..! பாதி கழுத்து வரை கூட சுற்றிக் கொள்ளாத அந்த மெல்லிய செயினை மாற்றிவிட்டு இனி புதுசுதான் வாங்க வேண்டும்.. இரண்டு பவுனுக்கு குறையாமல் கொஞ்சமேனும் தடிமனாக இழைத்து போட்டால் தானே நகையென ஒன்று கழுத்தில் இருப்பது தெரியும்..
ஆசை நிறையவே இருக்கிறது பணம் எங்கிருக்கிறது.. போகட்டும் பணம் வரும்போது மீட்டுக் கொள்ளலாம்.. அவசரத்திற்கு அடகு வைக்கத்தானே தங்க நகை..
ஏகப்பட்ட யோசனைகளோடு வீடு வந்து சேர்ந்திருந்தவள் சந்திரமதி வந்ததும் அவளையும் அழைத்துப் போய் புது வீட்டை காட்டினாள்..
சந்திரமதியின் முக சுழிப்பை கண்டதுமே அவள் மனம் புரிந்து போயிற்று..
வீட்டுக்கு வந்ததும் இதைப் பற்றி பேசினாள்..
"வீடு பிடிக்கலையா மதி..!"
"சுத்தமா பிடிக்கல.." என்றதும் முகம் கருத்து போனாள் அருந்ததி..
"சரி கொஞ்ச நாள் அங்க இருப்போம்.. அப்புறம் உனக்கு பிடிச்ச மாதிரி வேற வீடு பார்த்துட்டு போயிடலாம்.."
"ஏன் இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்..?"
"எதுவுமே தெரியாத மாதிரி பேசாத சந்திரமதி.. இந்த வீட்டை காலி பண்ணி வெளியே போக சொல்லி பல மாசமாச்சு..! இதுக்கப்புறமும் நாம இங்கிருந்து போகலனா ஹவுஸ் ஓனரே வீட்டுக்கு வந்து கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுவாரு.."
"ஏன் ஹவுஸ் ஓனர் கிட்ட கேக்கணும்.. நல்ல வீடு கிடைக்கிற வரைக்கும் கொஞ்ச நாள் இங்கேயே இருக்கிறதுக்கு ரிஷிகிட்ட பர்மிஷன் கேப்போம்.."
"அப்படியெல்லாம் அவங்க ஒத்துக்க மாட்டாங்க..! ஏற்கனவே அவர் தந்த ஒருவாரம் டைம் நாளையோட முடியுது.. இதுக்கு மேல அவர்கிட்ட போய் நிக்கறது அசிங்கம்..
"நீ கேட்க வேண்டாம்.. நான் பேசுறேன்.. நான் சொன்னா ரிஷி அங்கிள் கேட்பாங்க..!'
"அப்படியெல்லாம் இங்க இருக்க முடியாது மதி..!"
"ஏன் இருக்க முடியாது..?"
தலையில் கை வைத்துக் கொண்டு துணி மூட்டையின் மீது பொத்தென அமர்ந்தாள் அருந்ததி..
"முன்ன பின்ன தெரியாத ஒரு ஆம்பளையோட ஒரே வீட்ல சேர்ந்திருந்தா இந்த ஊர் நம்மள தப்பா பேசும்.."
"இவ்வளவு நாள் அப்படித்தான இருந்தோம்.. அப்ப மட்டும் தப்பா பேசலையா..?"
"இவ்வளவு நாள் வேற வழியில்லாமல் இருந்தோம் இப்பதான் புது வீடு கிடைச்சிருச்சே..!"
"ஐயோ அந்த வீடு கொஞ்சம் கூட நல்லாவே இல்ல.. அங்க இருக்குற ஆளுங்க யாரையுமே எனக்கு பிடிக்கல.. நான் இங்கேயே இருந்துக்கறேன். நீ வேணும்னா அந்த வீட்டுக்கு போ.."
"அடிச்சு பல்லையெல்லாம் கழட்டிடுவேன்.. என்னடி பேச்சு இது..! யார் உனக்கு இப்படியெல்லாம் பேச சொல்லிக் குடுக்கறது.. இந்த வாயாடற வேலையெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்க.. உன் இஷ்டத்துக்கு சொகுசா வாழற அளவுக்கு உன் அப்பனும் பாட்டனும் பெருசா வீடு கட்டி வச்சுட்டு போகல.. இங்க நமக்கு உழைச்சா தான் சோறு அதை முதல்ல ஞாபகம் வச்சுக்கோ.. பெரிய எலிசபெத் மகாராணி மாதிரியே பேசிட்டு இருக்காத.. குடும்ப சூழ்நிலை புரிஞ்சி நடந்துக்க.." அருந்ததி கொதித்து சிதறினாள்..
"ஆமா நான் மட்டும் எதுவும் பேசக்கூடாது.. எதுவும் சொல்லக்கூடாது ஆனா நீ மட்டும் உன் இஷ்டத்துக்கு என்ன வேணா செய்வ..!"
"இப்ப நான் என்னடி செஞ்சுட்டேன்..!"
"எதுக்காக என் அப்பா கிட்ட இருந்து என்னை பிரிச்சு கூட்டிட்டு வந்த..! உன்னால தான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன்.. எங்க கிளாஸ்ல எல்லாருக்கும் அம்மா அப்பா இரண்டு பேரும் இருக்காங்க.. இது எங்க அப்பா இது எங்க அம்மானு என் பிரெண்ட்ஸ் எல்லாரும் பெருமையா அறிமுகப்படுத்தி வைக்கும் போது நான் மட்டும் உன்னை கூட்டிட்டு போய் அவங்க முன்னாடி நிறுத்த முடியுமா..! அப்படியே உன்னைத்தான் அம்மான்னு அறிமுகப்படுத்தினாலும் என் பிரண்ட்ஸ் எல்லாம் உன்னை பார்த்து பயங்கரமா சிரிக்கிறாங்க.. எனக்கு எவ்வளவு அசிங்கமா இருக்கு தெரியுமா..!" விசித்து அழுதாள் மதி..
"எ.. என்ன மதி.. ஏன் இப்படி பேசுற அம்மா உனக்காக தானே இப்படி.. இப்படி.. என்றவள் உதட்டை கடித்து ஒரு கணம் நிதானித்தாள்..
"உழைச்சு உழைச்சு இப்படி ஆகிட்டேன்.. கண்ணாடியில என் முகத்தை பாத்து ரொம்ப நாளாச்சு. என்ன பத்தி எப்பவுமே நான் கவலைப்பட்டது இல்லடி..! உனக்காக தான் அம்மா வாழ்ந்திட்டு இருக்கேன்.."
"இப்படி சொல்லி என்னை ஏமாத்த பாக்காத.. எனக்காக வாழறேன் என்னை படிக்க வைக்கிறதுக்காக உழைக்கிறேன்னு சொல்லிட்டு ஏன் என்னை இங்கிலீஷ் மீடியத்திலிருந்து கொண்டு போய் கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்த.. ஏன்தான் உனக்கு வந்து பொண்ணா பொறந்தேனோ..! உன்னால எல்லாம் நாசமா போச்சு.. நல்ல ஸ்கூல் இல்ல.. நல்லா சாப்பாடு இல்ல.. நல்ல துணிமணி இல்ல நல்ல.. ஸ்கூல் பேக் இல்ல..! இதுல இவங்க அம்மா ஒரு இட்லி கார ஆயான்னு பசங்க எல்லாரும் கிண்டல் பண்ற அளவுக்கு அவமானப்படுத்தி வச்சுட்ட..! என்னால சரியா படிப்புல ஃபோக்கஸ் பண்ண முடியாம போனதுக்கு காரணம் நீதான்..! பேசாம என்னை கொண்டு போய் அப்பா கிட்ட விட்டுடு.. நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன்.. நீ எங்க வேணாலும் போ அது உன்னோட இஷ்டம். என்னையும் அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போய் கஷ்டப்படுத்தணும்னு நினைக்காத..!" அழுகையும் கோபமுமாய் சின்னவள் சொல்லிவிட்டு வெளியே சென்று அமர்ந்து கொள்ள கருவிழிகள் உருள தரையை பார்த்தபடியே சிலையாக அமர்ந்திருந்தாள் அருந்ததி..
அழுகை பொங்கியது..! யாருக்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு போராட்டத்தின் நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ அந்த ஜீவனும் அவளை புரிந்து கொள்ளாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காயப் படுத்துகிறதே..! இனி எதுக்காக வாழனும்"
என்னோடு இருக்கவே அவமானமாக இருக்கிறதா..? மகள் சொன்னதை எண்ணி பார்த்தவளுக்கு இருதயத்தில் இரத்தம் வடிந்தது..
இரவு உணவை சமைக்கும் மன நிலையில் இல்லை அவள்.. செய்யத்தான் வேண்டும் என்று பித்தான தாய்மை உணர்வு கட்டியிழுக்க.. கைக்கு வந்ததை சமைத்து வைத்துவிட்டு வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்து முடித்து படுக்கையை விரித்து ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள்..
சந்திரமதி படித்தாளா எழுதினாளா.. சமைத்து வைத்த உணவை உண்டாளா எதையும் உணரவில்லை..
தன் மனதை அடித்து நொறுக்கி விட்டு எந்த கவலையும் இல்லாமல் உறங்கிப் போயிருந்த மகளை திரும்பிப் பார்க்கவும் மனமில்லாமல் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த கொதிப்போடு அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு உதடு துடிக்க அமர்ந்திருந்தாள்
கதவை திறந்து வெளியே வந்தான் ரிஷி..
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.."
அவள் மூளையில் எதுவும் உரைக்கவில்லை.. அதே நிலையில் அப்படியே அமர்ந்திருந்தாள்..
"அருந்ததி..!" அழுத்தமான கணீர் குரல்..
விழிகள் மட்டும் அவனை நிமிர்ந்து பார்த்தன..
"ஒரு நிமிஷம்" என்றவனை எழுந்து வந்து இடை மறித்தாள் அருந்ததி..
"இங்க பாருங்க சார்.. நீங்க காலையில பணம் கொடுத்து உதவினதுக்கு ரொம்ப நன்றி.. ஆனா அதை மனசுல வச்சுக்கிட்டு ஏதாவது ஏடாகூடமா பேசி என்னை காயப்படுத்திடாதீங்க ஏற்கனவே நான் ரொம்ப நொந்து போயிருக்கேன்.. வலிக்க வலிக்க திரும்ப விழற அடியை தாங்கற அளவுக்கு உடம்புலயும் மனசுலயும் தெம்பு இல்ல.. கண்டிப்பா வீட்டை காலி பண்ணிடுவேன்.. உங்க பணத்தையும் திரும்பி கொடுத்துடுவேன்.. தயவுசெஞ்சு கொஞ்சம் அமைதியா உள்ள போங்க சார்.." கையெடுத்து கும்பிட்டாள் அருந்ததி..
முன்கை கட்டி அவள் அழுகையும் வேதனையுமாக சொன்னதை கண்கள் குறுக்கி பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன்..
"குடுத்த பணத்தை திருப்பி கேட்கவோ.. இல்ல உங்களை வீட்டை விட்டு காலி பண்ண சொல்லவோ நான் இப்ப வரல.. நடந்ததையெல்லாம் நானும் பார்த்துட்டு தான் இருந்தேன்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. உள்ள வாங்க.." என்றவனை யோசனையோடு வித்தியாசமாக பார்த்தாள் அருந்ததி..
"கவலைப்படாதீங்க.. காலையில பணத்தை கொடுத்துட்டு ராத்திரி அதுக்கேத்த சலுகைகளை எதிர்பார்க்கற கேவலமான ஆள் நான் இல்ல.. நானும் ஒழுக்கமானவன் தான்..! இந்த நேரத்துல வெளியே உட்கார்ந்து பேச முடியாது.. காலையில பேச எனக்கு டைம் இருக்காது.. உள்ள வாங்க.. உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.." அவன் இவ்வளாவு தூரம் வலியுறுத்தவும் அருந்ததியால் மறுக்க முடியவில்லை..
மகரிஷி அறைக்குள் செல்ல அவனைத் தொடர்ந்து அருந்ததியும் உள்ளே நுழைந்தாள்.. மோத்தி கட்டிலின் கீழே ஒரு மூலையில் படுத்து முரட்டு தூக்கம்..
அவன் அறைக்குள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.. உட்காருங்க என்று மேஜையின் பக்கத்திலிருந்து இருக்கையை காண்பித்தான்..
அருந்ததி நின்று கொண்டே இருந்தாள்..
எதிர் வீட்டில் பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு உணவு மிச்சங்களை வெளியில் கொட்டி விட்டு செல்ல வந்த கனகா அருந்ததியின் வீட்டின் ஒரு அறையில் விளக்கு எரிவதையும் அங்கு மகரிஷியும் அருந்ததியும் தனித்து நிற்பதையும் சற்று தொலைவிலிருந்து ஜன்னல் வழி தெளிவாக கண்டுகொண்டு கண்கள் சுருக்கி உன்னிப்பாக பார்த்தாள்..
அருந்ததி தயக்கத்தோடு வந்து இருக்கையில் அமர.. கனகா மிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த ஜன்னல் திரையை மூடிக் கதவை சாத்திக் கொண்டான் மகரிஷி..
"அட நாசமா போனவளே.. கடைசில நீயும் இப்படித்தானா.. நல்லா தானடி இருந்த.. பணத்தாசை உன்னையும் விட்டு வைக்கலையா.. பணம் கிடைச்சா போதும் எந்த எல்லைக்கும் கீழே இறங்கி சோரம் போயிடுறாளுங்க..! த்தூ.. இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்.." கனகா தனக்குள் புலம்பி கொண்டிருக்க..
"என்னடி ஆச்சு நட்ட நடு ராத்திரியில தனியா நின்னு பேய் கூட பேசிட்டு இருக்க.." கைலியை மடித்து கட்டிக்கொண்டு வெளியே வந்தான் அவள் கணவன்..
கண்ணால் பார்த்த விஷயத்தை ஒரு பங்கு அரிசியோடு பத்து பங்கு மசாலாவை சேர்த்து சுவாரசிய சுவையோடு சொல்லிக்கொண்டே கணவனோடு வீட்டுக்குள் போனாள் அந்த கனகா..
தொடரும்..
ஆனால் உன்னை வைத்து அவளால் ஊறுகாய் கூட போட முடியாது 😡
உன்னால் தாங்க முடியாத கெட்ட பெயரை வாங்கி நிற்கிறாள்....
தற்போதைய சூழல் மயக்கம்....