"வேற யாராவது பேஷண்ட்ஸ் இருக்காங்களா மாலினி..!"
"இல்ல சார் யாருமில்லை..!"
மாலினியின் பதிலைத் தொடர்ந்து இன்டர்காமை துண்டித்து விட்டு மணியை பார்த்தான்..
கடிகாரமுள்ள நான்கை தொட்டிருக்க.. தேம்பாவணியை பார்க்க வேண்டுமே..! என்ற அலுப்போடு சோம்பல் முறித்தான் வருண்..!
இது போன்ற கமிட்மென்ட்களுக்கு பயந்துதான் திருமணமே செய்து கொள்ளவில்லை..! ஒரு பெண்ணின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளை கூட தன்னால் பூர்த்தி செய்ய இயலாது என்பது அவன் எண்ணம்..! இப்படி சொல்வதைவிட என்ன செய்தாலும் பெண்களுக்கு திருப்தி இருப்பதில்லை என்ற கருத்து கோட்பாட்டுக்குள் சிக்கி இருப்பவன் வருண் என்று சொல்வதே சரியாக இருக்கும்..!
அதனால்தான் கணவன் என்ற மிகப்பெரிய சுழலுக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாமல்.. வீட்டாரின் திருப்திக்காக ஒருத்தியை மனைவியாக நடிக்க வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான்..!
ஆனால் ஒரு மருத்துவனாக தன் கடமையில் இம்மியளவும் பிசகாமல் சரியாக இருப்பவனுக்கு தேம்பாவணி கொஞ்சம் அசவுகரியத்தை தந்திருக்கிறாள்..!
அவள் தன்னிடம் எடுத்துக் கொள்ளும் அதிகப்படியான உரிமை இதெல்லாம் எங்க போய் முடியுமோ என்ற உறுத்தலை தந்திருந்தது..
வீட்டுக்கு போகணும்..! அதுக்கு முன்னாடி போய் தேம்பாவணியை பாக்கணும்.. இது ஒரு வேலையாக அவன் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது..!
புறப்படலாம் என்று எழுந்த போது அவன் அலைபேசி ஒலித்தது..
தேம்பாவணி அழைத்திருந்தாள்..
"டாக்டர் நீங்க இன்னைக்கு வர வேண்டாம்..!"
"ஏன்..?"
"இல்ல டிரைவர் வந்துட்டார்.. நான் வீட்டுக்கு போகணும்.."
"டிரைவர் வந்தா என்ன..? திருப்பி அனுப்பிடு.. நான்தான் வரேனே.. உன்னை வீட்டில் டிராப் பண்றேன்.." அவள் நிலமை புரியாமல் மிக சாதாரணமாய் சொன்னான் அவன்..
"என்ன டாக்டர் பேசறீங்க டிரைவர்கிட்ட உங்களை மீட் பண்ண என்ன காரணம் சொல்வேன்..! விஷயம் வீட்டுக்கு போகும்.."
"போனா என்ன..? உன் ஹஸ்பண்ட் சத்யாவுக்குத்தான் ஏற்கனவே விஷயம் தெரியுமே..!"
"ஐயோ..! நீங்க புரிஞ்சுதான் பேசறீங்களா.. ட்ரீட்மென்ட் விஷயமா உங்க கிளினிக் விசிட் பண்ணினதுவரை தெரியும்.. ஆனா உங்க கூட பழகறதெல்லாம் அவருக்கு தெரியாது..! நாம நாளைக்கு மீட் பண்ணலாம்.." அவசரமாக அழைப்பை துண்டித்து விட்டாள்..
வருண் குழப்பமாக நெற்றியை நீவி கொண்டான்..
"ஏன் இவ்வளவு பதட்டம்.. ஏதோ கள்ளக்காதல் செய்யற மாதிரி..! இப்படி பயந்து பயந்து எத்தனை நாளைக்கு பழக முடியும்.. இவளுக்குள்ள என்னதான் ரகசியம் ஒளிஞ்சிட்டு இருக்கு..!"
ஒரு மருத்துவனாக அவளுக்கு உதவி செய்ய வருண் தயார் என்றாலும் இப்படி திருட்டுத்தனமாக வெளியிடங்களில் சந்திப்பது அவன் மதிப்பிற்கு இழுக்காக தோன்றியது..!
"சின்ன பொண்ணு பேச்சைக் கேட்டு அவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினது என் தப்புதான்.. நாளையிலருந்து அவளை கிளினிக் வர சொல்லணும்..! என்ன ஆனாலும் சரி.. இதை ரொம்ப தூரம் போக விடக்கூடாது.. பிரச்சனை வரும்.." பேப்பர் வெயிட்டை உருட்டியபடி யோசித்துக் கொண்டிருந்தான் வருண்..
அந்நேரம் ராம் அழைத்திருந்தான்..
"சொல்லு ராம்..!"
"சார் நான் அந்த சத்யா பத்தி விசாரிச்சேன்.. பெருசா சொல்லிக்கற மாதிரி எதுவும் இல்ல ஆனா அவன் ஒரு ஹோமோ செக்ஸுவல் மாதிரி தெரியுது..!"
வருண் நிமிர்ந்து அமர்ந்தான்.. "ஓ மை குட்நெஸ்.."
"என்ன சார்..?"
"ஒன்னும் இல்ல.. ஆனா.. ஏன் அப்படி சொல்ற ராம்.. ஏதாவது ப்ரூஃப் இருக்கா..?"
"என்கிட்ட கொஞ்சம் எவிடன்ஸ் இருக்கு.. அவரோட ஃப்ரெண்ட் அரவிந்த் கூட ரொம்பவே நெருங்கி பழகற மாதிரி தோணுது.. நிறைய விஷயங்கள் அப் நார்மலா இருக்கு.."
"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. மிஸ்டர் கேசவ் குமார் தேம்பாவணியை தன்னோட தொழில் ஆதாயத்துக்காகத்தான் சத்யாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கார்..! அப்புறம் கேஷவ் பத்தி பிசினஸ் வட்டாரத்துல பெருசா புகார் இல்ல.. ஆனா அக்கம்பக்கத்துல.. தேம்பாவணியோட பிரண்ட்ஸ் இவங்க கிட்ட பெருசா எதுவும் நல்லா அபிப்ராயம் இல்லை.. தேம்பாவணியை வச்சு ஏதோ பெருசா சண்டை போட்டிருக்கற மாதிரி தெரியுது..!
"தனிமை படுத்துதல்.."
வருணின் நெற்றியும் புருவங்களும் அதிர்ச்சியில் சுருங்கின..
"தேம்பாவணிகிட்ட கேஷவ்குமார் ஒரு நல்ல அப்பாவா நடந்து நடந்துக்கறதில்லைன்னு கேள்விப்பட்டேன்.. இது எல்லாமே அக்கம் பக்கத்துலயும் அவளோட கூட படிக்கிற பிரண்ட்ஸ்கிட்டயும் கேட்டு தெரிஞ்சுக்கிட்ட தகவல்கள்..! கேஷவ் குமாருக்கு பயந்து தேவையில்லாத பிரச்சனை வேண்டாம்ன்னு இவங்க எல்லாரும் மொத்தமா ஒதுங்கிட்டதா சொல்றாங்க.."
"ஓ மை காட் அந்த பொண்ணு அவளோட அப்பா ரொம்ப நல்லவர், ரொம்ப நல்லா பாத்துக்கறார்னு சொன்னாளே..!"
"எனக்கு தெரியல வரூண் சார் ஆனா விசாரிச்ச வரைக்கும் எல்லாரும் இப்படித்தான் சொன்னாங்க..! உண்மை என்னன்னு அந்த பொண்ணு கிட்ட கேட்டாத்தான் தெரியும்.."
"நீங்க விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்ட தகவல்கள்தான் உண்மையாய் இருக்கணும் ராம்..! இந்த பொண்ணு பொய் சொல்றான்னு நான் அன்னைக்கே கண்டுபிடிச்சிட்டேன்.. ஆனா ஏன் பொய் சொல்றானுதான் எனக்கு தெரியல.." என்றான் வருண் தீவிர யோசனையுடன்..
"வாட் அபௌட் தேம்பாஸ் மதர்..?"
"தேம்பாவணியோட ரெண்டு வயசுலயே அவளோட அம்மா குழந்தையை கேஷவ்கிட்ட விட்டுட்டு.. யாரோ ஒரு பெரிய பிசினஸ்மேன் கூட ஓடிப் போயிட்டதா சொல்றாங்க.. அதுக்கப்புறம் அவங்கள பத்தி பெருசா எந்த தகவலும் இல்லை. இப்ப ஏதோ நார்த்துல செட்டில் ஆகிட்டாங்கன்னு சொல்லிக்கறாங்க.."
"ஓ.. மை புவர் தேம்ஸ்..!" கண்கள் மூடி பிடரியை வருடியபடி பெரிதாய் மூச்சு விட்டான் வருண்..!
"அப்புறம் சத்யா வீட்டு வேலைக்கார பொண்ணுகிட்ட கொஞ்சம் காசு கொடுத்து சத்யாவுக்கும் தேம்பாவணிக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருக்குன்னு விசாரிச்சு பார்த்தேன்..!"
"கண்டிப்பா அவன் தேம்பாவணியை ஹர்ட் பண்ணி இருக்கான்.. ஆம் ஐ ரைட்..?"
"எக்சாக்லி சார்.. ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட சத்யா தேம்பாவணி ரூமுக்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டாராம்.. அவர் அடிக்கிற சத்தமும் தேம்பாவணி கத்தி அழற சத்தமும் அந்த வீடு முழுக்க கேட்டுச்சுன்னு வேலைக்காரி சொன்னா..! இந்த விஷயம் என் மூலமா வெளிய வந்ததுன்னு சத்யா சாருக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகிடும்.. அதனால நான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டா..!"
வருண் நெற்றியை நீவியபடி பெருமூச்சு விட்டான்..!
"சோ தேம்பாவணியோட வாழ்க்கைல வந்த ரெண்டு ஆண்களுமே அவளை டேக் கேர் பண்ணிக்கல.. சந்தோஷமா பாத்துக்கல..! பெத்த தாயும் விட்டுட்டு ஓடிப் போய்ட்டா.."
அதேதான் சார்..!
வலிக்கு மேல் வலியாக இத்தனை துயரங்களை எப்படி தாங்கிக் கொள்கிறது அந்த சின்னஞ்சிறு இதயம்..
தேம்பாவணியை பற்றி நினைக்கும்போதே அவன் அடி நெஞ்சில் ஏதோ கசிந்தது..! அந்த உள்ளங்கை காயம் நினைவுக்கு வர இதயத்தின் மென்மையான பகுதியில் ஏதோ ஒரு வலி.. அவள் கரம் எடுத்து தன் கன்னத்தில் ஒற்றி..
தலையை உலுக்கி வெளியே வந்தான்..
சைல்ட்ஹூட் ட்ராமா.. டிப்ரஷன்.. ஆலுசினேஷன்.. க்ளிப்டோமேனியா.. ஆன்சைட்டி.. இப்படியே போனா ஸ்கிசோஃப்ரினியா.. ஓ.. மை காட்..!
"ஹலோ டாக்டர் லைன்ல இருக்கீங்களா..?"
"அவளை இந்த பிரச்சனையிலிருந்து வெளியே கொண்டு வரணும்.. இல்லனா நிலைமை ரொம்ப மோசமாகிடும்..!" அவன் குரல் வார்த்தைகளை தீவிரமாய் உச்சரித்தது..
"டாக்டர் என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் கேக்கல..!"
சுதாரித்து தெளிந்தான் வருண்..
"நத்திங்.. ஓகே ராம் தேங்க்யூ ஃபார் ஆல் திஸ் இன்ஃபர்மேஷன்ஸ்.."
"யு வெல்கம் டாக்டர்.. மேற்கொண்டு ஏதாவது தகவல் வேணும்னா இம்மீடியட்டா கூப்பிடுங்க.. ஐ அம் ரெடி டு ஒர்க் ஃபார் யூ எனி டைம்..!"
வெகு நேரம் யோசித்தபடி அமர்ந்திருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை..
மாலினி கதவைத் தட்டி உள்ளே வந்தாள்..
"டாக்டர் நீங்க அப்பவே கிளம்பறதா சொன்னீங்க இன்னும் புறப்படலையா..!"
"மணி என்ன ஆச்சு..?"
"ஏழு..!"
"மணி ஏழாயிடுச்சா..! அப்பவே சொல்றதுக்கென்ன.. தூங்கிட்டியா..?" என்று கேட்டபடியே கதவை திறந்து கொண்டு வெளியே சென்றவனை வினோதமாக பார்த்தாள் மாலினி..
வீட்டுக்கு வந்ததும் உடை கூட மாற்றாமல் கூடத்தில் அமர்ந்து அக்காவுடன் அவன் குழந்தைகளோடும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்..
இல்லையேல் வெண்மதி இதற்கும் ஒரு பஞ்சாயத்தை கூட்டுவாள்..
உதடுகள் தான் பெயருக்காக அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி வாய் போனபோக்கில் ஏதோ உளறிக் கொண்டிருந்தது.. உள்ளம் அவன் வசம் இல்லை நினைப்பெல்லாம் தேம்பாவணியிடம் சிக்கிக் கொண்டிருக்க.. ஏகப்பட்ட.. ஹான்..? என்ற விழிப்பு அவனிடம்..
"டேய் உன் பொண்டாட்டி.. ரொம்ப ஓவரா போறா.. கொஞ்சம் என்னன்னு கேளு.. இன்னைக்கு மத்தியானம் என்ன நடந்துச்சு தெரியுமா..! அழகா குட்டியா ஒரு பொண்ணு.."
"அக்கா ப்ளீஸ் ரொம்ப டயர்டா இருக்கு..! எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் உன் புகாரைல்லாம் லிஸ்ட் பண்ணி வை.. பொறுமையா கேட்டுக்கறேன்.. அம்மா சாப்பாடு ரூமுக்கே குடுத்து விட்டுடுங்க..! பசங்களா இன்னைக்கு கார்ட்டூன் பாருங்க நாளைக்கு மாமா உங்க கூட விளையாட வரேன்.." அவர்கள் கன்னத்தை தட்டி விட்டு அறைக்குள் சென்றான் வருண்..
"என்னம்மா இவன் என்ன சொல்றோம்னு கூட காது கொடுத்து கேக்க மாட்டேங்கறான்..!"
"வெண்மதி அவன் ப்ரொபஷன் பத்தி புரியாம பேசற நீ..! அவன் கிளினிக் தேடி வர்ற ஒவ்வொரு பேஷண்டும் ஒவ்வொரு டைப்.. அவங்களோட ஆழமா பேசி பிரச்சினையை புரிஞ்சுகிட்டு உதவி செய்யணும்னா மனசளவுல இவன் தெளிவா இருக்கணும்..! அவங்க பிராப்ளம் என்னன்னு அவங்க நிலைமையிலிருந்து யோசிக்கணும். மருத்துவ ரீதியா முடிவெடுக்க தெரியணும்.. எல்லாருக்கும் இஷ்டத்துக்கு மெடிசின்ஸ் எழுதி கொடுத்துட முடியாது.. நம்பிக்கை தரணும் பேசியே தெளிவு படுத்தனும்..! முடியாத பட்சத்தில் தெரபி போகணும்.. வருண் விரும்பி படிச்ச படிப்பு இது.. மனுஷங்களோட இன்னொரு பக்கத்தை அலசி பாக்கறதுல.. அவங்க மன ரீதியான பிரச்சனையை தீர்க்கறதுல அவனுக்கொரு சந்தோஷம்.. ஆத்ம திருப்தி.. அவன் பெருசா ஏதோ சாதிக்கணும்னு நினைக்கிறான்.. நாமதான் அவனுக்கு ஒத்துழைக்கணும் உதவி செய்யணும்..! சும்மா ஏதாவது பேசி அவனை நச்சரிச்சிக்கிட்டே இருந்தா இன்னும் அவன் டென்ஷனாகிடுவான்..! ஏற்கனவே வருண் திலோத்தமா ரெண்டு பேரும் எவ்வளவு வருத்தத்துல இருக்காங்கன்னு உனக்கு தெரியுமில்ல.." ராஜேந்திரனின் பெரிய விளக்கத்தில்
"அப்பா நானும் அதையே தான் சொல்றேன்.. எப்பவும் கிளினிக்கையே கட்டிக்கிட்டு அழுதுகிட்டிருந்தா எப்படி..! குடும்பத்துக்கும் கொஞ்சம் நேரம் செலவிடனும்.. அப்பதானே அவன் மனசும் புத்துணர்ச்சியா இருக்கும் அவனை நம்பி ஒரு பொண்ணு இருக்காளே..! வருண் அவ மேல பெருசா ஆர்வம் காட்டுற மாதிரி எனக்கு தோணல.. ஏதோ தப்பா இருக்கு.. அவ்வளவுதான் சொல்வேன்.."
பிரபாகரன் சலித்தார்..
"கண்ணுல விளக்கெண்ணைய விட்டு பார்த்தா எல்லாம் தப்பாத்தான் தெரியும்.. நான் கொஞ்ச நேரம் போய் தோட்டத்தில் நடந்துட்டு வரேன்.. பசங்களா யாரு என் கூட வரீங்க.." என்றதும் இரண்டும் தாத்தாவை தோள்களைப் பிடித்து தொங்காத குறை..!
ராஜேந்திரன் பிள்ளைகளோடு சென்றுவிட்டார்..
வெண்மதி சாரதாவிடம் திரும்பி "அம்மா" என்று ஆரம்பிக்க..! எனக்கு வேலை இருக்குடி என்று எழுந்து சென்று விட்டார் அவர்..
அறைக்குள் நுழைந்த போதே அவன் கட்டிலில் அமர்ந்திருந்தாள் திலோத்தமா..
அவன் கட்டிலில் திலோத்தமா இப்படி ஒய்யாரமாக அமைந்திருப்பது வருணுக்கு என்றுமே பிடிப்பதில்லை.. எத்தனையோ முறை சொல்லிவிட்டான்.. ஆனாலும் அவள் கேட்பதாய் இல்லை..!
"எழுந்து உன் ரூமுக்கு போ திலோத்தமா.." என்ற படியே கபோர்டை திறந்து தனது உடைகளை எடுத்துக் கொண்டிருந்தான்..
"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் அதுக்காகத்தான் இங்க உக்காந்துருக்கேன்.."
வருண் எதுவும் பதில் பேசவில்லை..!
"நாங்க இன்னைக்கு வெளிய போனோமே.. அங்க ஒரு பொண்ண பார்த்தோம்..!"
"திலோத்தமா ப்ளீஸ்..! எந்த பொண்ணையும் பத்தி எனக்கு தெரிஞ்சுக்க வேண்டாம்.. கண்டிப்பா அந்த பொண்ண பத்தி நீ நல்ல விதமா சொல்ல போறதில்ல..!" என்றான் எரிச்சலாக..
"அது என்னவோ உண்மைதான்.. அவ ஒன்னும் அவ்வளவு நல்லவ இல்லை.. ஒரு அழகான பாம்பு மாதிரி இருந்தா..!"
"இதோ.. இப்படித்தான்.. உனக்குள்ள பாசிட்டிவ் எனர்ஜி கொஞ்சம் கூட இல்லை சரி விடு.. எனக்கு கொஞ்சம் பிரைவசி வேணும் நீ உன்னோட ரூமுக்கு போ இல்லனா வெளியே போய் அம்மா அப்பாவோட பேசிட்டு இரு..!"
"நான் ரூமுக்கு போறேன்..! இப்ப நான் வெளியே போனா புருஷனை விட்டுட்டு ஏன் இங்க வந்தேன்னு உங்கக்கா நண்டா குடைவாங்க.."
"அப்புறம் திலோத்தமா.. நைட்டு எனக்கு சாப்பாடு ரூமுக்கு கொண்டுவர சொல்லியிருக்கேன்.. உன்னால முடிஞ்சா அதை கொஞ்சம் வாங்கிட்டு வந்து தந்துடு.. இல்லைனா அக்கா ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பா..!"
"ஓகே அப்ப எனக்கும் டின்னர் இங்கயே எடுத்துட்டு வந்துடறேன் நாம ரெண்டு பேரையும் ரூம்லயே சாப்பிட்டுக்கலாமா..?"
எரிச்சல் மேலிட்டது அவனிடம்..
"நான் எனக்குத்தான் கொண்டுவர சொன்னேன்.. உனக்கு வேணும்னா நீ தனியா உக்காந்து சாப்பிடு.. எப்ப பசிக்குதோ அப்பதான் என்னால சாப்பிட முடியும்..!" அவன் குரலில் ஓர் இறுக்கம் தெரிய திலோத்தமா அவனை முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
மீண்டும் தேம்பாவணி கதவை தட்டாமல் சிந்தனைக்குள் புகுந்தாள்..
"தேம்பா.. தேம்பா.. ஏன் இவ்வளவு பொய்..! அப்பா நல்லவர் ஹஸ்பண்ட் நல்லவர்னு எதுக்காக இல்லாததை இருக்கிற மாதிரி சொன்ன.. அதுவும் அந்த கேரக்டரை ரசிச்சு சொன்ன விதம் சம்திங் ஃபிஷ்ஷி..!"
மேன் சர்ச் ஃபார் மீனிங்.. என்ற உளவியல் சம்பந்தப்பட்ட புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பேருக்கு புரட்டிக் கொண்டிருந்தான் வருண்..!
மணி எப்போது ஒன்பதை தாண்டும் என்று நிமிட முட்களோடு சோர்வாக நகர்ந்து கொண்டிருந்தான்..
அவன் எதிர்பார்த்தது போலவே தேம்பாவணி அழைத்திருந்தாள்..
தொடுத்திரையின் முன்பு அழுது கொண்டிருந்தாள்..
"தேம்பா..! என்னம்மா ஆச்சு..?"
"அலைபேசியை கீழே தவறவிட போனவன் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டான்..
"நான் இன்னைக்கு ஒரு தப்பு பண்ணிட்டேன்..!"
"என்ன தப்பு..?"
"வழக்கம்போல ஒரு குட்டி பிள்ளையார் பொம்மையை திருடும் போது கையும் களவுமா மாட்டிக்கிட்டேன்.. அசிங்கமா போயிடுச்சு.." முகத்தை மூடிக்கொண்டு விம்மினாள்..!
லேசாக முளைவிட்ட கனிந்த மென்னகையோடு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..
"ஹேய் அழாத..! முதல்ல என்னை பாரு.. இல்லனா கால் கட் பண்ணிட்டு நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்.."
"போங்களேன்.. யாரும் எனக்கு வேண்டாம் நீங்களும் கொஞ்ச நாள்ல என்னை கேவலமாத்தான் பாக்க போறீங்க..! உங்க எல்லாருக்கும் நான் வேண்டாத பொருள்தானே." மீண்டும் விம்மல்..
"உங்க எல்லாருக்கும்னா..? வேற யாரை சொல்ற தேம்பாவணி.." அவன் புருவங்கள் பதிலை தெரிந்துகொள்ளும் தவிப்பிலும் ஆர்வத்திலும் உயர்ந்தன..
சட்டென சுதாரித்து விழித்தாள் தேம்பாவணி..
"நான் யாரையும் சொல்லலையே.. அங்க ஹோட்டல்ல என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டவங்கள சொன்னேன் அப்புறம் உங்களை சொன்னேன்.."
அயற்சியாக இருந்தது வருணுக்கு..!
"தேம்பாவணி சத்யா உன்னை அராஸ் பண்றாரா.. ஹர்ட் பண்றாரா..? இங்க பாரு நீ வெளிப்படையா பேசினாத்தான் என்னால உனக்கு உதவி செய்ய முடியும்.. டொமஸ்டிக் வயலன்ஸ் ரொம்ப தப்பு.. நீ தைரியமா வெளிய வந்தா சத்யா மேல கேஸ் கொடுக்கலாம்.. அரஸ்ட் பண்ணி உள்ள தள்ளலாம்.."
"இ.. இல்ல இல்ல அவர் என்னை எதுவுமே பண்ணல தேவையில்லாம அவர் மேல பொய் புகார் சொல்லாதீங்க.. சத்யா ரொம்ப நல்லவர்.."
"ஏய்.. இடியட் எதுக்காக அவங்களை இப்படி காப்பாத்தற.. தப்பு செய்யறது மட்டுமில்ல தப்பு செய்றவங்கள இப்படி கண்டுக்காம துணை போறதும் தப்பிக்க விடுறதும் பெரிய கிரைம் தெரியுமா..!"
"ஆங்.. என்னது..?" தேம்பாவணிக்கு ஒன்றும் புரியவில்லை.
தலையை அழுத்தமாக கோதியபடி ஆழ்ந்த பெருமூச்சு விட்டான் வருண்..
"இங்க பாரு தேம்பு.. இந்த மாதிரி யாருக்கும் தெரியாம சின்ன சின்ன பொருட்களை எடுத்து வைச்சிக்கறதுக்கு பெயர் கிளிப்டோமேனியா.. சொல்ல முடியாத மன அழுத்தத்தின் விளைவு இது.. உனக்கு சைக்கியாட்ரிக் ட்ரீட்மென்ட் தேவை.. கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணு தேம்ஸ்.." என்றான் மென்மையான குரலில்..
சில கணங்கள் கருவிழிகள் உருள யோசித்துக் கொண்டிருந்தவள் "அதெல்லாம் வேண்டாம் நான் நல்லாத்தான் இருக்கேன்..! நான் நெனச்சா இதையெல்லாம் கண்ட்ரோல் பண்ணிக்க முடியும்.. நீங்க எப்பவும் என் கூட இதே மாதிரி ஃபிரண்டா இருங்க அது போதும்..!"
எத்தனை நாளைக்கு இந்த நட்பு சாஸ்வதம்.. ஒரு மருத்துவனாக அவன் தன் கடமையில் தெளிவாக இருக்கிறான். ஆனால் இந்த நட்பு நெருக்கம்.. இதெல்லாம் எனக்கு ஒத்து வராதே..! தேம்பாவணிக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் அவன்..
"எனக்கு தூக்கம் வருது..!"
"தூங்குடா.." வருண் மென்மையான குரலில் சொன்னான்..
தேம்பாவணி படுத்துக் கொண்டாள்..
கண்கள் சொருகி உறங்க முயன்றவளின் முகத்தை பார்க்கையில் இரக்கமும் கனிவும் நெஞ்சு நிறைய வழிந்தது..
பக்கத்தில் அமர்ந்து அவள் தலையை வருடித் தந்து நான் இருக்கேன்டா.. என சொல்ல வேண்டும் போல் தோன்றியது..
அவள் பிரச்சினைகளை தீர்த்து சுதந்திர பறவையாக்கி இரு கைகளுக்குள் வைத்துக்கொண்டு வானில் பறக்கவிட்டு அவள் சந்தோஷத்தை பார்க்க வேண்டும்போல் மனம் துடித்தது..
நன்றாக உறங்கியிருந்தாள் தேம்பாவணி..
"தூங்கிட்டா..! குட் நைட் பேபி மா." ஒற்றை விரலால் திரையில் தெரிந்த அவள் முகத்தை வருடி தந்தவன் ஸ்கிரீனை அணைத்தான்..
இங்கே.. அடுத்த பத்தாவது நிமிடத்தில் அறைக்குள் வந்த சத்யா குரோத விழிகளுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..
அன்றைய இரவில் மிகப்பெரிய துன்பம் தனக்கு நேர போவது தெரியாமல் தன்னை மறந்து ஏதோ பெரிய சிறகுகளுக்குள் ஒளிந்து கொண்ட சின்ன பறவையாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..
தொடரும்..