அன்று இரவு அருந்ததியை இருக்கையில் அமர சொல்லிவிட்டு எதிர் இருக்கையில் அமர்ந்தான் மகரிஷி..!
முதலில் எப்படி ஆரம்பிப்பதென்று தயங்கியவன் குரலை செருமிக் கொண்டு தீர்க்க விழிகளோடு அவளை ஏறிட்டான்..
"உங்க பர்சனல் விஷயத்துல நான் தலையிடறது சரியில்ல.. ஆனா நான் உங்களுக்காக பேசல.. உங்க மகளோட எதிர்காலத்துக்காக பேசுறேன்..!"
சொல்வது புரியவில்லை என்பதை போல் அருந்ததியின் பார்வை..!
"சந்திராம்மா.." என்றவன் ஒரு கணம் நிறுத்திவிட்டு "சந்திரமதி கிட்ட நான் பேசுறேன்..! அவள ஒழுங்கா படிக்கச் சொல்லி எல்லா சப்ஜெக்ட்லயும் நிறைய மார்க் வாங்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு..!" என்றதும் அருந்ததியின் கண்கள் நிம்மதியான ஒளியை வெளியிட்டன..
"ஆனா அதுக்கு முன்னாடி நீங்க என்கிட்ட ஒரு விஷயத்தை பத்தி சொல்லணும்..!"
"என்ன விஷயம் எத பத்தி சொல்லணும்..?"
"உங்க வாழ்க்கையில என்ன நடந்தது.. நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்க்கணும்..! எப்பவுமே ஏதோ ஒரு சோகம் தெரியுது உங்க கண்கள்ல.. நிறைய முறை நீங்க அழுது பார்த்துருக்கேன்.. இதெல்லாம் ஏன்..?"
"என்னோட தனிப்பட்ட விஷயங்களை பத்தி நான் எதுக்காக உங்க கிட்ட பேசணும்.."
"எனக்கு தேவை இல்லைங்க.. ஆனா உங்க மகள் சந்திரமதி நீங்க பட்ட கஷ்டநஷ்டங்களை பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா..!"
"தெரிஞ்சுக்கிட்டு..? வேண்டவே வேண்டாம்.. அவளாவது சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்.."
"இந்தமாதிரி முட்டாள் தனத்தை தான் நிறைய பேரண்ட்ஸ் செஞ்சுட்டு கடைசில கஷ்டப்படுறாங்க..! பிள்ளைகளுக்கு வாழ்க்கையோட நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொடுத்து வளர்க்கணும்.. வெற்றி தோல்வினா என்னன்னு கத்து கொடுக்கணும்.. வாழ்க்கையில அடிபடறவனுக்கும் பெத்தவங்களோட அருமை தெரிஞ்சுக்குறவனுக்கு மட்டும் தான் முன்னேறனும்னு வெறி வரும்.. உங்க பொண்ணு நல்லா படிக்கணும் நிறைய மார்க் வாங்கணும்னு சொல்றீங்களே அவ படிக்கவும் பாஸ் ஆகவும் ஒரு பர்பஸ் வேண்டாமா..! உங்க மகளுக்காக நீங்க உழைக்கறீங்க அதேபோல எதுக்காக படிக்கணும்னு அவ யோசிக்க வேண்டாமா..?"
"இப்ப நான் என்ன செய்யணும்ங்கறீங்க..!"
"ப்ளீஸ்.. உங்கள பத்தி தெளிவா என்கிட்ட சொல்லுங்க.. உங்க மகளுக்கு அம்மாவோட அருமையை நான் புரிய வைக்கறேன்.."
கசந்து சிரித்தாள் அருந்ததி..
"யாரோ ஒருத்தர் என்னை பத்தி சொல்லித்தான் எம்பொண்ணு என்னோட அருமைய தெரிஞ்சுக்கணுமா..!"
"அப்ப நீங்க சொல்லி புரிய வச்சிருக்கணும் அதைத்தான் நீங்க செய்யலையே..? உங்க பொண்ணு கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறீங்க அது நியாயம்.. என் வாழ்க்கையில நான் இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்திருக்கேன்.. படிச்சா நீ நல்லா இருக்கலாம்.. இந்த மாதிரி கஷ்டப்பட வேண்டாம்னன்னு அவளுக்கு சொல்லி வளர்த்திருந்தா உங்க பொண்ணுக்கு அம்மாவோட சுமை என்னன்னு தெரிஞ்சிருக்கும்..! ஒரு டீச்சரா சந்திரமதியோட மனச என்னால புரிஞ்சுக்க முடியுது.. அவ வழியிலேயே போய் அவளை மாத்திட முடியும்னு நம்பறேன்.. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்தா.."
"எனக்கு கல்யாணம் ஆகும் போது வயசு பதினாறு.." அவனைத் தாண்டி எங்கோ வெறித்தபடி தன் முழு கதையை அவனிடம் சொல்லி முடித்திருந்தாள் அருந்ததி..
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்த நேரத்தில் கண்ணாடி குவளையில் பழரசத்தை ஊற்றி மேஜையில் வைத்தான் மகரிஷி..
இது ஏன்? என்பதைப் போல் அவனைப் பார்க்க
"பேசி பேசி ரொம்ப டயர்டா இருப்பீங்க..! குடிங்க.." என்றான் அவன்
"இல்ல பரவாயில்ல..!"
"அட இதுக்கெல்லாம் காசு கேக்க மாட்டேன்.. தாகன்டி..!" இருக்கையில் அமர்ந்து விரல்களால் மேஜையில் தட்டிய படி தலை சாய்த்து அவளை பார்க்க.. முதலில் தயங்கியவள் பிறகு குவளையை கையிலெடுத்து பழரசத்தை பருகத் தொடங்கினாள்..
சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அருந்ததி நிமிர்வதில் பார்வையை கீழே தழைத்து கருவிழிகளை ஓட விட்டான்..
பழ ரசத்தை குடித்து முடித்து இதழ்களை துடைத்துக்கொண்டவள் அவசரமாக எழுந்தாள்..
"ரொம்ப நன்றிங்க.. தப்பா சரியான்னு தெரியலை.. ஆனா யார்கிட்ட என் பிரச்சினையை சொல்றதுன்னு தெரியாம ரொம்பவே தவிச்சு போயிருந்தேன்.. உங்க கிட்ட பேசின பிறகு ஒரு தெளிவு வந்துருச்சு.."
"நேனு இன்கா மாட்லாடிபோலேது..
ப்ளீஸ் சிட்.." என இருக்கையை காட்ட அருந்ததி விழித்தாள்..
"இன்னும் பேசி முடிக்கலைன்னு சொல்றேன் உட்காருங்களேன்.." அழுத்தமாகச் சொல்ல வேறு வழியில்லாமல் அமர்ந்தாள் அருந்ததி..
இரு கைகளை மேஜையின் மீது கோர்த்துக் கொண்டவன் கூர்மையாக அவளை பார்த்தான்..
"புது வீட்டுக்கு போறது பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..!"
"நான் என்னங்க முடிவு பண்றது.. போய்தானே ஆகணும்..! இனி இங்கே இருக்க முடியாதே..!"
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டலயே இருக்கலாம்..
"இல்ல வேண்டாங்க.. உங்க உதவிக்கு நன்றி.." மீண்டும் எழுந்தாள் அருந்ததி..
"சொல்றத பொறுமையா கேக்கற குணம் உங்களுக்கே இல்லைன்னா உங்க பொண்ணு எப்படி நிதானத்தை கடைபிடிப்பா..!" மகரிஷியின் முகத்தில் ஒருவித கடுமை பரவியதில் தடுமாறி போனவள் மீண்டும் இருக்கையில் அமர்ந்தாள்..
"இங்க பாருங்க நீங்க நினைக்கிற மாதிரி தப்பான எண்ணத்துல நான் உங்களுக்கு உதவி செய்யலை.. சந்திரமதிக்காக மட்டும் தான்.. எப்படியும் அந்த வீட்ல வாடகை கொடுத்துட்டு தானே இருக்க போறீங்க.. அதே வாடகையை என்கிட்ட தந்திடுங்க..! ஓசியில் உங்களை குடி வைக்க முடியாது.."
அருந்ததி மகிழ்வதா மறுப்பதா என்ற நிலையில் யோசனையும் குழப்பமுமாக அவனை பார்த்துக் கொண்டிருக்க..
"உங்களை இங்க தங்க வைக்க இன்னொரு காரணமும் இருக்கு.. உங்களுக்கு 45 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கேன்.. வீட்டை காலி பண்ணிட்டு போய்ட்டீங்கன்னா உங்களை எங்க போய் தேடுறது.. எப்படி பணத்தை வசூலிக்கறது.. பணத்தை தந்து முடிக்கற வரைக்கும் நீங்க இங்கதான் இருக்கணும்..!" இந்த முறை அவன் வார்த்தைகள் அதிகாரமாக கட்டளையாக வந்தது..
நிமிடத்திற்கு நிமிடம் அவன் குரலும் குணமும் மாறிக் கொண்டிருப்பதில் வினோதமாக பார்த்தாள் அருந்ததி..
மாணவியை அமரச் சொல்லிக் குச்சியை வைத்து மிரட்டி பாடம் எடுப்பதை போல் அருந்ததியின் நெஞ்சுக்குள் ஒரு படம் ஓடியது..
"என்னை யோசிக்கறீங்க.." இதைக் கூட அவன் அதிகாரமாகவே கேட்க..
"இல்ல..! நாங்க இதுக்கு ஒத்துக்கிட்டாலும் ஹவுஸ் ஓனர் ஒத்துக்கணுமே..!" என்றாள் தயக்கமாக..
"எந்த ஹவுஸ் ஓனர்.. இந்த வீட்டுக்கு ஒரே ஓனர் நான்தான்.." சாய்ந்தபடி கால்களை நீட்டி மார்பின் குறுக்கே கைகட்டி அவளைப் பார்த்தான் மகரிஷி..
"என்ன சொல்றீங்க.. நீங்களும் எங்களை மாதிரி வாடகைக்கு.."
"இந்த வீட்டை நான் வாங்கிட்டேன்..! இப்ப இது என் வீடு என் பேர்ல இருக்கு.. உங்களை இங்க தங்கச் சொல்லவோ இல்ல வீட்டை விட்டு வெளியே போக சொல்லவோ எனக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கு.."
அருந்ததி திறந்த வாய் மூடவில்லை..! அவன் சொன்னதை நம்ப முடியாமல் ஆங் என்று விழித்தாள்..
"நான் பேச வேண்டியதை பேசி முடிச்சிட்டேன்.. நீங்க போய் தூங்குங்க..! என்னால முடிஞ்சவரை சந்திரமதிக்கு அவளோட பொறுப்புகளை புரிய வைக்கறேன்.."
"உங்களுக்கு ஏன் சந்திரமதி மேல இவ்வளவு அக்கறை..!" அருந்ததியின் கேள்வியில் லேசான சந்தேகம் ஒரு பயம்.. அதையும் தாண்டி அவன் மீது ஓரளவு நம்பிக்கை..
"சந்திரமதி.. என்னோட.."
"உங்க பொண்ணு மாதிரின்னு சொல்ல போறீங்களா..!" எரிச்சலாய் வந்தது அருந்ததிக்கு..
அவள் காலத்திலேயே இந்த மாதிரியான வசனங்களை ஏகப்பட்ட பேரிடம் கேட்டு ஏமாந்து போனதெல்லாம் நினைவுக்கு வர.. அந்தப் பட்டியலில் நீயும் சேரப் போகிறாயா என்பதைப் போல் மகரிஷியை அலுப்பாக பார்த்தாள் அருந்ததி..
"பொண்ணு மாதிரி இல்ல.." என்ற தலையசைத்தவன் "அம்மா மாதிரி..!" என்றான் புன்னகையுடன்..
அம்மா என்ற வார்த்தை கூட அவன் இதழில் சிரிப்பை தருகிறது..
வித்தியாசமான இந்த பதிலில் அருந்ததி ஒரு கணம் வினோதமாய் விழிகளை விரிக்க.. "போய் தூங்குங்க.. நேரமாயிடுச்சு.. எனக்கும் தூக்கம் வருது..!" டேபிளை இரு கைகளால் லேசாக தட்டி விட்டு எழுந்தான் அவன்.. தன்னையறியாமல் அவளும் எழுந்து நிற்க முன்னோக்கி நகர்ந்து அவளிடம் வந்தான்..
ஏன் நெருங்கி வருகிறான் என்ற ரீதியில் அவள் பயந்து விழிக்க.. கதவை காட்டி அதற்கும் புன்னகைத்தான் மகரிஷி..
மீண்டும் பள்ளிப் பருவதற்கே சென்று விட்ட மக்கு மாணவி போல் எதற்கெடுத்தாலும் திரு திருவென முழித்த தன் நிலையை எண்ணி வெட்கி போனாள் அருந்ததி..
வண்டியில் ஆர்டர் டெலிவரி செய்ய செல்லும்போது இந்த காட்சிகள் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்க.. மனதுக்குள் போர் முரசு போல் சத்தமிட்டு கொண்டிருந்த மகளைப் பற்றிய கவலைகளில் பாதி இரைச்சல் ஒழிந்தது போல் தோன்றியது..
எவனையோ நம்பி உன் குழந்தையை ஒப்படைப்பாயா என்ற சந்தேக ஊசிகள் நெஞ்சை கீறாமல்.. ரிஷி பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை ஊஞ்சல் மென்மையாக தாலாட்ட துவங்கியிருந்தது..
மகரிஷியின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அன்று சந்திரமதி பிரீத்தியிடம் "உன் அம்மாவ நீ மிஸ் பண்றியா ப்ரீத்தி" என்று கேட்க.. யாரிடம் தன் ஆதங்கத்தை சொல்லுவதென்று காத்திருந்தாளோ தெரியவில்லை அந்த குழந்தை..
மொத்தமாக சந்திரமதியிடம் தன் ஏக்கங்களை கொட்டி தீர்த்து விட்டாள்..
ப்ரீத்தி சந்திரமதியின் அறிவு கண்களை திறந்து வைத்து விட்டாள்.. கொழுப்பு கட்டிகளாக அவள் மூளையை அடைத்திருந்த அறியாமை நோயை நீக்கிவிட்டாள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது..
ப்ரீத்தியின் உருக்கமான பேச்சில் சந்திரமதி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை..
"அம்மா இல்லைன்னா என்னடி..! அதான் அப்பா இருக்காரே.. உன்னை சந்தோஷமா பாத்துக்கறாரில்ல.. அப்புறம் என்ன..!" இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை போல் சலித்தவாறு சொன்னாள்..
"உனக்கு புரியாது டி.. எல்லா விஷயத்தையும் அப்பா கிட்ட ஷேர் பண்ணிக்க முடியாது.. இந்த உலகத்தில் அம்மா மாதிரி யாருமே வர முடியாது தெரியுமா..!"
"போடி உனக்கு தான் தெரியல.. அம்மான்னா எப்பவும் திட்டிக்கிட்டே இருப்பாங்க.. அடிப்பாங்க.. ஆனா அப்பான்னா அப்படி இல்லை.. பாசமா இருப்பாங்க.. நம்ம பீலிங்க்ஸை புரிஞ்சுக்குவாங்க.."
"எல்லா அப்பாவும் ஒரே மாதிரி இல்ல..! என் அப்பாவுக்கு நிறைய சம்பாதிக்கணும்.. குடிக்கனும்.. ஆனா நான் சந்தோஷமா இருக்கேன்னான்னு அவர் யோசிச்சதே இல்லை.."
"என்னடி பெரிய மனுஷி மாதிரி ரொம்ப ஃபீல் பண்ணி பேசுற.. இந்த டயலாக் எல்லாம் சினிமாவுலயே பாத்துட்டேன் போடி.. " தலையை சொரித்தபடி ரெக்கார்ட் நோட்புக்கில் கிறுக்கினாள் சந்திரமதி..
"திட்டினாலும் அடிச்சாலும் உன்னை அடுத்த நிமிஷமே அரவணைச்சுக்க அம்மா இருக்காங்க..! எனக்கு யாரு இருக்கா..! என் பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க.. பாலைவனத்துல தான் தண்ணீர் பந்தலோட அருமை தெரியுமாம்.. நீயும் கண்டிப்பா உன் அம்மாவை பத்தி புரிஞ்சுக்குவ..!"
"பாக்கலாம் பாக்கலாம்..! பிசிக்ஸ் மிஸ் வந்துட்டாங்க எழுந்திரு.." என்று உள்ளே வந்த ஆசிரியரை கண்டு சந்திரமதி எழுந்து நிற்க.. அவளைத் தொடர்ந்து ப்ரீத்தியும் எழுந்தாள்..
இரண்டு நாட்கள் இப்படித்தான் சென்றது..!
சந்திரமதி நடவடிக்கையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை..
மகரிஷி சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவனித்து படித்தாள்.. மற்றபடி அதே அலட்சியப் போக்கு.. கண்ணெதிரே கீழே ஒரு பொருள் சிதறி கிடந்தாலும் அதை எடுத்து வைப்பதில்லை.. வீட்டு வேலை எதிலும் உதவுவதில்லை.. அருந்ததியிடம் பேசுவதில்லை..
நான் தான் அதிகமாக எதிர்பார்த்து விட்டேனா..! ஆனாலும் இந்தப் பெண் கொஞ்சம் கூட மாறவில்லையே.. நெஞ்சுக்குள் மீண்டும் ஊழிக் காற்று போல் பலத்த இரைச்சல்.. மீண்டும் சோர்வானாள் அருந்ததி..
யாரிடம் தன் மனத்துயரை வெளிப்படுத்துவதென்று தெரியாமல் மீண்டும் ரிஷியிடமே வந்து நின்றாள்..
வீட்டு வாசலில் உடற்பயிற்சி கூடத்திற்கு கிளம்புவதற்காக திண்ணையில் அமர்ந்து ஷூ லேசை சரி செய்து கொண்டு எழுந்தவனின் முன்னால் வந்து நிற்க..
"செப்பன்டி.." என்றான் இடுப்பில் கைவைத்து அவளை தலைகுனிந்து பார்த்தவாறு..
கையை பிசைந்தபடி நின்றவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தன..
"ரொம்ப பக்கத்துல வந்து நின்னுட்டேனோ.." என்று ஒரு அடி பின்னால் நகர.. "சீக்கிரம் சொல்லுங்க.. என்ன விஷயம்" என்றவன் மீண்டும் அந்த இடைவெளியை நிரப்பும் பொருட்டு ஒரு அடி முன்னால் நகர்ந்தான்..
"ச.. சந்திரமதி.. என்கிட்ட பேசவே மாட்டேங்கறாளே.. நான் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்.. எல்லா பிரச்சனையும் சரி செஞ்சுட்டதா சொன்னிங்களே..!"
வழக்கம் போல் மகரிஷி அழகாக சிரித்தான்..
கையை கட்டி ஏதோ சிறு குழந்தையிடம் பேசுவதைப் போல் தலை தாழ்த்தி.. "எல்லாமே உடனே நடந்துடனுமா உங்களுக்கு.. ஏன் இவ்வளவு அவசரம்.. கொஞ்சம் டைம் கொடுங்க..! நான் பாத்துக்கறேன்னு சொன்னேனே.. ரிலாக்ஸா இருங்க.. அப்புறம் காலையில டிபன் எனக்கு ரெகுலரா எடுத்து வச்சிடுங்க..! எல்லாம் வித்துடுச்சுன்னு சொல்லி பட்டினி போட்டுடாதீங்க.. அர்த்தாமாயிந்தா" என புருவங்களை ஏற்றி இறக்கினான்..
"இட்லி தானே எடுத்து வைக்கிறேன்.." என்றாள் அருந்ததி..
அவளை கடந்து சென்று மீண்டும் திரும்பி நின்றான்..
"உங்களுக்கு இந்த இன்னசென்ஸ் லுக்.. அழுகை இதெல்லாம் கொஞ்சம் கூட பொருந்தல.. ஜேஜெம்மா மாதிரி தைரியமா இருங்க.. அந்த கேரக்டர்தான் உங்களுக்கு பொருந்தும்!" ரிஷி சொல்லிவிட்டு உற்சாகமாக விசிலடித்தபடி செல்ல
"என்ன சொல்லிட்டு போறாரு இவரு.." தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவள் கீழே குனிந்த நேரத்தில்.. "அவன் சொல்றது புரியலைன்னா என்ன என்கிட்ட பேசேன்.." என்பதாக படு ஆர்வமாக அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் மோத்தி..
"ப்ச்.. இது வேற.. எப்ப பாரு என் பின்னாடியே சுத்திட்டு கிடக்குது.." வாய்க்குள் முனகிய படி தலையிலடித்துக் கொண்டவள் "எப்ப என்கிட்ட அடி வாங்க போறன்னு தெரியல நீ.. மரியாதையா ஓடிரு.." முன்பிருந்த கடுமையில்லாமல் அவள் மிரட்டியது செல்லமான அதட்டலாக தோன்றியதோ என்னவோ.. அதே இடத்தில் பின்னங்கால்களை மட்டும் மடக்கி அமர்ந்து கொண்டவன் பெரிதாய் ஒரு கொட்டாவி விட்டு அருந்ததியை சோம்பலாக பார்த்து வைத்தான்..
"நேரம்?? இது கூட என்னை கிண்டல் பண்ணுது.. இந்த வீட்ல யாரு என்ன மதிக்கறா..?" தலையிலடித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்..
அருந்ததியின் வீட்டிற்கு இட்லி வாங்க வந்த மூன்று பெண்களை நிறுத்தி இந்த காட்சிகளை லைவ் ஷோ ஓட்டிக் கொண்டிருந்தாள் எதிர் வீட்டு கனகா..
அடுத்த நாள் மாலை வேலை முடிந்து வந்த அருந்ததி வாசலிலோ அல்லது அறைக்குள்ளோ மகரிஷியோடு அமர்ந்து டியூஷன் படித்துக் கொண்டிருக்கும் தன்மகள் கண்ணில் படாமல் போகவே.. கைப்பையை வைத்துவிட்டு வீட்டை சுற்றி சுற்றி சந்திரமதியை தேடிக் கொண்டிருந்தாள்..
"யார தேடுறீங்க..!" வெளியே வந்து தூணில் சாய்ந்து நின்றான் மகரிஷி..
"சந்திரமதி.."
"அவ உங்ககிட்ட சொல்லலையா..!"
"என்ன சொல்லணும்..?" அருந்ததியின் நெஞ்சு படபடத்தது..
"ரெண்டு நாளா அவளோட அப்பா ஸ்கூலுக்கு வந்து அருந்ததியை பார்த்துட்டு போனாராம்.. பொண்ண கூட்டிட்டு போய் தன் வீட்ல வச்சுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டு அழுததா சந்திரமதி என்கிட்ட சொன்னா.."
நெஞ்சு கூட்டுக்குள் நெருப்பு குழம்பாக சூடாக ஏதோ இறங்கியது..
"அ.. அதுக்கு..!"
"அவளோட அப்பா வீட்டு அட்ரஸை கண்டுபிடிச்சு நான்தான் கொண்டு போய் விட்டுட்டு வந்தேன்..!"
நெஞ்சை பிடித்துக் கொண்டு.. "ஐயோ என் பொண்ணு..!" ஒவென கதறி அங்கேயே தொப்பென அமர்ந்து விட்டாள் அருந்ததி..
தொடரும்..