• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 17

Active member
Joined
Jan 16, 2023
Messages
129
3
இத்தனை நாள் தன்னை பேணி காத்து வளர்த்த தாயின் மேல் இல்லாத பாசம் ஒரே ஒரு நாள் பள்ளிக்கு வந்து நீலிக் கண்ணீர் வடித்து சாதுரியமாக பாச வார்த்தைகளை கவனமாக கோர்த்து போலித்தனமாக நடித்து மகளை உருக வைத்த தந்தையின் மீது எப்படி வந்ததோ தெரியவில்லை..!

அப்பா அப்பா..! தேம்பி தேம்பி அழுது வார்த்தைக்கு வார்த்தை உருகினாள் சந்திரமதி..

பொட்டலமாக மடித்து வைத்திருந்த பேப்பரை பிரித்து எண்ணெயில் முக்கியெடுத்த ஜிலேபியை மகளுக்கு ஊட்டி விட்டான் பிரபாகர்..

"ஏம்பா நீங்க கூட என்னை வந்து பார்க்கல..?"

"உன்ன பாக்கணும்னு நான் துடிச்ச துடிப்பு எனக்கு மட்டுந்தான் தெரியும்.. உன் பக்கத்துல வரக்கூடாது.. உன்னை சந்திக்கக் கூடாது.. மீறி எம்புள்ளகிட்ட வந்தா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன்னு உன் அம்மா மிரட்டுனதுல கொஞ்சம் பயந்து போயிட்டேன் கண்ணு.. போலீஸ் அடியெல்லாம் வாங்க அப்பா உடம்பில் தெம்பு இல்லடா.. இந்த உலகம் பொம்பளைங்க சொல்றதத்தான நம்புது.. நான் ரொம்ப கெட்டவனாம் உன் அம்மாவை ரொம்ப கொடுமை படுத்தறேனாம்.." மூக்கை உறிஞ்சி பரிதாபமாக பார்த்தான் பிரபாகர்..

"அ..ப்பா..!"

"அப்படிதான் எல்லார்கிட்டயும் என்ன பத்தி தப்பு தப்பா சொல்லி வச்சிருக்கா உங்கம்மா..! எங்கூட வந்திடு.. ஒண்ணா வாழலாமுனு எவ்வளவோ கெஞ்சி பாத்துட்டேன்.. உன் அம்மாவுக்கு சம்பாதிக்கிறோங்கற திமிரு..! அவளுக்கு நான் வேண்டாமாம்.. சரி நீ எக்கேடும் கெட்டுப் போ என் புள்ளைய மட்டும் எங்கிட்ட குடுத்திடுன்னு கேட்டு பாத்தேன் .. அவ மனசு மாறல.. என்னைய கேவலமா திட்டி அவமானப் படுத்திட்டா.. அந்த கோவத்துல தெருவுல நின்னு நாலு வார்த்தை அதிகமா பேசிட்டேன்..! நான் குடிச்சிட்டு கலாட்டா பண்றதா சொல்லி வீட்டையும் காலி பண்ணிக்கிட்டு உன்னை கூட்டிகிட்டு வேற எங்கேயோ போயிட்டா..! சரி என்ன விட்டு போனாலும் குழந்தையோட சந்தோஷமா இருக்கட்டும்னு நினைச்சேன்.. ஆனா எம்மக சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியலையே.l உன் முகமெல்லாம் வாடி போயிருக்கே தங்கம்.. உங்கம்மா உன்ன சரியா பார்த்துக்கறது இல்லையா.." சந்திரமதியின் தலையை நாய்க்குட்டியாக தடவி தந்தான் பிரபாகர்..

சந்திரமதி பதில் பேசாமல் அழுது கொண்டிருந்தாள்..

"பேசாம நீ அப்பாகிட்ட வந்துடு செல்லம்..!"

அழுகையை நிறுத்திவிட்டு பிரபாகரனை பார்த்தவளுக்கு அவனோடு சென்று விட அத்தனை ஆசை..! ஆனால் ஏதோ ஒரு பயம் அவளை தடுத்து நிறுத்தியிருக்க பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..

"சரி உனக்கு அப்பா கூட வர இஷ்டமில்லைன்னு நினைக்கறேன்.. நீயாவது சந்தோஷமா இரு.. இது என்னோட போன் நம்பர்" என்று ஒரு துண்டு சீட்டில் தனது எண்ணை எழுதி தந்தவன் "எதுவானாலும் எனக்கு போன் பண்ணு.. உடனே வந்து நிப்பேன்..!" என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்..

அந்த நொடியிலிருந்து தாயை மறந்துவிட்டு தந்தையின் ஞாபகமாகவே சுற்றிக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"பெரிய வீடு.. நீ நெனச்ச மாதிரி சந்தோஷமா இருக்கலாம்.. விருப்பப்பட்டதை செய்யலாம்..! உன் பாட்டியும் தாத்தாவும் உன்னை கண்ணுக்குள்ள வைச்சு பாத்துக்குவாங்க.." போன்ற அன்பொழகும் வார்த்தைகளும்.. அந்த வார்த்தைகளில் விரிந்த கற்பனை காட்சியும் பெற்ற தாயின் மீதிருந்த கொஞ்சநஞ்ச பாசத்தையும் மறக்கடித்து அப்பாவோடு பறந்து செல்லவும்.. அவன் வார்த்தைகளை விவரித்திருந்த அந்த வசதியான வீட்டில் சந்தோஷமாக வாழவும் ஏங்க வைத்திருந்தது அவளை..

ஒரு சின்னஞ்சிறு பெண்ணுக்குள் புதைந்திருக்கும் குழந்தைத்தனமான இயல்பான ஆசைகள் என்றாலும் சுயநல போர்வையோடு சுருண்டு.. பெற்ற தாயைப் பற்றி அக்கறை கொள்ளாமல் போனதுதான் வேதனை..

அப்பா வீட்டுக்கு போய்ட்டா..
அப்பாவோட கை பிடிச்சுகிட்டு ஊரை சுத்தலாம்..

அம்மா மாதிரி இல்லாம நான் கேட்டதெல்லாம் அப்பா வாங்கி தருவார்..

சைக்கிள் ஓட்டலாம்.. டூர் போகலாம்.. என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட இவர்தான் என்னோட அப்பான்னு பெருமையா அறிமுகப்படுத்திக்கலாம்..!


ரிப்போர்ட் கார்டுல சைன் போட என் அப்பா தான் வருவார்.. புது பேனா வாங்கித் தருவார்..

அப்பா மடியில படுத்துக்குவேன்.. அப்பா எனக்கு சோறு ஊட்டி விடுவார்..! பாடம் சொல்லித் தருவார்.. அம்மா மாதிரி என்னை அடிக்க மாட்டார்..

சின்ன நெஞ்சுக்குள் அப்பாவை பற்றி ஏகப்பட்ட கனவு..!

பெற்ற தகப்பனாய் பிரபாகர் சந்திரமதியின் கைப்பிடித்துக் கொண்டு பாசமாக நாலு வார்த்தை பேசியதும்.. அதை உண்மையென நம்பி ஏமாந்து போனவளின் இதயம் அப்பாதான் வேண்டும் என்று பிடிவாதமாக அடம் பிடித்து விம்மத் தொடங்கியது..

"அப்பாவை பாக்கணும் போல இருக்குடி.. நான் எங்கப்பா வீட்டுக்கு போக போறேன்.." பக்கத்தில் அமர்ந்திருந்த கீர்த்தி கிராஃப் வரைவதில் மும்முரமாக இருந்தாளே தவிர இவள் பேச்சை காது கொடுத்து கேட்கவில்லை..

தன் சுக துக்கங்களுக்கு மதிப்பளித்து ஆலோசனை சொல்லும் ஒரே தோழனிடம் மனதிலிருப்பதை மறைக்காமல் பகிர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மகரிஷி அன்று சற்று முன்னதாகவே பள்ளியிலிருந்து புறப்பட்டு விட்டான்.. அப்படியே போகும் வழியில் சந்திரமதியின் பள்ளிக்கு சென்று அவளையும் வண்டியில் ஏற்றிக் கொண்டான்..

"என்ன சந்திராம்மா ஒரே சோக கீதம் வாசிக்கற.."

"அப்பா வந்தாரு ரிஷி.."

"எந்த அப்பா..?" அவன் புருவம் சுருக்கினான்..

"என்ன ஸ்டுப்பிட் மாதிரி கேள்வி கேட்கற என்னோட அப்பா..!" என்றதில் அத்தனை பெருமை அவளுக்கு..

"ஓஹோ..!" சாதாரணமாக சொன்ன போதிலும்.. அருந்ததியின் வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டி போட்ட அந்த மகானுபாவனை எண்ணி அவன் முகம் கடுமையாக மாறியிருந்ததை பின்பக்கம் அமர்ந்திருந்த சின்னவள் கவனித்திருக்க வாய்ப்பில்லை..

"என்ன வேணுமாம்.. உன் அப்பாவுக்கு" கடைசி வார்த்தையில் முகம் சுளித்தான்..

"அப்பா அழுதார்.."

"ஆஹான்..!"

"வீட்டுக்கு கூட்டிட்டு போய் வச்சுக்க முடியலன்னு ரொம்ப கவலைப்பட்டார்.."

"சரிதான்.."

"அம்மா ரொம்ப மோசம் ரிஷி.."

"ஆமாமா ரொம்ப ரொம்ப மோசம்..!"

"அவங்களுக்கு ஏன் அப்பாவை பிடிக்கல..?"

"ஏதாவது காரணம் இருக்கும் சந்திராம்மா..!"

"என்ன பெரிய காரணம்.. அப்பா ரொம்ப நல்லவர்.. அவர்கிட்ட எதுவும் தப்பு இருக்கற மாதிரி எனக்கு தெரியல.. அம்மா தான் ஏதாவது தப்பு பண்ணியிருப்பாங்க..!"

"ம்ம்.. இருக்கலாம்..!"

"எனக்கு அப்பாகிட்ட போகணும் ரிஷி.. அம்மா கூட இருக்க வேண்டாம்.. அவங்கள பார்த்தாலே பிடிக்கல.. அம்மா கூட இருந்தா நான் சந்தோஷமாக இருக்க மாட்டேன்.." சந்திரமதி கண்ணை கசக்கி கொண்டு அழத் துவங்க.. அதை கண்ணாடியில் பார்த்தவன்..

"அய்யோ..! நா தள்ளி..! எந்துக்கு ஏதுஸ்துன்னாவு..?"

என்றபடி அவசரமாக வண்டியை ஓரம் கட்டினான்..

"பாப்பா.. இப்ப எதுக்காக இப்படி தேம்பித் தேம்பி அழற.. யாராவது பாத்தா என்னைதான்டா தப்பா நினைப்பாங்க.. ப்ளீஸ் கண்ண துடைங்க.. அழாதீங்கடாம்மா.. நா வஜ்ரம்ல..!" மென்மையான வருடலோடு தனது கைக்குட்டையை எடுத்து தரவும் கண்களை துடைத்துக்கொண்டாள் சந்திரமதி..

"நான் வீட்டுக்கு போக மாட்டேன்.."

"ஏன் சந்திராம்மா இப்படியெல்லாம் பேசுற.. அம்மா பாவம் இல்ல.."

"அம்மா பாவம் இல்ல நான்தான் பாவம்.. நீ கூட என்னை புரிஞ்சுக்கலையா ரிஷி..!"

நீண்ட மூச்செடுத்தான் ரிஷி.. "இப்ப என்ன செய்யணுங்கற..?"

"நான் அப்பா வீட்டுக்கு போகணும்.."

விழிகளை மூடி திறந்தவன் சில கணங்கள் யோசனைக்கு பிறகு.. "சரி போகலாம் உன் அப்பா வீடு தெரியுமா..?" என்றான் நிதானமாக..

"தெரியாது ஆனா அப்பா ஃபோன் நம்பர் இருக்கு..!"

"நம்பர் குடு" என்று பாக்கெட்டிலிருந்து தனது அலைபேசியை எடுத்தான். புத்தகப் பையின் முதல் ஜிப்பில் வைத்திருந்த துண்டு சீட்டை எடுத்து அவனிடம் தந்தாள் சந்திரமதி..

கோணலான கிறுக்கல் கையெழுத்தை பார்த்து அலைபேசியில் அந்த எண்ணுக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டு சந்திரமதியிடம் தந்தவன் "அப்பா வீடு எங்கிருக்குன்னு கேளு..! உன்ன கொண்டு போய் அங்க விட்டுட்டு வரேன்.." என்றபடி ஃபோனை அவளிடம் தந்தான்..

அப்பா என்று ஆனந்தமாக அழைத்து "வீட்டு அட்ரஸ் சொல்லுங்கப்பா..!" என்ற மகளிடம் விலாசத்தை மளமளவென ஒப்பித்தான் பிரபாகர்..

தெளிவாகக் கேட்டுக் கொண்டு சொன்ன விலாசத்தில் சந்திரமதியை கொண்டு போய் சேர்த்திருந்தான் மகரிஷி..

நல்ல வேளையாக பிரபாகர் வீட்டில்தான் இருந்தான்.. "அப்பா நான் வந்துட்டேன்.. உங்கள தேடி வந்துட்டேன்" துள்ளலோடு ஓடி வந்து அணைத்துக் கொண்ட மகளை கண்டு அவன் முகத்தில் ஈயாட வில்லை..

"நான் சந்திரமதியோட நெய்பர்.." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு.. "அப்பா கிட்ட போகணும்னு சொன்னா.. உங்க மகள கொண்டு வந்து பத்திரம சேர்த்தாச்சு.. இப்ப நான் கிளம்பறேன்" என்று அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் அருந்ததியிடம் நடந்ததை சொல்லியிருக்க..

உலகமே ஸ்தம்பித்துப் போனதாய் இடிந்து போய் அமர்ந்து விட்டாள் அவள்..

பிரபாகர் சந்திரமதியை அழைத்துப் போயிருந்தால் வீறு கொண்டெழுந்து பெண் சிங்கமாய் புறப்பட்டு எப்பாடு பட்டாவது மகளை மீட்டு வந்திருப்பாள்..

ஆனால் இப்போது இந்த விஷயத்தில் ரிஷியின் தலையீடு இருப்பதில் ஒன்றுமே புரியாத நிலை..

பாசங்கொட்டி உயிரை கொடுத்து வளர்த்த மகள் தகப்பன்தான் வேண்டுமென்று தன்னை உதறி தள்ளி விட்டு சென்றதில் நெஞ்சம் அடி வாங்கியிருந்தாள்..

தன்னிலை இழந்து சுற்றம் மறந்து அடிநெஞ்சிலிருந்து கதறியழுது கொண்டிருந்தவளின்
பக்கத்தில் வந்து அமர்ந்தான் ரிஷி..!

"இப்ப எதுக்காக இப்படி அழறீங்க..

அவன் பக்கம் திரும்பியவளின் முகத்தில் கோபமில்லை.. மிகுந்த வேதனை மட்டுமே..

"என்ன மனுஷன் சார் நீங்க..? உங்களை எவ்வளவு நம்பினேன்.. ஏன் இப்படி செஞ்சிங்க..! அந்த அயோக்கியன்கிட்ட கொண்டு போய் என் குழந்தைய விட்டுட்டு வந்துட்டீங்களே..! அந்த பாவி காசுக்காக என் புள்ளைய வித்து குடிச்சாலும் ஆச்சர்யமில்ல.. ஐயோ எம்புள்ள அந்த வீட்ல என்ன பாடு படறாளோ..! கொலைகார கூட்டத்துல என் குழந்தையை தனியா விட்டுட்டு வந்துட்டீங்களே.." என்றவள் சட்டென கண்களை அவசரமாக துடைத்துக் கொண்டு எழுந்தாள்..

"ஒரு நிமிஷம் இருங்க அருந்ததி இப்ப எங்க போறீங்க..?"

"இ.. இப்பவே நான் போய் அவளை கூ.. கூட்டிட்டு வரணும்.. என்னோட மக ஒரு நிமிஷம் கூட அங்க இருக்க கூடாது.."

"நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க.. இப்படி வந்து உட்காருங்க.."

"என்ன சார் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா..! பெத்தவ.. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம என் மகளை அங்க கொண்டு போய் விட்டுட்டு வந்து பொறுமையா இரு நிதானமா பேசுன்னு பாடம் எடுக்கறீங்க.. நீங்க மனுஷன் தானா..! முதல்ல என் பொண்ணு சம்பந்தப்பட்ட முடிவை எடுக்க நீங்க யாரு சார்..!" வேதனையிலும் அழுகையிலும் கோபம் முட்களாய் முகிழ்த்தன..

"உங்க பொண்ணு சம்பந்தப்பட்ட முடிவை எடுக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை.. ஆனா அவளை திருத்தி உங்க கஷ்டத்தையும் பாசத்தையும் புரிய வைக்கிறதா நான் வாக்கு தந்துருக்கேன்.."

அருந்ததி விம்மலுடன் நிமிர்ந்து அவனை பார்த்தாள்..

"முதல்ல அழறதை நிறுத்துங்க அருந்ததி.. வாசல்ல உக்காந்துருக்கோம்..! சுத்தி இருக்கிறவங்க பார்த்தா இஷ்டத்துக்கு கதை கட்டி என் மேல வீண் பழியை சுமத்திடுவாங்க.."

கண்களை துடைத்துக்கொண்டாள் அருந்ததி..

"வெளிச்சத்துல நிக்கற வரைக்கும் உங்க பொண்ணுக்கு இருள் எப்படி இருக்கும்னு தெரிய வாய்ப்பில்ல..! போய் இருட்டுல நின்னு பாக்கட்டும்.. அப்பதான் வெளிச்சத்தோட அருமை தெரியும்.."

அருந்ததி அவனை குழப்பமாக பார்த்தாள்..

"ஒரு மோசமான கணவனால நல்ல அப்பாவா இருக்க முடியாது..! ரெண்டு மூணு நாள் அங்க இருந்தா போதும் சந்திரமதி அந்த மனுஷன் எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுக்குவா.."

"என்னங்க பேசுறீங்க..! அத புரிஞ்சுக்கலைன்னா கூட பரவாயில்ல.. ஆனால் அந்த வீட்ல தங்கறதுனால என் குழந்தைக்கு ஏதாவது ஆகிப்போச்சுனா..?" கண்கள் அசாத்திய பயத்தை வெளிப்படுத்தியது..

"அவளுக்கு ஒன்னும் ஆகாதுங்க.." சந்திரமதி தைரியமான பொண்ணு..

"ஐயோ..! உங்களுக்கு ஒண்ணும் தெரியாது.. அங்க இருக்கறவங்க ரொம்ப மோசமானவங்க.. நீங்க ஒரு கொடூரமான மிருக காட்சி சாலையில என் பொண்ண விட்டுட்டு வந்துருக்கீங்க.."

"என்னங்க.. சந்திரமதியோட கையில பெப்பர்ஸ் ஃப்ரே தந்து அனுப்பியிருக்கேன்.. ஏதாவது பிரச்சனை வந்தா எப்படி தன்னை பாதுகாத்துக்கணும்னு சொல்லி தந்திருக்கேன்.. கைக்குள்ள வச்சுக்கிட்டு பாலும் சோறுமா ஊட்டி வளர்க்கறதுனாலதான் பசியோட அருமை தெரியல..! அப்பா வேணும்னு கேட்டு உங்க அன்பை புரிஞ்சுக்காம வெறுப்பை மட்டுமே தந்தவ அம்மா வேணும்னு கேட்டு ஓடி வர வேண்டாமா..! தயவு செஞ்சு கொஞ்ச நாள் பொறுமையா இருங்க.."

"எ.. எத்தனை நாள்..?" கண்ணீரோடு கேட்டாள் அருந்ததி..

"கொஞ்ச நாள்.. நிச்சயமா அவளே ஃபோன் பண்ணுவா..! அப்போ உங்க மகளை கூட்டிட்டு வந்து உங்க கிட்ட ஒப்படைக்க வேண்டியது என்னோட பொறுப்பு..! பயப்படாம இருங்க.. சந்திராம்மா மேல எனக்கும் அக்கறை இருக்கு.. அவளுக்கு எதுவும் ஆக விட மாட்டேன்..!" அவன் வருடலான பேச்சு ஆறுதலை தந்த போதும் மனம் சமாதானம் அடையவில்லை..

நெஞ்சம் முழுக்க சோகத்துடன் கீழ்நோக்கி விழிகள் வெறித்திருக்க அந்த இடத்தில்தான் மோத்தி அமர்ந்திருந்தான்..

அருந்ததி அழுகிறாள் என்பதை உணர்ந்து தன் முசுமுசுப்பான காலை அவள் கட்டை விரலின் மீது தூக்கி வைத்து முகம் பார்க்க.. எதையும் உணரும் நிலையில் இல்லை அருந்ததி..

"முகத்தை கழுவிட்டு உள்ள போய் வேலையை பாருங்க..!" என்றான் ரிஷி..

"என்ன வேலை..! நான் வந்த உடனே பசிக்குது.. பசிக்குதுன்னு பூனைக்குட்டி மாதிரி என்னையே சுத்தி வருவா..! எவ்வளவு கோவம் இருந்தாலும் சமைச்சு தட்டுல போட்டு வெச்சா எதுவும் பேசாம சாப்பிட்டுக்குவா.. பசி தாங்க மாட்டா..! இப்ப எம்புள்ள சாப்பிட்டாளோ இல்லையோ..! ப்ளீஸ் சார் நான் போய் என் குழந்தையை கூட்டிட்டு வந்துடறேன்.. அவ திருந்தலைனா கூட பரவாயில்லை.. என் கூடவே இருந்துட்டு போகட்டும்.." மீண்டும் எழப் போனவளை..

"நீங்க போய் கூப்பிடறது சரி ஆனா அவ உங்க கூட வரணுமே..! சந்திரமதிக்கு அப்பா தான் வேணுமாம்.. பிள்ளைங்களோட ஆசையை நிறைவேத்தி வைக்க வேண்டியது பெத்தவங்களோட கடமை இல்லையா.. கொஞ்ச நாள் அப்பா கூட இருக்கணும்னு ஆசைப்படுறா.. இருந்துட்டு போகட்டும்.. அவளா வருவா.. இதுக்கு மேல நீங்க போய் கூட்டிட்டு வரணும்னு ஆசைப்பட்டா தாராளமா போய்க்கோங்க நான் தடுக்கல.." கோபமாகவே சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டான் மகரிஷி..

யோசனையாக அமர்ந்திருந்தவளின் பாதத்தின் மீது தனது மோவாயை சாய்த்து கொண்டான் மோத்தி..

இந்த ஆள் கிட்ட உதவி கேட்டுருக்கவே கூடாது.. முட்டாள்தனமா இப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு வந்து அதுக்கொரு விளக்கத்தையும் சொல்லிட்டு நிக்கறாரே.. இவர் பொண்ணா இருந்திருந்தா இப்படி செஞ்சிருப்பாரா..? என் தவிப்பு இங்க யாருக்கு புரியுது.. ஐயோ இப்ப நான் என்ன செய்வேன்.." யோசனையோடு எவ்வளவு நேரம் அங்கே அமர்ந்திருந்தாளோ..!

வீட்டுக்குள் செல்ல வேண்டும் சமைக்க வேண்டும் சாப்பிட வேண்டும் எதுவும் தோன்றவில்லை..!

பட்டினியோடு அந்த திண்ணையில் படுத்து அழுது கொண்டிருந்தாள்..

அதற்கு நேர் மாறாக இங்கே சந்திரமதிக்கு தகப்பனின் வீட்டில் ராஜ மரியாதையோடு இரவு உணவு..

தொடரும்..
3 days ku than... Ellam
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
120
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🍎🍎🍎🍎🍎🍎🍎🍎💯💯💯💯💯💯💯💯💯💯💯🍎🍎🍎🍎🍎🍎🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈⭐⭐💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
 
Member
Joined
Feb 15, 2025
Messages
51
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Top