சூர்யதேவ்.. வருண்ய சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு பின்பற்ற காரணம் அவன் மனநல மருத்துவன் என்பதற்காக மட்டுமல்ல.. தன்னைப் புரிந்து கொண்ட ஒரே நல்ல நண்பன்.. அவன் சொல்லும்படி கேட்பதில் டென்ஷன் குறைந்து மன நிம்மதி ஏற்படுவதை உணர்கிறான் .. நண்பன் சொன்னது சரிதான் என்று அவனுள் நம்பிக்கை ஏற்படுவதாக நினைக்கிறான்..
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ கற்றுக்கொள்.. வருணின் வார்த்தைகளை தீர்க்கதரிசனமாக ஏற்றுக்கொண்டு.. கமலியை அனுசரித்து போக பழகி இப்போது அவளை தன் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக சேர்த்துக் கொண்ட பின்.. அடுத்த கட்டம் என்ன என்ற ஆலோசனைக்காக மீண்டும் நண்பனை தேடி வந்திருந்தான்..
சடாரென்று கதவை திறந்து கொண்டு சூரிய தேவ் உள்ளே நுழைய அவனைத் தொடர்ந்து பின்னால் ஓடி வந்தாள் மாலினி..
"சார் நான் சொன்னதை அவர் கேட்கவே இல்லை" என்ற தோரணையில் அவள் சங்கடத்தோடு விழிக்க.. நீ போ என்று கண்களால் அவளை அனுப்பி வைத்தான் வருண்..
அடுத்து வருணின் பார்வை முறைப்பாக சூர்ய தேவ்வின் மீது நிலைத்தது..
"இந்த பிராடு பைய ட்ரீட்மென்ட் பாக்க லாய்க்கில்லைன்னு சொல்லிட்டு போனவன் எதுக்காகடா திரும்பி வந்த.. போடா இங்கிருந்து..!!" வாசலை நோக்கி கையை காட்ட.. அவன் சொன்னதை ஒரு பொருட்டாக மதியாமல் நக்கலான பார்வையோடு நேராக வந்து இருக்கையில் அமர்ந்தான் சூர்ய தேவ்..
"நான் ஒன்னும் அந்த பிராடு பையல தேடி வரல..!! வருண் பிரசாத்னு எனக்கொரு கல்லூரி நண்பன் இருந்தான்.. சும்மா அவன் கிட்ட பேசிட்டு போகலாம்னு வந்தேன்.." சூர்ய தேவ் நிதானமான குரலில் சொல்ல..
அவனைப் பார்த்தபடியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன்.. "ஓஹோ அப்படி என்ன பேச வேண்டியிருக்கு உன் கல்லூரி நண்பன் கிட்ட" என்று நக்கலாக புருவங்களை உயர்த்தினான் வருண்..
"அது.. உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..!! குரலை செருமிக் கொண்ட சூர்ய தேவ் கண்களில் லேசான பதட்டம் தெரிவதை கண்டு கொண்ட வருண் சீரியஸ் மோடிற்கு தாவினான்..
"சொல்லு.. என்ன விஷயம்..?" நண்பனை ஆர்வமாக பார்வையால் ஊடுருவினான்..
"நான்.. கமலினியை மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறேன்..!!" சூர்யதேவ் சொல்லி முடித்த அடுத்த கணம்.. பக்கத்தில் கண்ணாடி குவளையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை
மடக் மடக்கென்று குடித்தான் மனநல மருத்துவன்.. குவளை காலியாக ஜாடியிலிருந்து தண்ணீர் ஊற்றி மீண்டும் குடித்தான்..
"நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீ என்னடா சீரியஸ்னஸ் இல்லாம மொடா மொடாவா தண்ணி குடிச்சிட்டு இருக்க.." என்றவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தான் ஒரு பார்வை..
"இருடா நண்பா.. நானும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்துக்கறேன்" என்று ஓரிரு கணங்கள் சீரான மூச்சோடு அமைதி காத்தவன் பிறகு நிமிர்ந்து.. "பிராங்க் பண்றியா சூர்யா.." என்றான் நம்ப முடியாத பாவனையோடு.. சூர்ய தேவ் பற்களை கடித்து அவனை முறைக்க..
"இல்லடா இப்படி ஒரு மாற்றத்தை உன்கிட்டருந்து எதிர்பார்க்கல..!! திடீர்னு ஏன் இப்படி ஒரு முடிவு.. கமலியை விரும்பறியா..? அவளை உனக்கு பிடிச்சிருக்கா.." என்றான் ஆர்வத்தில் மின்னிய கண்களோடு..
"அப்படியெல்லாம் எதுவும் இல்லை.. அவளை அனுசரிச்சு போக பழகிக்கிட்டேன்.. அவ்வளவுதான்" என்றான் முன்பக்கமாக நகர்ந்து இரு கைகளை மேஜை மீது ஊன்றி கோர்த்துக்கொண்டவாறு..
வருணின் ஆர்வம் தோய்ந்து விழுந்தது..
"ஏண்டா புரியாத புதிரா இருந்து என் உயிரை வாங்கற..!! பிடிக்கலைன்னு சொல்ற.. அப்புறம் எதுக்காக இந்த கல்யாணம்..?" குழப்பத்தோடு அயற்சியாக பார்த்தான்..
சூர்ய தேவ் சில கணங்கள் மேஜையை பார்த்தவாறு யோசனையோடு அமர்ந்திருந்தான்..
"டேய் சொல்லி தொலைடா.." பற்களை கடித்தான் வருண்..
"அதான் சொன்னேனே.. அவளை அனுசரிச்சு வாழ பழகிட்டேன்.. ஐ மீன் காலையில் எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கற வரைக்கும் கமலி ஏதோ ஒரு வகையில என் அன்றாட வாழ்க்கையோட கலந்திருக்கா.. எனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ.. இந்த வாழ்க்கைக்கு அடாப்ட் ஆகிட்டேன்.. ஒருவேளை அவள் என் வாழ்க்கையை விட்டு போயிட்டா மறுபடியும் இந்த தனிமையையும் வெறுமையும் கட்டிக்கிட்டு என்னால அழ முடியாது.. கமலினி அப்படிங்கிற கேரக்டரை என் வாழ்க்கையிலிருந்து ரிமூவ் பண்ணிட்டா அந்த இடத்தில ஒரு வெற்றிடம் உருவாகுமே அதை என்னால டைஜஸ்ட் பண்ணிக்க முடியல.. வாட் நெக்ஸ்ட் அப்படின்னு என்னால யோசிக்கக்கூட முடியல.. அவ இல்லாத வாழ்க்கை என்னை மூர்க்கமாக்கிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு.. அதனால தான் அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கறேன்.."
"அந்த பொண்ணு இல்லாம உன்னால வாழவே முடியாதுனு தோணுது இல்ல.. அதுக்கு பேருதாண்டா லவ்.. கமலியை உனக்கு பிடிச்சிருக்குடா.." என்றான் நண்பனுக்கு புரிய வைத்துவிடும் நோக்கத்தோடு..
"அதெல்லாம் எனக்கு தெரியாது.. காலையிலிருந்து ராத்திரி வரை அவ என் கூடவே இருக்கற இந்த வாழ்க்கை எனக்கு நிரந்தரமா வேணும்.."
உதட்டை குவித்து ஊதினான் வருண்..
"சரி.. அதான் காதல் இல்லைன்னு சொல்லிட்டியே.. அந்த பொண்ணு உன் கூடவே இருக்கணும் அவ்வளவுதானே..!! அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்.. கடைசி வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் நண்பர்களாகவே இருக்கலாமே..?"
"எப்படி முடியும்.. இப்ப அவ தனிப் பறவை.. எப்ப வேணாலும் என்னை விட்டு விலகிப் போய் தனக்கான வாழ்க்கையை அமைச்சுக்க கூடிய சுதந்திரம் அவளுக்கு உண்டு.. அவளை என் கூட தக்க வச்சுக்க எனக்கு தெரிஞ்ச ஒரே வழி கல்யாணம் மட்டும்தான்.. அதனால தான் இந்த முடிவுக்கு வந்தேன்.."
"தெளிவு.. எல்லாம் சரிதான்டா.. நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறது இருக்கட்டும்.. உன்னை மணக்க அவ சம்மதிக்கணுமே..?"
"அவ கிட்ட பேசிட்டேன்.. யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்கா..!!"
"ஹக்.." தூக்கி வாரி போட.. நெஞ்சை அழுத்தமாக பற்றி கொண்டான் வருண்..
"என்னது..? இன்னொரு தபா சொல்லு.."
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ன்னு கேட்டேன்.. யோசிச்சு பதில் சொல்றேன்னு சொன்னா.." என்றான் வெகு இயல்பாக..
"என்னடா சூர்யா சொல்ற..? திடீர்னு போய் அவகிட்ட கல்யாணம் பண்ணிக்கிறியா ன்னு கேட்டா ஏன் எதுக்குன்னு காரணம் கேட்கலையா.." வருணின் அதிர்ச்சியில் விரிந்த விழிகள் அப்படியே நிலைத்திருந்தன
"கேட்டாளே..!! இதோ இப்ப உன்கிட்ட சொன்ன அதே காரணத்தை அவகிட்டயும் சொன்னேன்.."
"கிழிஞ்சுது..!!"
"ம்ம்.. சும்மா சும்மா ஹாஸ்டல் போறேன் ஹாஸ்டல் போறேன்னு சொல்லிட்டு இருந்தா.. என்னால அவ சொன்னதை டாலரேட் பண்ணிக்கவே முடியல.. அவளை என்கூடவே வச்சுக்க என்ன வழின்னு யோசிச்சேன்.. சட்டுனு கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன்.. உன்ன மாதிரியே அவளும் ஷாக் ஆகிட்டா.. ஏன் திடீர்னு இப்படி கேக்குறீங்கன்னு மென்னு முழுங்குனா.."
"நாம ஒண்ணா இருக்கலாம் இதே மாதிரி நண்பர்களா இருக்கலாம்.. கடைசி வரைக்கும் பிரியாமல் இருக்கலாம்ன்னு சொன்னேன்.. கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்திருந்தா.. அப்புறம் டைம் கொடுங்க யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டா..!!" வார்த்தைகள் தெளிவாக வந்த போதிலும் அவன் கண்கள் அலைப்புறுதலோடு தவித்தன..
"பிரண்ட்ஸா இருக்க போறியா? அப்ப செக்ஸ்..? அதைப்பற்றி எந்த முடிவும் எடுக்கலையா..?"
சூர்ய தேவ் நிமிர்ந்தான்..
"இல்ல அது பத்தியும் தெளிவா பேசிட்டேன்.."
"சூப்பர்.."
"அந்த விஷயத்தில் நான் இனாக்டிவ்ன்னு சொல்லிட்டேன்.."
"அடப்பாவி.." வருணிண் தலைமுடி நட்டுக் கொண்டது..
"உண்மையை சொல்லிடறது பெட்டர் இல்லையா..?"
"டேய் அந்த பொண்ணை தப்பு தப்பா பார்த்தேன்னு நீ தானடா சொன்ன.. நிச்சயமா அந்த பொண்ணு மேல உனக்கொரு தனித்துவமான ஃபீலிங்ஸ் இருக்கு.. அது உண்மைதானே..?"
"அதெல்லாம் எனக்கு தெரியாது.. நான் அவளை வேற மாதிரி பார்த்தேங்கிறதை வைச்சு நான் அந்த விஷயத்துல ஸ்ட்ராங்னு சொல்லிட முடியாதே..!! என்னை பற்றி கமலி முழுசா தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். அதனால எல்லாத்தையும் சொல்லிட்டேன்.."
"உன்ன பத்தி உனக்கே ஒன்னும் தெரியாதேடா.. அந்த பொண்ணு கிட்ட என்ன உளறி வச்சிருக்க தெரியலையே..?" வருண் தலையை இறுக பற்றிக் கொண்டான்..
பிறகு நிமிர்ந்து அமர்ந்து கொண்டு ஆழ்ந்த மூச்செடுத்து நண்பனை தீர்க்கமாக பார்த்தான்..
"உன் பக்கமிருந்து நீ யோசிக்கிறதெல்லாம் சரின்னே வச்சுக்குவோம்.. கமலி பக்கமிருந்து யோசனை பண்ணி பாத்தியா.. அவ மனநிலையை புரிஞ்சிக்க ட்ரை செஞ்சியா..?"
"ஏன் அவளுக்கென்ன..?" சூர்யதேவ் புருவங்கள் கேள்வியாக நெளிந்தன..!!
"கமலி ஒரு டிவோர்சி.."
"தெரியுமே..!! அதனால என்ன.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. முடிஞ்சு போனதை பேசறதால யாருக்கென்ன லாபம்.. இப்போ பிரசண்ட்ல என்கூட இருக்கிற கமலியை தான் நான் கல்யாணம் செஞ்சுக்க விரும்பறேன்.."
"புரியுது.. ஆனாலும் சில விஷயங்களை சொல்ல வேண்டியது என் கடமை.. திருமண வாழ்க்கையில் பல ரணங்களை அனுபவிச்சு அதிலிருந்து மீண்டு வந்தவ..!! உன்னுடனான இந்த இரண்டாவது திருமணம் மறுபடியும் அவளுக்கு புது ரணங்களை தந்துடக் கூடாது.. மறுபடியும் தோத்து போய்டுவோமோங்கற பயத்துலருந்து அவளை மீட்டெடுக்க வேண்டியது உன் பொறுப்பு.. ஒருவேளை கமலி உன்னை மணக்க சம்மதிச்சு நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்.. அவ அவளா இருக்கட்டும்.. நீ நீயா இரு..!! ரெண்டு பேரும் நல்ல நண்பர்களா இருங்க.. அப்புறம் மத்ததைப் பத்தி யோசிக்கலாம்.." வருண் பொறுமையாக எடுத்துச் சொல்ல சூர்ய தேவ் ஆமோதிப்பாக தலையசைத்தான்..
சூரிய தேவ் அங்கிருந்து புறப்படுவதற்காக எழுந்து நிற்க.. "ஒரு நிமிஷம் உன்கிட்ட ஒரு முக்கியமான கேள்வி கேட்கணும்.." என்றான் வருண்..
'சொல்லு.."
"இல்ல நர்ஸ் ஷீலாவ கூடதான் தினமும் ஹாஸ்பிடல்ல பார்க்கற.. அந்த அம்மாவும் ஏதோ ஒரு வகையில உன் அன்றாட வாழ்க்கையின் அங்கமா உன்னை சுத்தி சுத்தி வர்றாங்களே.. நீ ஏன் அவங்களை கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி யோசிக்கவே இல்ல.."
சூர்யதேவ் பேப்பர் வெயிட்டை எடுத்தான்..
"டேய் டேய் இருடா.. இன்னும் முடியல.. சரி அவங்கள விடு.. டாக்டர் காவ்யா.. இந்திரலோகத்து சுந்தரி மாதிரி அப்படி ஒரு அழகு.. ஒருமுறை உனக்கு ப்ரொபோஸ் கூட பண்ணினதா கூட சொன்னியே..!!"
"ஆமா ரிஜெக்ட் பண்ணிட்டேன் இப்ப என்னடா அதுக்கு..?" சூர்யதேவ் சிடுசிடுவென விழுந்தான்..
"இல்ல அவங்க எல்லாருமே உன்கிட்ட தினமும் பேசுறாங்க பழகுறாங்க.. உன் வாழ்க்கையோட கலந்திருக்காங்களே.. இவங்க யாரும் இல்லாம போனா என்ன ஆகும்னு நீ யோசிக்கவே இல்லையா..? காவ்யா ஷீலா.. விஜயலட்சுமி.. மீரா.. ஹான்.. அப்புறம் அந்த கம்பவுண்டர் மணி.. இவங்க யாரையும் உன் வாழ்க்கையோட தக்க வச்சுக்கணும்னு நீ ஏன் முயற்சி பண்ணல.."
"டேய்.. அவங்க எல்லாரும் ஹாஸ்பிடல்ல வேலை செய்ற ஸ்டாஃப்டா ஃபூல்..!!" பற்களை கடித்தான் சூர்ய தேவ்..
"கமலியும் ஹாஸ்பிடல்ல வேலை செய்ற ஸ்டாஃப் தான்.. என்ன.. உன் வீட்ல வாடகைக்கு இருக்கா.. அதனால தினமும் காலையிலும் சாயந்திரம் தினமும் அவளை பார்க்க வேண்டியதாய் இருக்குது..!! ஆனா கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு அவ மட்டும் என்ன ஸ்பெஷல்.." வருண் கேட்க சூர்ய தேவ்வுக்கு பதில் சொல்ல தெரியவில்லை யோசனையோடு நின்றிருந்தான்..
"கமலி வேணும்னு தோணுது ஆனா ஏன் வேணும்னு புரியல..!! சீக்கிரம் புரிஞ்சிடும்.. போயிட்டு வா நண்பா.." என்றான் ஒரு மார்க்கமாக தலையசைத்து..
சூர்ய தேவ் அவனை முறைத்து விட்டு வாசல் வரை சென்று விட்டான்..
"டேய் ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்" என்று மறுபடியும் அவசரமாக அவனை நிறுத்தினான் வருண்..
"என்னடா.. இரு மகனே உன்னை ஒரேடியா கொன்னுட்டு போயிடுறேன்.." பற்களை கடித்தபடி வந்த சூர்ய தேவ் அவனை ஆவேசமாக நெருங்கவும்..
"ஏய்.. இரு மேன்.. இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி என் சந்தேகத்தை தீர்த்து வச்சிட்டு போ" என்று வார்த்தைகளால் அவனை தள்ளி நிறுத்தினான் வருண்
"கேட்டு தொலை..!!"
"இல்ல.. கமலி யோசிச்சு சொல்றேன்னு சொன்னாளே.. ஒருவேளை உன் ப்ரொபோசலுக்கு அவ சம்மதிக்கலைனா..?" வருண் கேட்ட கேள்வியில் சூரிய தேவ் முகம் கசிங்கியது வெளிப்படையாக தெரிந்தது..
பிடரியை கோதியபடி வேறெங்கோ பார்த்தவன் ஒரு கணம் அமைதியாக இருந்தான்..
"எனக்கு தெரியல..!! அடுத்து என்னன்னு அவ சொல்லப் போற முடிவுக்கு பிறகு தான் யோசிக்கணும்" என்றான் அவன்..
சூர்யதேவ்வை காட்டிலும் வருண்தான் கலவரமாக தெரிந்தான்..
சூர்ய தேவ் மணக்கச் சொல்லி கேட்டதில் உடனடியாக மறுக்க முடியாத சங்கடத்தோடு யோசித்து சொல்கிறேன் என்று கமலி சொல்லியிருக்க வாய்ப்புண்டு..
ஆனால் அவள் நிச்சயம் சம்மதிக்க போவதில்லை..!!
முதல் திருமணம் எனும் கசப்பான கடந்த காலங்களிலிருந்து வெளியே வந்திராதவள் இரண்டாம் திருமணத்தைப் பற்றி யோசித்திருக்க கூட மாட்டாள்.. மனதளவில் இன்னொரு திருமணத்திற்கு தயாராகாதவன் சூர்ய தேவ்வை எப்படி மணக்க சம்மதிப்பாள்.. வாய்ப்பே இல்லை..
கமலி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பதை தெளிவாக உணர்த்திவிட்டான் சூர்யா.. ஒருவேளை கமலி மணக்க மறுத்துவிட்டால் அந்த துயரத்தை எப்படி தாங்க போகிறான்.. வருணுக்கு கவலையாக இருந்தது.. கமலியை அழைத்து இது பற்றி பேசலாமா என்று கூட சிந்தித்து கொண்டிருந்தான்..
ஒரு சதவீதம் கூட கமலி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என்பது அவன் கணிப்பு..
ஆனால் கமலி வருணை நேரில் சந்திக்க வந்திருந்தாள்..
நான் டாக்டர் சூர்யதேவ்வை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன் என்ற செய்தியோடு..
ஆனந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் போட்டி போட்டு வருணை மூழ்கடித்துக் கொண்டிருந்தன..
இருவருக்கும் இடையில் ஓரிரு சந்திப்புகள் மட்டுமே நிகழ்ந்திருந்தாலும்.. மருத்துவன் என்பதை தாண்டி ஒரு நண்பனாக வருணிடம் தோழமையோடு பழக ஆரம்பித்திருந்தாள் கமலினி..
"என்னை உங்க பிரண்டா நினைச்சு மனம் விட்டு பேசுங்க" என்றுதான் வருணும் அவளிடம் சொல்லி இருந்தான்..
"விவாகரத்தாகி ஆறு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள இரண்டாம் கல்யாணம்.. நான் மோசமானவளா வருண்..?" பத்தாம் பசலித்தனமான அவள் கேள்வியில் வருணுக்கு சிரிப்பு வந்துவிட்டது..
"இங்க யாருமே மோசமானவங்க இல்ல கமலி.. தனக்கேத்த மாதிரி கம்பர்டபிளான சந்தோஷமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க எல்லாருக்கும் உரிமை உண்டு.. உனக்கு சூர்யாவை பிடிச்சிருக்கா..?" வருண் கேட்க.. கமலி அமைதியாக இருந்தாள்..
வருண் அவள் பதில் சொல்வதற்காக காத்திருந்தான்..
"டாக்டரை ஒரு நல்ல நண்பரா பார்த்தேன்.. திடீர்னு வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அவர் கேட்டவுடனே எனக்கு ஒண்ணுமே புரியல.. ரெண்டு நாள் யோசிச்சேன்.. என்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் சந்தோஷமா வாழும்போது நான் மட்டும் ஏன் தனிமையை கட்டிக்கிட்டு அழனும்னு தோணுச்சு.. அதனால அவரை கல்யாணம் பண்ணிக்கிறதா முடிவெடுத்திருக்கேன்.."
"சோ யாரோ ஒருத்தருக்கு நீங்க சந்தோஷமா வாழறதை நிரூபிக்கிறதுக்காக.. சூர்யாவை மணக்க முடிவு பண்ணி இருக்கீங்க அப்படித்தானே..?"
கமலி பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்..
"கமலி.. நீங்க மனசார சூர்யாவை அப்படியே ஏத்துக்கிட்டு திருமணம் பண்ணிக்கிறதா இருந்தா எனக்கு சந்தோஷம்.."
"ஆனா இன்னொருத்தருக்கு நீங்க சந்தோஷமா இருக்கிறதாக காட்டிக்கவோ.. இல்ல உங்களை நீங்களே திருப்தி படுத்திக்கவோ.. இந்த கல்யாணம் செஞ்சுக்கிட்டா ஐ அம் சாரி டு சே திஸ்.. உங்களை நீங்களே ஏமாத்திக்கறதா அர்த்தம்.."
கமலி வருணை அடிபட்ட பார்வை பார்த்தாள்..
"நிச்சயமா இன்னொரு வாழ்க்கையை தேடிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.. அதுக்கு பெஸ்ட் சாய்ஸ் சூர்ய தேவ்.. நான் மறுக்கல.. ஆனா ஒருத்தர் மேல ஒருத்தர் விருப்பப்பட்டு திருமண பந்தத்துல இணைஞ்சா தான் அந்த வாழ்க்கை சிறப்பாக அமையும்.."
"ஆனா டாக்டர்.. பிரண்ட்ஷிப்பை தாண்டி நமக்குள்ள வேற எந்த அட்டாச்மென்ட்ஸும் இருக்காது.. இப்ப இருக்கிற மாதிரியே லைஃப் லாங் இருக்கலாம்னு சொன்னாரே..!!" கமலி முன்மொழிந்த வார்த்தைகளில் சிரித்தான் வருண்..
"சோ.. முறையான திருமண உறவுக்கு நீங்க இன்னும் தயாராகல.." என்று சொல்ல கமலி தலை குனிந்தாள்..
"சூர்ய தேவ் தன்னை பத்தின உண்மைகள் எல்லாத்தையும் உங்ககிட்ட சொன்னான் இல்லையா..?"
"ஆமாம் வருண்.."
"சரி இப்ப நீங்க பிரண்ட்ஸாகவே உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கங்கறீங்கன்னு வச்சுக்கலாம்.. ஒருவேளை அவனுக்குள்ள உணர்ச்சிகள் விழிச்சிகிட்டா.. ஒரு பிரண்டா இல்லாம மனைவியா உங்க கூட வாழனும்னு அவனுக்கு ஆசை வந்துட்டா..?"
"வருண்..?"
"அந்த நேரத்துல உங்க சுயநலத்துக்காக அவன் ஆசைகளுக்கு நீங்க தடை விதிச்சா.. அது பெரிய பாவம் இல்லையா..!! தன்னால எதுவுமே முடியாதுங்கற விரக்தியில்.. வெறுப்பில் இந்த உலகத்தை தள்ளி வச்சுக்கிட்டு தனக்குன்னு ஒரு வட்டத்தை போட்டுக்கிட்டு வாழ்ந்தவன் அவன்.. ஒருவேளை கல்யாணத்துக்கு பிறகு அவனுக்குள்ள ஆசைகள் உருவாக ஆரம்பிச்சு.. அந்த எண்ணத்தோடு சூர்யா உங்களை நெருங்கும்போது நீங்க மறுத்து அவனை தள்ளி வச்சுட்டீங்கன்னா.. உங்க நிராகரிப்பு அவன் மனசை எந்த அளவு பாதிக்கும்னு தெரியுமா..?"
கமலி பதில் சொல்ல முடியாமல் குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தாள்..
"இங்க பாருங்க கமலி ஒரு மனைவியா ஒரு காதலியா ஒரு தோழியா அவனுக்கு எல்லா விதத்திலும் உங்களால் துணையாய் இருக்க முடியும்னா.. இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லுங்க.. இல்லைனா எப்பவும் போல நாம நண்பர்களாகவே இருக்கலாம்னு நாசுக்கா சொல்லி மறுத்துடுங்க..!!" என்று விட்டு கமலியின் முகத்தைப் பார்த்தான் வருண்..
அவனுக்கு நன்றாகவே தெரிகிறது சூர்ய தேவ் கமலியை காதலிக்கிறான்.. என்றாவது ஒருநாள் இருவரும் கணவன் மனைவியாக வாழ வாய்ப்புண்டு.. என்ற நம்பிக்கை இருக்கிறது..
ஆனால் குழப்பத்திலிருக்கும் இந்த பெண்.. வெண்ணை பொங்கி வரும் வேளையில் தாழியை உடைப்பது போல்.. ஏதாவது ஏடாகூடம் செய்து திருமண வாழ்க்கையை சொதப்பிக் கொள்ளக் கூடாதே..!! என்ற கவலையும் அக்கறையும்..
கமலி தீவிரமாக யோசித்தாள்..
"விளைச்சல் இல்லாத வறண்ட நிலம் உனக்கு என்னைத் தவிர வேற எவன்டி வாழ்க்கை கொடுப்பான்.. பைத்தியமா என் பின்னாடி சுத்தி என்னை காதலிச்ச உனக்கு.. என் காலடியில் விழறதை தவிர வேறு வழியும் இல்ல.. இன்னொருத்தனோட வாழ அருகதையும் இல்லை.. உன் முரட்டு பிடிவாதத்தை ஓரங்கட்டி வச்சிட்டு.. அனுசரிச்சு என் கூட வந்து வாழற வழியை பாரு.. இல்லைன்னு வச்சுக்கோ இப்ப சொல்றேன் டி.. எண்ணி ஆறே மாசத்துல.. பைத்தியம் பிடிச்சு துணியை கிழிச்சுகிட்டு ரோடு ரோடா திரிவ.. ஏன்னா நீ என்னை அந்த அளவு வெறித்தனமா காதலிச்சிருக்க..!!" என்று ஒரு காலத்தில் இருவருக்கும் இடையே நிகழ்ந்த அந்தரங்க தருணம் ஒன்றை சொல்லி அவள் காதுகளை கூச வைத்த அஷோக்கின் பேச்சு நெஞ்சடைக்க வைத்ததில் கண்கலங்கி விழிகளை இறுக மூடிக்கொண்டாள் கமலி..
காதலிக்கல.. காதலிக்கல.. உன்னை அறவே வெறுக்கறேன்டா.. நீ எனக்கு வேண்டாம்..
இதை எப்படி நிருபிப்பது..!!
இது என்றோ ஒருநாள் நடந்த உரையாடல் அல்ல.. சமீபத்தில் சூரியதேவ்வோடு நட்புறவாக பழக தொடங்கிய நாட்களுக்கு பின் அஷோக்கோடு நடந்த சம்பாஷனை..
அவன் அலைபேசி எண்ணை பிளாக் செய்த பிறகும் வெவ்வேறு எண்களிலிருந்து அழைத்து தொந்தரவு செய்கிறான் இந்த அஷோக்..
மீண்டும் போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று அவனைப் பற்றி கம்பளைண்ட் கொடுக்கவோ கண்காணாத இடத்திற்கு ஓடி ஒளியவோ அவளிடம் பலமில்லை..
மறுபடியும் துவண்டு போனவள் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த வேளையில்தான் சூர்யதேவ் மணக்க சொல்லி சம்மதம் கேட்டிருந்தான்..
"கமலி என்ன யோசிக்கறீங்க..?" வருண் அழைத்ததில் உணர்வு பெற்று மீண்டு வந்தாள்..
"என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..?"
"டாக்டரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்.." தீர்க்கமாகச் சொன்னாள் கமலி..
தொடரும்..
மனநல மருத்துவா மனச தொட்டுட்ட போ நல்ல நட்பு கிடைக்க அது நிலைக்க கூட கடவுள் கண்ண டொபுக்குனு திறக்கனும் 🤣🤣🤣🤣🤣🤣அருமை நண்பனோட வாழ்க்கை பத்தின உன்னோட தொலைநோக்கு பார்வை என்ன மெயி சிலிர்க்க வச்சிடுச்சி 😘😘😘😘அதே நேரம் கமலி பத்தின உன்னோட கருத்தும் சரிதான் அவளுக்கும் நீ மருத்துவன் மட்டுமில்ல மனமறிந்த உற்ற நண்பன்ங்கறத ஊர்ஜிதம் பண்ணிட்ட 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
இதுக்கப்பறமாவது கமலி சூர்யா வாழ்க்கை அவங்க மனசுபடி சந்தோஷமா அமையனும்
அத பார்த்து அந்த நாதாரி அஷோக் புழுங்கி சாகனும் 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️