மறுநாள் காலையில் மாடி வீட்டு கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..
கதவை திறந்து கொண்டு கொட்டாவியோடு தூங்கி வழிந்தபடி டாக்டரிடம் குட் மார்னிங் சொன்ன மாயாவை கண்டு அவன் முகத்தில் அத்தனை எரிச்சல்..
விடிந்தும் விடியாதமாக உன் முகத்தை பார்க்கவா ஓடோடி வந்தேன் என்பதைப் போல் அவன் பார்வையில் பிரதிபலித்த வெறுப்பை கண்டு.. தூக்கம் தொலைதூரம் போய்.. "இ.. இதோ கமலியை வர சொல்றேன்.." என்று உள்ளே ஓடிவிட்டாள் மாயா..
"டாக்டர் சார்..!!" என்று மாயாவை போல் கண்களில் தூக்கம் வழிய கலைந்த முடி நெற்றியில் புரள.. முன்னே வந்து நின்றவளை கண்டதும் அவன் விழிகள் புத்தம்புது கோலி குண்டாய் மின்னியது..
"ஜாகிங் வரலையா..?" அவன் குரல் கூட ஆழ்ந்து இறங்கியது..
"இன்னைக்குமா..?" சின்ன குழந்தை போல் சிணுங்கி சலித்தாள்..
"ஏன் இன்னைக்கு என்ன..?" ஒன்றும் புரியாதவனாய் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்..
"நேத்துலருந்து ரொம்ப டயர்டு.. இன்னைக்கு ஒரு நாள் தூங்கட்டுமா.. ப்ளீஸ்..!!" உறக்கத்தின் மயக்கத்தில் நிற்க கூட வழியில்லாமல் அவன் மீது சாய வந்தவளை தாங்கி பிடிப்பதற்காக இரு கைகளை சடக்கென்று நீட்டியிருந்தான் சூர்யதேவ்..
ஆனால் கமலி அவன் மீது சாயவில்லை.. நிலையாக கால்களை ஊன்றி நின்றிருந்தாள்.. ஏமாற்றத்தில் முகம் சிவந்தது..
"நான் வேணும்னா வெயிட் பண்ணட்டுமா..?" என்றவனை கண்களை அகல விரித்து பார்த்தாள்..
"நான் வரலங்கறேன்.. இவர் ஏன் வெயிட் பண்றேங்கறார்.. நான் சொன்னது இந்த மனுஷனுக்கு புரிஞ்சுதா இல்லையா.." என்ற ரீதியில் மலங்க மலங்க விழித்தவள்..
"இல்ல எனக்கு தூக்கம் வருது.. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும்.. ஒன்பது மணிக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் போகணுமே..!!" அவள் தயக்கத்தோடு இழுக்க.. பூமி தாழ்ந்த பார்வையுடன் ஒரு கனம் ஆழ்ந்த மூச்செடுத்தவன்.. எதுவும் பேசாமல்
அங்கிருந்து கீழே இறங்கி சென்றிருந்தான்..
அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்த கமலி மெல்ல வீட்டை விட்டு வெளியேறி பால்கனியில் வந்து நின்றாள்..
கீழே இறங்கிய டாக்டர் இந்நேரம் கதவை திறந்து கொண்டு சாலையில் இறங்கி ஓடியிருக்க வேண்டுமே.. ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லையே..!!
"என்ன ஆச்சு.. அதுக்குள்ள இந்த ரோட்டை கடந்து போயிட்டாரா..? ஜாகிங்தானே.. ரன்னிங் ரேஸ் ஒன்னும் இல்லையே..?" விழித்தபடி சாலையில் அவனை தேடியவள்.. ஒருவேளை வீட்டுக்குள்ள போய்ட்டாரோ..? என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில்..
அவன் ஷூ இரண்டும்.. கோலமில்லாத வெற்றுத் தரையில் பறந்து வந்து விழுந்தது..
ஹக்.. இதயம் தூக்கி வாரிப் போட அதிர்ச்சியாக அந்த ஷூவை பார்க்கிறாள் கமலி..
"ஐயோ டாக்டருக்கு ஏன் இவ்வளவு கோபம்.. தினமும் எழுந்து இவர் கூட ஜாகிங் போக நான் என்ன இவர் செக்ரெட்டரியா.. ம்கூம்.. ரொம்பத்தான்.." உதட்டை சுழித்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்..
கமலி கட்டிலில் ஏறி படுக்க..
"என்னவாம் டாக்டருக்கு..?" தூக்கத்தில் உளறினாள் மாயா?
"ஜாகிங் வர சொல்லி கூப்பிட்டார்..!! என்னால முடியலன்னு சொன்னேன்.. கோவமா திரும்பி போயிட்டார்.." என்றபடி அருகில் படுத்து கமலி கண்களை மூட.. மாயாவோ சட்டென தலையை தூக்கி கமலியை ஒரு பார்வை பார்த்தாள்.. அதற்குள் கமலி ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றிருக்க.. மாயாவும் யோசனையோடு தலையணையில் சாய்ந்து கண்களை மூடியிருந்தாள்..
எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட வந்து அமர்ந்து விட்டான் சூர்யதேவ்..
சுடிதாரில் நின்றிருந்த கமலியை கண்டு.. கண்கள் இடுங்கி "இன்னும் தயாராகலையா நீ..?" கடுகடுப்பான குரலில் கேட்க..
"அவ்வளவுதான்.. சாப்பிட்டு ரெடியாக வேண்டியதுதான்..!!" என்றவள் சுவிட்ச்சை தட்டின ரோபோட் போல் கணவனுக்கு தேவையானதை எடுத்து வைத்து பரிமாறினாள்..
மாயாவுக்கு தான் இருவருக்குமிடையில் அமர்ந்திருக்க சற்று அசௌகரியமாக இருந்தது.. அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை..
கமலி மாயாவிடம் பேசிக்கொண்டே சற்று தொலைவிலிருந்த சட்னி கிண்ணத்தை எட்டி எடுக்க.. சுடிதாருக்குள் அடங்கியிருந்த தாலி துள்ளி வெளியே குதித்து அவன் முகத்தில் முத்தமிட்டு மோதியது..
உணவை அசை போட்டுக் கொண்டிருந்த இதழ் அப்படியே நின்றுவிட.. நிமிர்ந்து கமலியை பார்த்தான் சூர்யதேவ்..
அப்போதுதான் அவன் அணிவித்த மாங்கல்யம் வெளியே வந்து விழுந்திருப்பதை கவனித்தாள்..
கமலி..
"ஐயோ சாரிங்க.. கவனிக்கல..!!" அவசரமாக தாலியை எடுத்து உள்ளே போட்டுக்கொள்ள.. அமைதியாக உணவில் கண் பதித்தவன் மீண்டும் ஒரு முறை நிமிர்ந்து கமலியை முழுமையாக பார்த்துவிட்டு மீண்டும் உண்ண துவங்கினான்..
எப்போதும் சூர்யதேவ் எதிர்பக்கம் அமரும் கமலி.. இன்று அந்த இடத்தில் மாயா அமர்ந்திருந்த காரணத்தால் அவன் பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..
"உஃப்.." என இதழ் குவித்து பெரிதாக மூச்சு விட்டான் சூர்யதேவ்..
"என்னாச்சு.. காரமா..?" தண்ணீர் குவளையை அவன் பக்கம் நகர்த்தி வைத்தாள் கமலி..
இல்லை என்றவன் மீண்டும் உணவில் கண் பதித்துக் கொள்ள.. கமலி மாயாவிடம் பேசிக்கொண்டே உண்ணத் தொடங்கினாள்..
சூர்ய தேவ் அவர்கள் பேச்சில் குறுக்கிட வில்லை.. அவ்வப்போது நிமிர்ந்து கமலியை பார்த்துக் கொண்டானேயன்றி அவன் பார்வை தப்பி தவறி கூட மாயாவின் மேல் விழவில்லை..
சூர்ய தேவ் கண்ணசைவிலிருந்து.. கமலியின் தாலி பட்டதும் அவனிடம் தோன்றிய லேசான இதழ் நடுக்கம்.. பிறகு கமலியை ஆழ்ந்து துளைத்த அவன் பார்வை என ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் மாயா..
உண்டு முடித்ததும்.. அவன் கீழே இறங்கி சென்றுவிட.. இரண்டு பெண்களும் சுடிதாரிலிருந்து புடவைக்கு மாறி.. ஒப்பனை செய்து கொண்டு கீழே இறங்கி வந்தனர்..
அந்த நேரம் சூர்ய தேவ் வாசல் படிகளில் இறங்கியிருந்தான்..
வெளிர்நிற ஆரஞ்சு நிற ஃபார்மல் சர்ட்.. பிளாக் பேன்ட் அணிந்திருந்தவன் தலையைக் கோதி சமன் செய்தபடி மாடியிலிருந்து இறங்கி வந்த கமலியை கண்களை சற்று அகலமாகவே திறந்து அள்ளி விழுங்குவது போல் பார்த்தான்..
பார்டரில் மெருன் நிற ஜரிகை வைத்திருந்த வெளிர் ஆரஞ்சு நிற காட்டன் புடவை அணிந்திருந்தாள் அவள்..
டாக்டரும் அதே நிறத்தில் சட்டை அணிந்திருப்பதை கண்டு அவள் புன்னகைக்க.. அவனோ இமைக்க மறந்தான்..
பக்கத்தில் வந்து நின்றவள் "போகலாமா?" என்று கேட்க வாயெடுக்க..
"இன்னைக்கு பட்டுப் புடவை கட்டலையா..?" என்றான் மிக மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி..
"இ.. இல்ல.. இன்னைக்கு ரிஜிஸ்டர்தானே பண்ண போறோம்.. அதனால சிம்பிளா வரலாம்னு.. ஏன் நல்லா இல்லையா..? உங்களுக்கு தெரிஞ்ச மிக முக்கியமானவங்க யாராவது வராங்களா..?" தன்னை குனிந்து பார்த்தவள்.. விழிகளை விரித்து கேட்ட தோரணையில் குரலை செருமிக் கொண்டவன்.. இல்லை என்ற தலையசைத்துவிட்டு முன்னால் நடந்தான்..
அவன் ஓட்டுநர் இருக்கையில் ஏறிக்கொள்ள பெண்கள் இருவரும் பின்னால் ஏறிக்கொண்டனர்..
பக்கத்தில் பார்த்தவன் கமலி இல்லாததை கண்டு பின்னால் திரும்பிப் பார்த்தான்..
இரு பெண்களும் மிக சுவாரஸ்யமாக ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.. மேல் கண்ணாடியில் ஒரு முறை கமலியை பார்த்துவிட்டு வண்டியை எடுத்தான்..
அவர்களுக்கு முன்பாகவே வந்திருந்தான் வரூண்.. அவன் புஜத்தை இறுகப் பற்றிக் கொண்டு துரு துருவென ஒரு இளம் வயது பெண் அவனோடு மிக நெருக்கமாக நின்றிருப்பதை பார்த்துக்கொண்டே மூவருமாக நடந்து வந்தனர்..
"யாருடி அந்த பொண்ணு..?" மாயா கேட்க..
"தெரியல அவர் வைஃபா இருக்கும்னு நினைக்கிறேன்.." என்றாள் கமலி..
"நேரமாச்சு.. ஆடி அசைஞ்சு வரீங்க.. ரெஜிஸ்டரார் வெயிட்டிங்.. சீக்கிரம் வாங்க.." அவன் முன்னே செல்ல அந்தப் பெண் அவன் கையை பற்றி தொங்கிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக அவனை பின்தொடர்ந்தாள்..
சுடிதார் சொர்க்கமாக சிக்கென்று கூந்தலை விரித்து விட்டுக்கொண்டு.. குழந்தை முகத்தில் ஒரு குமரியாக.. அழகே வடிவமான அந்த பெண் வருண் பின்னால் ஓடியதில் ஏதோ வித்தியாசமாக தோன்ற மாயா கமலியிடம் கேள்வியாக உதட்டைப் பிதுக்கினாள்..
சான்றிதழ்களை சமர்ப்பித்து பார்மாலிட்டிஸ் முடித்து கமலி.. சூர்யா இருவருமாக நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட்டனர்..
வருண்.. மாயா சாட்சி கையெழுத்து போட்டனர்..
"சம்பிரதாயபடி மட்டுமல்ல சட்டப்படியும் நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி ஆகிட்டீங்க..!! வாழ்த்துக்கள்.." புன்னகை ததும்ப இருவரின் கைப்பற்றி குலுக்கினான் வருண்..
வெளியேறி அந்த அலுவலக வராண்டாவில் நின்று கொண்டனர் ஐவரும்..
கொஞ்சம் கூட விலகாமல் குழந்தை போல் அவனை ஒட்டிக் கொண்டிருந்த பெண்ணை காட்டி..
"இவங்க யாரு? நீங்க இண்ட்ரடியூஸ் பண்ணவே இல்லையே வருண்..?" என்று அந்தப் பெண்ணை பார்த்து புன்னகைத்தாள் கமலி..
அதற்காகவே காத்திருந்ததை போல்.. சினேகத்தை புன்னகையில் வழிய விட்டவளாய்..
"ஹாய்.. அக்கா.. நான் தேம்பாவணி..!! நீங்க கமலி.. டாக்டர் சூர்ய தேவ்.. கரெக்ட்.. அப்புறம் இவங்க..?" என்று யோசனையாக மாயாவை பார்த்தாள் தேம்பாவணி..
"நான் மாயா.." அவள் லேசாக புன்னகைக்க..
"ஓஹ்.. ஹாய்.." என்று சிரித்தாள் தேம்பா..
அவள் சிரிப்பையும் லூட்டிகளையும் வருண் ரசித்ததாக தெரியவில்லை..
சங்கடத்தோடு நெற்றியை தேய்த்தவன்.. "அவ்ளோ தானடா.. அப்போ கிளம்ப வேண்டியதுதானே..? போகலாமா தேம்பா" என்று அவளை அங்கிருந்து நகர்த்தி செல்வதிலேயே குறியாக இருந்தான்..
"ஏன் இவ்வளவு அவசரம்.. கொஞ்ச நேரம் அவங்க கிட்ட பேசிட்டு போகலாமே.." அவன் கையிடுக்கில் கரம் நுழைத்து விரலோடு விரல் கோர்த்திருந்த அந்தப் தேம்பா நிமிர்ந்து கொஞ்சலாக வருணை பார்த்தாள்..
"என்ன தேம்பா..!! நீ கம்பெல் செஞ்சதுனாலதான் உன்னை இங்க கூட்டிட்டு வர வேண்டியது போச்சு.. எனக்கு நிறைய வேலை இருக்கு உன்னை கொண்டு போய் விட்டுட்டு நான் கிளினிக் போகணும்.. போகலாம்.." வருண் அழுத்தமான குரலில் சொல்ல..
தேம்பா ஏதோ பேச வருவதற்கு முன் அவள் அலைபேசி சத்தமாய் அலறியது..
எடுத்து காதில் வைத்தவள்.. "ஹலோ.. ஹான் சத்யா.. இதோ இதோ வந்துட்டேன்.. பிரண்டோட கல்யாணத்துக்கு வந்தேன்ப்பா.." என்றவள் பேசிக்கொண்டே கண்களால் அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று கொண்டு வருண் காரில் ஏறியிருந்தாள்..
அந்தப் பெண் கண்ணிலிருந்து மறைந்த பிறகு கமலி ஆர்வமாய் வருண் பக்கம் திரும்பினாள்..
"வருண் யார் இது.. கேர்ள் பிரண்டா..?" என்று கேட்க..
கடுப்போடு அவளைப் பார்த்தவன்.. "ம்கூம்.. என்னோட பேஷன்ட்.. எப்படியோ மோப்பம் பிடிச்சுகிட்டு என் கூட தொத்திக்கிட்டு வந்துட்டா.." என்றான் சலிப்பாக.
"என்ன சார் பேஷன்ட்ன்னு சொல்றீங்க.. அந்த பொண்ணு அவ்வளவு க்ளோசா உங்க கூட பழகுது.. இதெல்லாம் நம்பற மாதிரி இல்லையே.." சந்தேகமாக கண்களைக் குறுக்கினாள் மாயா..
"என்னமா பண்றது.. எனக்கு வாய்க்கறதெல்லாம் இப்படித்தான் இருக்குது.. என் நேரம் அப்படி.." பெருமூச்சுவிட்டபடி நெஞ்சில் வேகமாக தட்டிச் சொன்னான் வருண்..
"பேஷண்டா இருந்தா என்ன.. பொண்ணு அழகா இருக்குது.. உங்க கிட்ட நெருங்கி பழகுது.. குணமும் நல்ல மாதிரி தான் தெரியுது.. பேசாம அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்களேன்..!!" என்றாள் கமலி..
வருண் தாடையை தேய்த்தபடி..
"கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனா அதுக்கு ரெண்டு பேர் சம்மதிக்கணுமே..?" என்றான் யோசனையாக..
"யாரு..? உங்க அப்பா அம்மாவா..?"
"இல்ல.. என் பொண்டாட்டியும் அந்த பொண்ணோட புருஷனும்.."
ஆங்.. என்று மாயா கமலி இருவரும் விழிக்க..
"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்க.. அப்புறம் தேம்பா போன்ல பேசிட்டு போனாளே.. அது யாருன்னு நினைக்கறீங்க.. அவளோட ஹஸ்பண்ட்.. அவளை பர்பெக்டா குணப்படுத்தி அவளோட கணவர் கிட்ட ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கு.." அவன் நிதானமாக எடுத்துச் சொல்ல. பெண்கள் இருவரும் அதிர்ச்சி மாறாமல் நின்றிருந்தனர்..
"அந்த பொண்ணுக்கு அப்படி என்ன பிரச்சனை..?"
"ம்ம்.." என்று உதட்டை பிதுக்கியவன்.. "ஹாலுசினேஷன்.. அவ இஷ்டத்துக்கு எதையாவது கற்பனை பண்ணிக்குவா.. ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு.. இன்னும் ரெண்டு சிட்டிங் முடிஞ்சுதுன்னா.. ஷீ வில் பி ஆல்ரைட்.." என்றான் இயல்பாக தோள்களை ஏற்றி இறக்கி..
அடுத்து வருண் அலைபேசி ஒலித்தது..
எடுத்து காதில் வைக்க.. "என்னங்க போன வேலை முடிஞ்சுதா.. எப்ப திரும்பி வருவீங்க..!! அத்தை உங்ககிட்ட ஏதோ பேசணுமாம் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வரீங்களா..?" எதிர் முனையில் ஒரு பெண் குரல்..
"ஹான்.. இதோ வந்துட்டேன்ம்மா.. டென் மினிட்ஸ்.. வீட்ல இருப்பேன்.." என்றவன்..
"நான் போகணும் நண்பா..!! பொண்டாட்டி வர சொல்லிட்டா.. இன்னொரு நாள் சந்திப்போம்.." என்றவன் ஓட்டமும் நடையுமாக தனது காரை நோக்கி செல்ல..
சூர்ய தேவ் இரண்டடி எடுத்து வைத்தது கமலியின் அருகே வந்தான்..
"ஒருத்தனை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பேசிட்டே போனா என்ன அர்த்தம்..?" என்றான் விழிகளை கூர்ப்பாக்கி..
"அவனுக்கு கல்யாணம் ஆகிட்டதுன்னு உனக்கு தெரியலைன்னாலும் என்கிட்ட கேட்டு தெரிஞ்சிருக்கணும்.."
"இ.. இல்ல டாக்டர்.. அந்த பொண்ணு வருண் கூட ரொம்ப நெருக்கமா நின்னுட்டு இருந்ததா.. அதனால தப்பா நினைச்சுட்டேன்..!!" சங்கடமாக அவனைப் பார்த்தாள் கமலி..
"கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பது பொய்.. உனக்கு தெரியாதா.." பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு நின்றிருந்தவன்.. அவளை குறுகுறுவென்று பார்த்து புருவங்களை உயர்த்தினான்..
கமலி பதில் சொல்ல முடியாமல் பரிதாபமாக நின்றிருக்க.. கடந்த இரண்டு நாட்களாக டாக்டரின் புது அவதாரத்தை பார்த்த மாயா.. இன்று வருண் வேறு குட்டையை குழப்பி விட்டுப் போனதில் ஙேவென விழித்தபடி நின்றிருந்தாள்..
வீட்டுக்கு போகலாம் என்றவன் கமலிக்கு முன்பாகவே காரின் அருகே சென்று முன் பக்க கதவை திறந்து விட்டிருக்க.. தோழியை திரும்பி பார்த்தாள் கமலி..
"ஏறு கமலி.." என்ற மாயா பின்பக்க கதவை திறந்து உள்ளே ஏறி இருந்தாள்..
கமலி முன்னால் ஏறிக் கொள்ள.. டாக்டர் சிரித்ததை போல் மாயாவிற்கு தோன்றியது.. ஆனால் அது உண்மையல்ல என்று அவளாகவே நினைத்துக் கொண்டாள்..
வீட்டுக்கு வந்த மாயா தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருக்க.. கமலி வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்..
"ஏய் கமலி.. உனக்கு டாக்டர் பிடிக்குமா..?" அவள் கேட்க..
காலையில் அவசரத்தில் ஆங்காங்கே சிதறவிட்டிருந்த துணிகளை எடுத்து அழுக்கு கூடையில் போட்டபடி..
"டாக்டரை பிடிக்காம இருக்குமா..? நல்லவர் கண்ணியமானவர்.. பொறுப்பானவர்.." என்று அவள் மேற்கொண்டு சொல்ல வாயெடுக்க..
"போதும் போதும்.. நான் அதைப் பற்றி கேட்கல.. டாக்டரை நீ காதலிக்கிறியா..?" கேட்டுவிட்டு ஆர்வமாக கமலியின் முகத்தை பார்த்தாள் மாயா..
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. அவரை பிடிக்கும்.. கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டார்.. மறுக்க காரணம் எதுவும் இல்லை.. அதனால ஓகே சொல்லிட்டேன்.." என்று சமையலறை பக்கம் செல்ல..
எழுந்து அவளை பின்தொடர்ந்து சென்றாள் மாயா..
"ஆனா டாக்டர் உன்னை காதலிப்பார்ன்னு எனக்கு தோணுது.."
பாத்திரங்களை ஓரங்கட்டி வைத்துக் கொண்டே மாயாவை திரும்பி பார்த்தாள் கமலி..
"காதலிப்பாரான்னு தெரியாது.. ஆனா நிச்சயம் ஒரு நல்ல நண்பரா இருப்பார்.. அது மட்டும் தெரியும்.. எனக்கு தேவை காமம் இல்ல மாயா.. ஒரு ஸ்ட்ராங் சப்போர்ட்.. அவ்வளவுதான்.." என்றபடி சிங்கிள் போட்ட பாத்திரங்களை கழுவுவதற்காக குழாயை திறந்து விட்டாள்..
குழாயை நிறுத்திவிட்டு தோழியின் தோள்களை அழுத்தி தன் பக்கம் திருப்பினாள் மாயா..
"நீ டாக்டரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன போது கூட என் மனசுக்குள்ள ஆயிரம் சந்தேகங்கள் ஓடிட்டு இருந்தது.. ஆனா இப்ப சொல்றேன்.. நிச்சயமா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்வீங்க.. எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு.." புன்னகைத்து கமலியின் நெற்றியில் முத்தமிட்டாள் மாயா..
கமலிக்கு அவள் வார்த்தைகளின் ஆழ்ந்த அர்த்தம் புரியவில்லை.. இது வெறும் வாழ்த்து என்ற கண்ணோட்டத்தில் பதிலுக்கு புன்னகைத்து வைத்தாள் அவள்..
"நீ என்கூட இருக்கிற வரைக்கும் எனக்கு என்ன குறை வந்துட போகுது.." என்றபடி பாத்திரங்களை கழுவுவதற்காக சிங்க் பக்கம் திரும்பினாள்..
"நீ சமையலை கவனி.. நான் பார்த்துக்கிறேன்.." என்று தோழியை தள்ளி நிறுத்திவிட்டு பாத்திரங்களை துலக்கி கொண்டிருந்த மாயா..
"நானும் உன் கூட இருப்பேன்.. டாக்டரும் உன்கூட இருப்பார்.." என்று கண் சிமிட்டி சிரிக்க.. இரண்டாவதாக அவள் சொன்ன டாக்டர் என்ற வார்த்தை கமலியின் நெஞ்சுக்குள் பெரிதாக தாக்கம் எதையும் ஏற்படுத்தாது போனதில் தோள்களை குலுக்கி.. சமையலில் கவனம் செலுத்தினாள் அவள்..
மதிய உணவு மூவருமாக சேர்ந்து உண்டனர்..
வழக்கம்போல் சூர்ய தேவ் அமைதியாக இருந்தான்..
தடபுடலான விருந்து.. கமலி ஜமாய்த்து விட்டாள்..
மாயா ஆஹா ஓஹோவென்று புகழ.. சூர்ய தேவ் சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறந்தான்..
"எங்க கமலியை சமையல்ல அடிச்சுக்க ஆளே இல்ல..!! அவ கை பக்குவத்துக்கு இந்த பாண்டியநாடே அடிமை.. இல்லையா டாக்டர் சார்..!!" மாயா குதூகலமாக கேட்க.. அவள் கேள்விக்கு மதிப்பளித்து நிமிர்ந்து ஒரு பார்வை மட்டும்தான் பார்த்தான்..
"ம்கூம்.. இவர் பதில் சொல்லிட்டாலும்.. மனுஷன் கமலி கிட்ட மட்டும்தான் வாயை திறப்பார் போலிருக்கு.." மாயாவின் முகம் சுருங்கி போனது..
உண்டு முடித்த பின் தோழிகள் இருவருமாக கதை பேசிக் கொண்டிருந்தனர்.. சூர்ய தேவ் கீழே இறங்கி அவன் வீட்டிற்கு சென்று விட்டான்.
4:00 மணிக்கு பிளைட் என்பதால்.. கமலி தன் தோழியை ஏர்போர்ட் வரை சென்று வழியனுப்பி விட்டு வீடு திரும்பினாள்..
மாயாவின் பிரிவில் அவள் முகம் வாடிப்போயிருந்தது..
ஆட்டோவிலிருந்து இறங்கி கேட்டை திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைய.. வாசற்படியில் அவளுக்காக காத்திருந்தான் சூர்யதேவ்..
"எங்க போயிருந்த..?" அவன் குரலில் அத்தனை கடுமை..
அவன் பார்வையிலும் குரலிலும் சற்று மிரண்டு "மாயா ஊருக்கு போறா.. அவளை ஏர்போர்ட் வரை வழியனுப்பிட்டு வந்தேன்.." தடுமாற்றத்தோடு வந்த அவள் பதிலில் நீண்ட மூச்செறிந்து.. இயல்பு நிலைக்கு திரும்பியவன்..
"சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல..?" என்றான் இறங்கிய குரலில்..
கமலிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..!! இதுவரை எந்த விஷயத்திற்கும் அவனிடம் அனுமதி கேட்டதும் இல்லை.. தகவல் சொன்னதும் இல்லையே..!!
"இ.. இனிமே சொல்லிட்டு போறேன்.." பள்ளி மாணவி போல் விழித்தபடி அவன் முன் நின்றிருந்தான்..
"அழுதியா..?" அவன் கண்கள் கூர்மையாக ஈரம் படிந்து உலர்ந்து போயிருந்த அந்த விழிகளை ஊடுருவின..
"இ.. இல்லையே..!! மாயா ஊருக்கு போனதுனால கொஞ்சம் அப்செட் ஆகிட்டேன்.. மத்தபடி ஒன்னும் இல்ல.. சரி நான் மாடிக்கு போறேன்.." என்று திரும்பியவள் நகர முடியாமல் அப்படியே நின்றாள்..
அவள் கரத்தை இறுக பற்றியிருந்தான் சூர்ய தேவ்..
நெஞ்சுக்கூட்டுக்குள் இருதயம் வேகமாக துடிக்க அவன் பற்றியிருந்த கரத்தை மிரட்சியோடு பார்த்தாள் கமலி..
"நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.. உனக்கு அது ஞாபகம் இருக்கா.." சூர்ய தேவ் ஆழ்ந்த குரலில் கேட்க..
"ம்..ம்.. ஆனா நாம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸா இருக்கலாம்னு சொன்னிங்களே..?" என்று எச்சில் கூட்டி விழுங்கினாள் அவள்..
"எஸ்.. அதுக்காக நீ மாடியிலயும் நான் கீழேயும் இருந்துதான் பிரண்ட்ஸா இருக்கணும்னு இல்ல.. ஒரே வீட்ல ஒண்ணா இருந்து கூட பிரண்ட்ஸா வாழலாம்..!! நான் சொல்றது உனக்கு புரியுதுல்ல.." கீழ்க்கண் பார்வையோடு அவன் கேட்க..
புரியுது என்ற தலையசைத்தாள் அவள்..
"போய் உன் துணிமணிகளை பேக் பண்ணி கீழ எடுத்துட்டு வா..!! இனி இதுதான் உன் வீடு.." என்றான் சூர்ய தேவ்..
கமலி தெளியாத பார்வையோடு மாடி ஏறி செல்ல.. துள்ளல் நடையோடு அவளை பின்தொடர்ந்து ஏறினான் சூர்யா..
தொடரும்..