ஆட்டோவிலிருந்து அந்த பிரபல மருத்துவமனையில் வந்து இறங்கினாள் பத்மினி..
வாசலிலேயே நின்றிருந்தான் கேசவன்.. அக்காவை பார்த்ததும் குழந்தையாக அவன் மனம் கலங்கியது..
"அக்காஆஆ.." ஓடி வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.. தன் கோபத்தை காட்டும் நேரம் இதுவல்ல.. உடைந்து போயிருக்கிறான்.. அவனுக்கு தேவை ஆறுதல்.. இந்த ஆறுதலும் தேற்றலும் இல்லாமல் தானே அன்று அவள் கலங்கி அழுதது.. அதே நிலையை தம்பிக்கு தர அவள் விரும்பவில்லை..
உடன்பிறந்தவளை கண்டதும் கண்ணீர் கோடுகளாக வழிந்தன..
"அழாதடா..!!" மனம் கலங்கி தம்பியின் கண்ணீரை துடைத்து விட்டாள்..
"அவளுக்கு ஒன்னும் ஆகாது.. சீக்கிரம் குணமாகிடுவா.. நீ தெம்பா இருந்தாதான் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும்.. நீயே இப்படி கலங்கினா அவளை யார் தேத்தறது.."
"முடியல அக்கா.. பயமா இருக்கு.. டாக்டர் என்னென்னவோ சொல்றாங்க.. ரத்தப்போக்கு நிக்கவே இல்லை.. இந்த நிலைமையில அவளை பார்க்கவே முடியல என்னால..!!" அவன் உதடுகள் அழுகையில் துடித்தன..
"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. இந்த நேரத்துல நம்பிக்கைதான் முக்கியம்.. மனசை விட்டுடாதே.. என்னதான்டா ஆச்சு.. இவ்வளவு சீரியஸா ஆகிற வரைக்கும் பாத்துட்டு சும்மா இருந்தியா..!! பொண்டாட்டியை சரியா பாத்துக்கறது இல்லையா..?"
"ஐயோ அக்கா.. அனு பிரக்னண்டா இருந்தா..!!" கேசவன் அழுத விழிகளோடு சொல்ல பத்மினியின் கண்கள் விரிந்து பின் சோகத்தில் ஆழ்ந்தன..
"ஒரு மாசத்துக்கு முன்னாடி அனு பிரக்னண்டா இருக்கிறதா சொன்னா.. செக்கப் போயிட்டு வந்தோம்.. ஆனா ரொம்ப வீக்கா இருக்கிறதாகவும் கவனமா பார்த்துக்கணும்னு சொன்னாங்க.. என்னன்னு தெரியல.. 15 நாள்ல குழந்தை அபார்ஷன் ஆகிடுச்சு.. ஹாஸ்பிடல் போனோம்.. டி என் சி பண்ணினாங்க.. கரு சரியா பிடிக்கலைன்னு காரணம் சொன்னாங்க.. ரெண்டு நாள்ல வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.. ஆனா ரத்தப்போக்கு மட்டும் நிக்கவே இல்ல.. கடந்த ரெண்டு மூணு நாளா பிளீடிங் அதிகமாயிடுச்சு.. தாங்க முடியாத வலியில கதற ஆரம்பிச்சுட்டா.. அதனாலதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேன்."
"போன முறை டிஎன்சி செஞ்ச போது சரியா கிளீன் பண்ணலையாம்.. ஏதோ துணுக்குகள் உள்ளேயே தங்கிடுச்சாம்.. அது நஞ்சாகி உள்ளேயே செப்டிக் ஆகிட்டதா சொல்றாங்க.. இப்ப ஸ்கேன் எடுத்து பார்த்துட்டு கண்டிஷன் சீரியஸ்னா கர்ப்பப்பையை எடுத்துடனும்னு சொல்றாங்க.."
"ரொம்ப பயமா இருக்கு அக்கா.. எனக்கு ஒண்ணுமே புரியல.. நிலைமையை அவகிட்ட எடுத்து சொல்லவும் முடியல.. கரு கலைஞ்சதுல இருந்து மனசு உடைஞ்சு போயிருக்கா.. இதுல இந்த விஷயத்தை எப்படி அவகிட்டே சொல்லுவேன்.." முகத்தை மூடிக்கொண்டு அழுதான் கேசவன்..
பத்மினிக்கு அவன் சொன்னதை கேட்டு நெஞ்சம் கலங்கியது.. அனுஷா என்பதிற்காக இரக்கப்படாமல் இருக்க முடியுமா என்ன.. யாராயினும் இந்த நிலை பரிதாபத்திற்குரியது.. அதிலும் பத்மினி மென்மையான மனம் படைத்தவள்.. மற்றவர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு அவர்கள் வலிகளை உணரக்கூடியவள்..
"என்னடா சின்ன குழந்தை மாதிரி அழற.. டாக்டர் சொல்றதுக்கு முன்னாடி நீயா ஏதாவது ஒண்ணு கற்பனை பண்ணிக்கிட்டு உன் இஷ்டத்துக்கு உளராதே.. டெஸ்ட் ரிசல்ட் இன்னும் வரல இல்ல.. அப்படியெல்லாம் எதுவும் ஆகாது.. கடவுள் இருக்கார்.. கவலைப்படாதே..!!"
"உண்மைதான் அக்கா.. கடவுள் இருக்கார்.. யாரையும் சும்மா விடமாட்டார்.. ஒருத்தர் மனதை கஷ்டப்படுத்திட்டு யாரும் நிம்மதியா வாழ்ந்திட முடியாது.."
"என்னடா உளர்றே.."
"அனுஷா எல்லாத்தையும் சொன்னா.. உன்னை பேங்க்ல வச்சு என்ன பேச்சு பேசி இருக்கா..!! கரு கலைஞ்சு ரத்தப்போக்கு ஏற்பட்ட பிறகு தன்னுடைய தப்பை உணர்ந்து.. எல்லாத்தையுமே என்கிட்ட சொல்லி அழுதா..!! அவ நேத்து வந்தவ.. ஆனா நானும் உன் மனச புரிஞ்சுக்காம காயப்படுத்திட்டேனே.. எங்களுக்கு கிடைச்ச தண்டனைதான் இது.. ஏத்துக்கத்தான் வேண்டும்.." என்றான் விரக்தியாக..
"என்ன கேசவா.. இந்த நேரத்தில் என்ன பேச்சு பேசற..!! நீயும் அனுவும் கஷ்டப்பட்டால் அது எனக்கு மட்டும் வலி இல்லையா..? நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்.. எனக்கு அதுதான் வேணும்.. பழசை கிளற வேண்டாம்.. அப்படியே விட்டுடு.. இப்ப நான் அனுஷாவை பார்க்கலாமா.. என்ன பார்த்தவுடனே கோபப்பட்டு எதுவும் பிரச்சனை பண்ணிட மாட்டாளே..?" பத்மினி தயக்கத்தோடு கேட்டாள்..
"அவளே உன்ன பாக்க தவிச்சிட்டு இருக்கா.. வா போகலாம்" என்று அக்காவோடு மருத்துவமனைக்குள் நடந்தான் கேசவன்..
"அன்னைக்கு நாம பேசின பிறகு மனம் வருந்தி அடுத்த நாளிலிருந்து உனக்கு தொடர்ந்து உனக்கு போன் செஞ்சிட்டே இருக்கேன்.. நீ எடுக்கவே இல்லையே ஏன்க்கா.." கேசவன் வருத்தத்தோடு கேட்டான்..
பத்மினி பெருமூச்சு விட்டாள்.. "என்ன சொல்ல..? கோபம் தான் காரணம்.. நீயும் என்னை புரிஞ்சுக்கலையேங்கிற மன வருத்தம்.."
"இரண்டு முறை வீட்டுக்கு கூட வந்தேன்.. ரமணியம்மா தான் இருந்தாங்க.. காத்திருக்க சொன்னாங்க.. நீ மட்டும் இருந்தா பரவாயில்லை.. ஆனா அத்தான் முசுடாச்சே.. ஏதாவது பேசிடுவாரோனு பயம்.."
"சேச்சே.. அப்படியெல்லாம் இல்லை.. அவ ரொம்ப நல்லவர்.. நிச்சயமா உனக்கு உபசரிச்சு நல்லபடியா பேசி வழியனுப்பி வைச்சிருப்பார்.."
இருவருமாக பேசிக்கொண்டே அனுஷாவை அட்மிட் செய்திருந்த அறையை நெருங்கியிருந்தனர்..
"அக்காஆஆ.." அவள் கரத்தைப் பற்றினான் கேசவன்..
"நீ சந்தோஷமாதானே இருக்க? எதுவும் பிரச்சனையும் இல்லையே..!!" அவன் முகத்தில் உடன் பிறந்தவளுக்கான பரிதவிப்பு..
நீண்ட மூச்சுடன் மெல்ல புன்னகைத்தாள் பத்மினி.. "நான் சந்தோஷமா இருக்கேன்டா.. அவர் என்ன ரொம்ப நல்லாவே பார்த்துக்கிறார்.." அவள் பேச்சில் பொய்யில்லை.. சொல்லும்போதே கணவனை நினைத்து அத்தனை பொலிவு அந்த முகத்தில்.. கண்டு கொண்ட கேசவனின் மனதில் நிம்மதி..
இருவருமாக அறைக்குள் நுழைந்தனர்.. கருத்த முகம் அலங்கோலமான கூந்தல்.. தேகம் மெலிந்து உதடுகள் கறுத்து.. கண்களின் கீழே கருவளையத்தோடு.. அனுஷாவின் இந்த நிலை பத்மினியின் மனதை உலுக்கியது..
"வாங்க அண்ணி.." எழுந்து அமர முயன்றாள்..
"படுத்துக்கோ அனுஷா.." அருகே வந்து அமர்ந்து அவள் கரத்தைப் பற்றிக் கொண்டாள் பத்மினி..
"உங்களுக்கு நான் செஞ்ச பாவத்துக்கு இப்ப அனுபவிக்கிறேன்.." அனுஷாவின் கண்களிலிருந்து நீர் உதிர்ந்தது..
"ஏன் இப்படியெல்லாம் பேசற.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. மனசை போட்டு குழப்பிக்காதே.. நீ தைரியமா இருக்கணும்.. மிகப்பெரிய பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தவங்க எத்தனையோ பேர் இருக்காங்க.. இதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. ட்ரீட்மென்ட் எடுத்தா சரியாகிட போகுது.."
"என்ன சரியா போயிடும்.. இங்க பாருங்க.." என்று தான் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி காண்பித்தாள்.. படுக்கை விரிப்பில் மிகப்பெரிய வட்டமாக ரத்தக்கசிவு.. பத்மினிக்கு திக்கென்று ஆனது.. ஆனால் வெளி காண்பித்துக் கொள்ளவில்லை..
"வயிறு வலி வேற உயிர் போகுது.. எனக்கென்னவோ நான் பிழைக்க மாட்டேன்னு தோணுது.. அவரை பத்திரமா பாத்துக்கோங்க அண்ணி.." என்றாள் பலகீனமான குரலில் கண்ணீரோடு..
"பைத்தியக்காரத்தனமா உளராதே.. முதல்ல இப்படி நெகட்டிவா பேசறதை நிறுத்து.. நம்பிக்கையோடு இரு.. கேசவன் உன் மேல உயிரையே வச்சிருக்கான்.. நீ இப்படியெல்லாம் பேசினா அவன் ரொம்ப உடைஞ்சு போயிடுவான்.." பத்மினி சொன்னதும் அனுஷா கேசவன் முகத்தை பார்த்தாள்.. தளர்ந்து போனவனாய் தலை கலைந்து அழுத விழிகளுடன் நின்று கொண்டிருந்தான் அவன்..
"கேசவா இன்னைக்கு அனுஷாவை நான் பார்த்துக்கறேன்.. நீ வீட்டுக்கு போய் ஃபிரெஷ் ஆகிட்டு காலையில வா.."
"இல்ல பரவாயில்லக்கா.. நான் பாத்துக்கறேன்.. நீ இங்கிருந்து கிளம்பு.. அத்தானும் ரமணியம்மாவும் உன்னை தேடுவாங்க.."
"ப்ச்.. கண்ணெல்லாம் உள்ள போய் ஒரு மாதிரியா சோர்ந்து இருக்ககேடா.. போய் முதல்ல நல்லா தூங்கு.."
"இவ இப்படி இருக்கும்போது எனக்கெப்படி தூக்கம் வரும்.."
"தூங்கணும் கேசவா.. நீ ஆரோக்கியமா இருந்தாத்தான் அவளை பார்க்க முடியும்.. நான்தான் அவ கூட துணைக்கு இருக்கேன் சொல்றேனே.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா போ..!!" அக்கா தந்த தைரியத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றிருந்தான் கேசவன்..
"மஞ்சரியும் நடராஜனும் வீட்டை விட்டு போயிட்டாங்க அண்ணி.." அனுஷா அவளாகத்தான் பேச்சை ஆரம்பித்தாள்..
பத்மினி அவர்களைப் பற்றி பேசக்கூட விரும்பவில்லை..
"விடு அனுஷா இப்ப அவங்களை பத்தி பேசி என்ன ஆகப்போகுது.." பேச்சை திசைத் திருப்ப நினைத்தாள்..
"இல்ல அண்ணி பேசியே ஆகணும்.. நாங்க உங்களுக்கு செஞ்ச துரோகத்துக்கு மன்னிப்பு கேட்டே ஆகணும்.. என் அண்ணன் உங்களுக்கு எவ்வளவு பெரிய மாபாதகத்தை பண்ணி இருக்கான்.. ஆபீஸ்ல வந்து உங்களுக்கு ரொம்ப தொல்லை கொடுத்தானாமே.. கம்பெனி வாட்ச்மேன் ஃபோன் பண்ணி என் வீட்டுக்காரர் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாரு.. ரெண்டு பேருக்கும் பெரிய பிரச்சனை ஆயிடுச்சு.. இவர் அவனை கொலை பண்ற அளவுக்கு போய்ட்டாரு.."
"ஆனா அதுக்கு முன்னாடியே என் அண்ணி என்னை என்னென்ன பேச்சு பேசினாங்க தெரியுமா.. உடம்பு சரியில்லாதவளை அவங்க கொஞ்சம் கூட கரிசனமா பாத்துக்கவே இல்ல.. நான் பாவியாம்.. அதான் என் வயித்துல கரு தங்கலயாம்.." அனுஷா அழுகையை விழுங்கினாள்..
"ஜாடை மாடையா என்னென்னவோ பேசி என் மனசை புண்படுத்தினாங்க.. அதைக் கூட தாங்கிக்கிட்டேன்.."
"ஆனா என் அண்ணன் தான் குற்றவாளின்னு தெரிஞ்சும் என் அண்ணி அதையெல்லாம் மறைச்சிட்டு உங்களை தப்பு தப்பா பேசினாங்க.. அவங்கள மட்டும் சொல்லி என்ன பிரயோஜனம்.. நானும் உங்களை நம்பலையே.. நமக்குன்னு ஒரு பிரச்சனை வந்த பிறகு தான் அடுத்தவங்களோட கஷ்டம் புரியுது.." என்றாள் வறண்ட குரலில்..
"அனுஷா விடுமா.. இப்ப எதுக்கு இந்த பேச்செல்லாம்.. வேற ஏதாவது பேசுவோமே..!!"
"உங்க தம்பி என் அண்ணனையும் அண்ணியும் வீட்டை விட்டு விரட்டிட்டார்.. அதுல என் அண்ணிக்கு ரொம்ப கோபம்.. நான் நல்லாவே இருக்க மாட்டேன்னு சாபம் விட்டுட்டு போச்சு.. கடவுள் கஷ்டத்தை தர்றதே யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னு தெரிய வைக்கத்தான் போலிருக்கு"
"யார் சாபமும் பலிக்க போறதில்லை.. உன் வாழ்க்கை உன்னோட கையிலதான்.. செஞ்ச தவறை உணர்ந்துட்டாலே போதும்.."
"என்னவோ.. நீங்க வந்தது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு அண்ணி.. உங்களுக்கு ரொம்ப பெருந்தன்மையான மனசு.. உங்க அளவுக்கு நான் இல்லை..!!"
"சரி.. எழுந்து கொஞ்சமா சாப்பிடு.."
"வேண்டாம் அண்ணி பாத்ரூம் வரும்.. அப்புறம் ரொம்ப கஷ்டம்.."
"பாத்ரூம் வருது சாபம் இல்ல.. வரம்.. இயற்கை அழைப்புகள் சரியான நேரத்துக்கு வரணும்.. அப்பதான் உடம்பு சரியாக இயங்குதுன்னு அர்த்தம்.. உனக்கு பசிக்குதுதானே.. அதுவே நீ ஆரோக்கியமா இருக்கறதுக்கான அறிகுறி.. பயம்தான் உன் உடம்பை பாழாக்குது.. நம்பிக்கையோடு இரு.." பேசிக்கொண்டே அவளை எழுப்பி அமர வைத்து.. கேசவன் வாங்கி வைத்து சென்றிருந்த உணவை தட்டில் போட்டு ஊட்ட ஆரம்பித்திருந்தாள்.. அனுஷா கண்களில் நீ நிறைந்து பத்மினியை பார்த்துக் கொண்டிருந்தாள்..
அனுவின் அம்மா சமீபத்தில் சில வருடங்களுக்கு முன்பு தான் இறந்து போயிருந்தார்.. தேவையில்லாமல் அவர் நினைவு வேறு இந்நேரத்தில் தொலைத்தது.. அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் நம்பிக்கை கொடுத்திருப்பார்.. கேசவன் துணை.. ஆனால் பத்மினி நம்பிக்கை கொடுக்கிறாள்..
"ஏதாவது உதவி வேணும்னா கேளு..!! சங்கடப்படாதே.. நான் உன் பக்கத்துலதான் இருக்கேன்.." எனும் போதே பத்மினிக்கு தன் கணவனிடமிருந்து அழைப்பு..
"ஹலோ.. எங்க இருக்க..?" சிடுமூஞ்சி மாதவனின் குரல்தான்..
"ஹாஸ்பிடல்ல இருக்கேன் உதய்.. உங்களுக்குதான் ரொம்ப நேரமா ட்ரை செஞ்சேன்.. லைன் போகவே இல்லை.. நல்ல வேளை நீங்களே கால் பண்ணிட்டீங்க.." என்று தற்போதைய சூழ்நிலையை தெளிவாக விளக்கிச் சொல்ல பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான் அவன்..
"சரி நான் வரேன்.. ரெடியாயிரு.."
"எதுக்காக..?"
"என்ன கேள்வி.. வீட்டுக்கு வர்றதுக்குதான்..!!"
"இவ்வளவு நேரம் விளக்கமா சொல்லி இருக்கேன்.. மறுபடி வீட்டுக்கு வர சொன்னா என்ன அர்த்தம்.. நான் கேசவனை போக சொல்லிட்டேன்.. இன்னைக்கு நைட்டு இங்கதான் தங்க போறேன்.."
"அவன் பொண்டாட்டியை அவன் பாத்துக்க போறான்.. உனக்கு என்ன வேலை அங்க.. பாத்தாச்சுல.. புறப்பட்டு வர வேண்டியதுதானே..?"
"என்னங்க இப்படி சொல்றீங்க.. அவங்களுக்கு உதவி தேவை.. எனக்கென்னனு எப்படி விட்டுட்டு வர முடியும்.. பாவம் கேசவன் தனியா கஷ்டப்படறான்.."
"நானும் அம்மாவும் கூடதான் இங்க தனியா கஷ்டப்படுறோம்.. அம்மா உன்னை தேடறாங்க.. நீ இங்கதான் இருக்கணும்.."
"ரமணியம்மாகிட்டே நான் பேசிக்கறேன்.. அவங்க புரிஞ்சுக்குவாங்க.."
"அப்ப நான்..? என்னை பற்றி உனக்கு எந்த அக்கறையும் இல்லை அப்படித்தானே..!!" சண்டை போடும் தோரணையோடு பேசினான் அவன்..
"என்ன உதய்.. குழந்தை மாதிரி பேசறீங்க.."
"சரி என்னை எரிச்சல் படுத்தாதே.. நீ ஃபோனை வை.. அதான் வர முடியாதுன்னு சொல்லிட்டியே.."
பத்மினிக்கு புரிகிறது.. சொந்தங்களோடு வளரவில்லை.. கூடப்பிறந்தவர்கள் இல்லை.. மனிதர்களோடு ஒன்றிப் போக தெரியாதவனுக்கு உறவுகளின் அருமையை புரியவைப்பது கொஞ்சம் கடினம்தான்.. ஆனால் புரிய வைக்க வேண்டும்.. உதய் கிருஷ்ணா ஒன்று அரக்கன் இல்லையே மனிதன்தான்.. புரிந்து கொள்வான்..
"உதய்.. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க.. உங்களுக்கு உங்க அம்மா எப்படியோ அந்த மாதிரி எனக்கு என் தம்பி.. அவன் இப்ப கஷ்டத்துல இருக்கான்.. அவனுக்கு உதவி செய்ய வேண்டியது என் கடமை.. ரொம்ப மனசு உடைஞ்சு போயிருக்கான்.. இப்ப நான் அவன்கூட இருக்கணும்.. உறவுகளுக்கு உதவி செய்யலைன்னா அப்புறம் நாம என்ன மனுஷங்க சொல்லுங்க..!!" எதிர்முனையில் உதய் அமைதியாக இருந்தான்..
"லைன்ல இருக்கீங்களா..?"
"சரி எப்ப வருவ..?"
"அனுஷா நிலைமையை பார்த்துட்டு ஒரு நாலு நாள் அவங்க கூட இருந்துட்டு வரேன்.."
"நான் உன்னை பார்க்க.. அங்க வரட்டுமா..?"
"வேண்டாம் விசிட்டிங் டைம் முடிஞ்சு போச்சு.. அங்க அம்மாவை பத்திரமா பாத்துக்கோங்க.. மறக்காம மாத்திரை போட சொல்லுங்க.."
"போடி.. அவங்க என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க.. எரிச்சலா வருது.. நீ வேற பக்கத்துல இல்ல..!!" என்றான் சலிப்பான குரலில்..
"அம்மாவுக்கும் பிள்ளைக்கும் மத்தியசம் பண்ண நான் வேணுமா..? நான் வர்ற வரைக்கும் அவங்ககிட்ட வாய் கொடுக்காம அமைதியா இருங்க.."
"ம்ம்.."
"நல்ல பிள்ளையா தூங்குங்க.."
"முயற்சி பண்றேன்..!!"
"ஃபோனை வைக்கட்டுமா.."
"ம்ம்.."
"கோவமா இருக்கீங்களா உதய்.."
"ப்ச்.. ஃபோனை வை.." உதய் அழைப்பை துண்டித்து விட்டான்.. அவன் கோபம் மனதிற்கு கஷ்டமாக இருந்த போதிலும்.. இது ஒரு அழகான ஊடல் என்பதை பத்மினி உணர்ந்து கொண்டிருந்தாள்.. ஊடல் இனிக்கிறது..
அடுத்த நாள் காலையில் கேசவன் வந்தான்.. தெளிவடைந்திருந்த அனுஷாவின் முகத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு போனான்..
"கேசவா.. நீ அனுஷாவை பாத்துக்கோ.. நான் வீட்டுக்கு போய் இவ உடம்புக்கு ஏத்த மாதிரி ஏதாவது பத்தியமா சமைச்சு கொண்டு வரேன்.." என்றாள் பத்மினி
"உன் வீட்டுக்கு போக போறியா அக்கா..?"
"என் வீட்டுக்கு எப்படி போக முடியும்..!! ஹாஸ்பிடல் பக்கத்துல உன்னோட வீடுதானே இருக்கு அங்க போய் டிரஸ் மாத்தி குளிச்சிட்டு சமைச்சு எடுத்துட்டு வரேன்.."
"உனக்கு ரொம்ப அலைச்சல்க்கா சிரமப்படாதே..!!"
"என்ன அலைச்சல்.. ஒரு சிரமமும் இல்லை, நீ அமைதியா இரு.." பத்மினி வீட்டிற்கு சென்று விட்டாள்..
ஆனால் உதய்.. போனில் அவளை அழைத்து.. கடுகடுவென்று ஏதேனும் பேசி எரிந்து விழுந்து கொண்டே இருந்தான்..
"என்னோட சாக்ஸ் எங்க.."
"ஷுவை எங்கடி வெச்ச..!!"
"அம்மாவோட மாத்திரை டப்பா காலி.. சொல்ல மாட்டியா நீ.."
"ரவை காலி.. அவசரத்துக்கு உப்புமா கூட கிண்ட முடியல..!!"
"வீடு பூரா ஒரே குப்பை.. ஒழுங்கா கிளீன் பண்ணி வச்சுட்டு போயிருக்க வேண்டியதுதானே.."
"காலையில இருந்து எல்லாமே ஒரே டென்ஷன்.. உன்னாலதான்டி.. நீ எதுக்காக அங்க போன.. இங்க எதுவும் உருப்படியா இல்லை.. வீட்டை பார்க்கிறதை விட அங்க என்ன உனக்கு வேலை.."
பத்மினிக்கு அவன் மன போக்கு புரியாமல் இருக்குமா என்ன..?
"உதய்.. உதய்.." அழுத்தமாக அழைத்தாள்..
எதிர்ப்பக்கம் பேச்சு நின்று அமைதி..
"என்ன..?"
"எதுக்காக என்னைவிட்டு போன? நீ இல்லாம ஒரு வேலை ஆகல.. ஜாகிங் கூட போகல.. அம்மா வேற.."
"ப்ச்.. இப்ப என்னதான் வேணும் உங்களுக்கு.. எதுக்காக இப்படி ஒரு கோபம்.. அமைதியா பேசுங்க.."
"அது.. எனக்கு நீ பக்கத்துல வேணும்.." சிணுங்கலோடு கடைசியாக உண்மை வாயிலிருந்து வந்தது.. இதற்காகத்தான் இந்த எரிச்சலும் கோபமும்.. பத்மினி சிரித்து விட்டாள்..
"என்ன தமிழ் இது..?"
"எந்த தமிழா இருந்தா என்ன.. நான் சொன்னது உனக்கு புரிஞ்சது இல்ல..?"
"புரியுது புரியுது.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா செல்லம்.. என் பட்டு குட்டி இல்ல..!!"
"இல்லடி.."
"உதய்ம்மா.."
"இன்னைக்கு ஆபீஸ் வர்றதானே..?" உதய் கேட்டதில் அவளுக்கு விழி பிதுங்கியது..
"என்ன உதய் மனசாட்சி இல்லாம பேசறீங்க.. நான் எப்படி ஆபீஸ் வர முடியும்.." அவளுக்கே கோபம் வந்துவிட்டது அவன் கேட்ட கேள்வியில்..
"ஆமா எனக்கு மனசாட்சியே இல்ல.. அப்ப ஆஃபீஸ்லயும் உன்னை பார்க்க முடியாது அதானே.."
"புரியாம பேசாதீங்க உதய்.."
"நான் எதையும் புரிஞ்சிக்க வேண்டாம்.." அழைப்பை துண்டித்து விட்டான்.. இடுப்பில் கைவைத்து பெருமூச்சு விட்டாள் பத்மினி..
ரமணியம்மாவிற்கு அழைத்து விபரத்தை சொல்ல.. "அவன் அப்படிதான்மா.. புரிய வைக்கிறது ரொம்ப கஷ்டம்.. நீ பொறுமையா இருந்து எல்லாத்தையும் முடிச்சிட்டு வா.. ஒரு பிரச்சனையும் இல்லை.." என்று மருமகளுக்கு தைரியம் கொடுத்தார் அவர்..
அன்று இரவு கேசவன் "அக்கா.. அனுவை நான் பார்த்துக்கிறேன்.. நீ கிளம்பி வீட்டுக்கு போ.. அத்தானும் ரமணியம்மாவும் உன்னை ரொம்ப தேடுவாங்க.." என்றான்.. பத்மினிக்கோ தீராத களைப்பு..
"என்னால கிளம்பி அவ்வளவு தூரம் போக முடியாதுடா.. நான் வீட்டுக்கு போறேன்.. நாளைக்கு என் வீட்டுக்கு போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடறேன்.." என்றவள் கேசவன் வசிக்கும் தன் பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தாள்..
தன்னந்தனியாக இங்கு வந்து தங்கி இருப்பதை அறிந்து கொண்டு நடராஜ் வந்துவிடுவானோ என்ற அச்சம்.. தாழிட்ட கதவை இருமுறை பரிசோதித்துவிட்டு அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்..
சரியாக இரவை தாண்டிய நேரம் கதவு தட்டும் ஓசை.. திக்கென்று இதயம் துடித்தது அவளுக்கு.. ஒவ்வொரு நொடிக்கு பிறகும் கதவு தட்டும் ஓசையின் விகிதம் அதிகரித்துக் கொண்டே சென்றது..
"யா..ரு.."
பதில் இல்லை..
"யார்ன்னு கேட்கிறேன் இல்ல..!!"
அப்போதும் பதில் இல்லை..
மனதை திடப்படுத்திக் கொண்டு கதவைத் திறந்தாள்..
எதிரே..
அவளை முறைத்தபடி உதய் கிருஷ்ணா.. அவனோடு ரமணியம்மா.. அவர் கையில் தலையணையும் போர்வையும்.. மனைவியை பிரிந்து கணவனால் இருக்க முடியவில்லை என்பது இயல்பு.. மாமியாரால் கூட இருக்க முடியவில்லை என்பதுதான் அதிசயம்.. தாயும் மகனுமாக அவளை காண புறப்பட்டு வந்தது சரிதான் ஆனால் அவர்கள் சொன்ன காரணம்..?
"கொஞ்சம் நகரும்மா.. இவன் கூட என்னை தனியா விட்டுட்டு வந்துட்டியே.. சதா எரிஞ்சு விழுந்துட்டே இருக்கான்..!! நிம்மதியே இல்லை.. கொஞ்சம் காபி போட்டு தர்றியா.." தலையணை போர்வையுடன் அவளை கடந்து சென்று இருக்கையில் அமர்ந்து நீண்ட மூச்சுவிட்டார்..
"இத்தனை நாள் நான்தானே உங்களை பார்த்துட்டு இருந்தேன்.. மருமக வந்த பிறகு நான் வேண்டாதவனா போயிட்டேனா..!! நான் ரெண்டு வார்த்தை பேசினா நீங்க நாலு வார்த்தை பேசுறீங்க.." அம்மாவை பின் தொடர்ந்து சென்று சண்டை போட்டுக் கொண்டிருந்தான் அவன்..
பத்மினி சிரிப்போடு இருவரையும் பார்த்து பெருமூச்சு விட்டவள் அடுக்களைக்குள் காபி போட சென்றிருந்தாள்..
தொடரும்..