அன்று இரவில் வீட்டிலிருந்தவர்கள் பொழுது போகாமல் ஸ்பின் த பாட்டில் விளையாடலாம் என்று முடிவு செய்து பெரியவர்களையும் வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு வட்டமாக அமர்ந்தனர்.
வழக்கம்போல திலோத்தமா தூக்கம் வருகிறது என்று எஸ்கேப்.
ஏதாவது விளையாடலாம் என்று ஆரம்பித்தவள் தேம்பாவணிதான்.. அவள் சொன்னதை வெண்மதி வழிமொழிய.. வருண் ஓஓஓ.. விளையாடலாமே என்று உற்சாகமாய் வரவேற்க மூவருமாய் சேர்ந்து பெரியவர்களையும் இழுத்து வந்திருந்தனர்..
பாட்டிலை சுற்றிவிட்டு அதன் முனை யார் பக்கமாக வந்து நிற்கிறதோ அந்த நபர் மற்றவர்கள் சொல்வதை செய்ய வேண்டும்.. இதுதான் விளையாட்டு..
வருண் பாட்டிலை சுற்றிவிட அது நேராக ராஜேந்திரனின் பக்கம் நின்றது..
அம்மாவை பாத்து ஒரு காதல் பாட்டு பாடணும்.. என்று வருண் சொல்லிவிட.. எழுந்து நின்று..
பாட்டு பாடவா..
பார்த்து பேசவா..
பாடம் சொல்லவா
பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும் பாலை தேடி ஓடி வந்த காளை அல்லவா..!
ஜெமினிகணேசனை போல் நடனமாடிக் கொண்டே அவர் பாட "ஐயோ போதும் நிறுத்துங்க.." என வெட்கத்தில் சிவந்து புடவை முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தார் சாரதா..
"ஏய் மதி இங்க பாரு.. அம்மா வெட்கப்படுறாங்க..!" என பிள்ளைகள் இருவரும் அவரை சீண்டி வம்பிழுக்க..
"டேய் சும்மா இருங்கடா.. பார்த்து ரசிக்க விடுங்க.. பனிரென்டு வருஷத்துக்கு ஒரு முறை பூக்கற குறிஞ்சி மலர் மாதிரி எப்பவாச்சும் ஒரு வாட்டிதான் இந்த அதிசயம் நடக்கும்.." என ராஜேந்திரன் வேறு கேலி செய்ய.. சாரதா மடியிலிருந்த தலையணையை அவர் மீது தூக்கி அடித்தார்..
மீண்டும் பாட்டில் சுற்றப்பட அதன் முனை வெண்மதி பக்கமாக வந்து நின்றது..
"ஃபோன் பண்ணி உங்க புருஷனுக்கு ஐ லவ் யூ சொல்லுங்க.." தேம்பாவணி சொன்னதும் கண்கள் விரித்து திருதிருவென விழித்தவள் "ஐயோ வேண்டாமே!" என வெட்கப்பட்டு ஒரு வழியாக தன் கணவனுக்கு அழைப்பெடுத்தாள்..
"என்னங்க..!"
"என்னமா போன்ல ரீசார்ஜ் முடிஞ்சு போச்சா.. நாளைக்கு பண்ணி விடட்டுமா..? தூக்கம் வருது.." என கொட்டாவியோடு பேச்சு அந்தப் பக்கம்..
"ஐயோ நான் சொல்றதை கேளுங்க..!"
"நீ இப்போதைக்கு சொல்லி முடிக்க மாட்டியே..!"
"ஒரே ஒரு வார்த்தை.. முழுசா நான் சொல்றத கேட்டுட்டு பதில் சொல்லுங்க.."
"சரி சொல்லு.."
"ஐ லவ் யூ ஊஊஊஊஊ.."
"உன் தம்பி வெச்சிருந்த சரக்கை எடுத்து ராவா குடிச்சிட்டியாம்மா..!"
வெண்மதி மூக்கு சுருக்கி புசுபுசுவென மூச்சு விட அனைவரும் வாயைப் பொத்தி சிரித்துக்கொண்டிருந்தார்கள்..
"யோவ் எவ்வளவு ஆசையா ஐ லவ் யூ சொன்னா கிண்டலா பண்ற..?"
"நீ ஆசையா சொல்றதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு.. பவுனு என்பதாயிரமாம்.. டிவில எதையாவது பார்த்துட்டு அது வேணும் இது வேணும்னு கேட்டு மாமாவுக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சுடாத தங்கம்.. வேணும்னா தலப்பாக்கட்டுல பக்கெட் பிரியாணி ஆர்டர் பண்றேன்.. உன் தம்பிய பணம் கட்ட சொல்லி வயிறார சாப்பிட்டுட்டு வாயார வாழ்த்திட்டு தூங்குடா தங்கம்.."
"ஃபோனை வச்சுத் தொலை..!" அழைப்பை துண்டித்துவிட்டு அவள் கோபத்தோடு அமர்ந்திருக்க.. வருண் உருண்டு புரண்டு சிரித்தான்..
"எக்கா.. மாமாவுக்கு ஒரு நாள் கூட ஐ லவ் யூ சொன்னதில்லையா நீ..!"
அவன் கேட்டது தான் தாமதம் தன் சோக கதையை சொல்ல ஆயத்தமானாள் வெண்மதி..
"எங்கடா.. மொத்தமா பத்து வார்த்தை மனப்பாடம் பண்ணி வச்சிருப்பார்.. அதை தவிர புதுசா வேற எதுவும் பேச தெரியாது.. அப்படியே அவர் கிளுகிளுன்னு ஐ லவ் யூ சொல்லிட்டாலும் எனக்கு சிரிப்பு வந்துடும்.. நான் ஐ லவ் யூ சொன்னா இதோ அவருக்கு பயம் வந்துடும். இந்த பத்து வருஷ வாழ்க்கையில பெருசா ஐ மிஸ் யூ ஐ கிஸ் யூ இதெல்லாம் சொல்லி காதலை வளர்த்துக்கிட்டது இல்லை. அதுக்கான நேரமும் எங்களுக்கு இல்ல.. என்று பெருமூச்சு விட்டு நொந்து கொள்ள..
*அக்கா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா மாமா உங்களை கேர் பண்ணிக்குவாரா?" என்றாள் தேம்பாவணி..
"இல்லையா பின்ன..! காய்ச்சல் வந்துச்சுன்னா அம்மாவை ஒட்டிக்கிட்டு திரியற குழந்தை மாதிரி என் புள்ளையை விட்டு விலக மாட்டேங்கறாளேன்னு என் மாமியார் கூட கிண்டல் பண்ணுவாங்க.. அந்த அளவுக்கு மனுஷனை ஒரு வழி பண்ணிடுவேன்.. அவரும் சலிக்காம எனக்கு எல்லாத்தையும் செய்வார்.. எவ்வளவோ தொந்தரவு பண்ணியிருக்கேன்.. ஒரு முறை கூட முகம் சுழிச்சதில்ல.." இந்த முறை வெண்மதி வெட்கப்பட்டாள்..
"எவ்வளவு அழகா தன்னுடைய அன்பை உங்களுக்கு உணர்த்தி இருக்கார்.. இதைவிட என்னக்கா வேணும்.. ஐ லவ் யூனு வாயால சொன்னாதான் சொன்னா தான் ஆச்சா..! அக்கறையா அன்பா பேசற ரெண்டு வார்த்தைகள் நூறு ஐ லவ் யூக்கு சமம். தெரியுமா.. இங்க வந்து இத்தனை நாள்ல ஒரு நாளாவது அவரைப் பத்தி பேசாம இருந்திருக்கீங்களா.. அவர் சாப்பிட்டாரோ இல்லையோ.. சரியா தூங்குறாரான்னு கவலைப்பட்டு அடிக்கடி போன் அடிச்சு பேசுறதெல்லாம் காதல் கணக்குல வராதா..? வாழ்க்கை முழுக்க இல்லாத ஐ லவ் யூவை தேடி ஆதங்கப்படறதை விட.. சின்ன சின்ன விஷயத்தில கூட அழகா கண்ணுக்கு தெரியுற அவரோட அன்பை அனுபவிச்சு சந்தோஷமா இருங்கக்கா..!" என்றவளை மற்றவர்கள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்..
"டேய் வருணே..! இவ உன்னையே மிஞ்சிடுவா போலிருக்கே..! என்னம்மா பேசறா பாரு..! ஒரே நிமிஷத்துல என் மனச மாத்தி தெளிய வச்சுட்டாடா.." என வெண்மதி மெச்சுதலாக சொல்ல..
"எல்லாம் டாக்டர் சார் ட்ரைனிங்தான்.. அவர் கூட பேசி பேசி.. நானும் இப்படி புத்திசாலியா மாறிட்டேனோ என்னவோ" என அந்த கிரெடிட்டையும் வருணுக்கே தந்து தோள்களை குலுக்கினாள் தேம்பாவணி.
"டேய் அவள பார்த்தது போதும்.. அப்புறமா பாராட்டிக்கலாம்.. முதல்ல பாட்டிலை சுத்து.." வெண்மதி சொன்ன பிறகு தேம்பாவிடமிருந்து பார்வையை விலக்கி புருவங்களை உயர்த்தி சுயம் தெளிந்தவன் மீண்டும் அந்த கண்ணாடி பாட்டிலை சுற்றிவிட அதன் முனை இந்த முறை தேம்பாவணிக்கு நேராக வந்து நின்றது..
"இந்த முறை நான்தான் தேம்பாவணிக்கு டாஸ்க் கொடுப்பேன்.. உனக்கு ரொம்ப பிடிச்சவங்கள பத்தி ஒரு பத்து வார்த்தை சொல்லு..!" வெண்மதி சொல்லவும் அவள் எழுந்து நின்றாள்..
"நான் என் ஹஸ்பண்ட் பத்தி பேச போறேன்.." என்றதும் அனைவரும் கண்கள் சுருக்கி குழப்பமாக அவளை பார்த்திருந்தனர்..
இல்லாத உறவுகளை இருப்பதாய் கற்பனை செய்து தன்னை திருப்திப்படுத்திக் கொள்வது தானே அவள் வழக்கம்.. அதன்படி ஒரு வேளை தன் தந்தையை பற்றி பேசப் போகிறாளோ என்று வருண் எதிர்பார்த்திருக்க அவளோ கணவன் என்று சம்பந்தமில்லாமல் சொல்லி அவனை அதிர வைத்திருந்தாள்..
"ஹஸ்பண்டா..? உனக்கு கல்யாணமே ஆகல அப்புறம் ஹஸ்பண்ட் எப்படி..?" சாரதா சிரிக்க..
"இருக்காரே.. சொல்லட்டுமா..!" என ஆரம்பித்து குரலை செருமிக் கொண்டாள் தேம்பா..
வெண்மதியோ கணவன் என்ற பெயரில் இவளுக்கு தாலி கட்டியிருந்தவன் ஒரு கொடூரனாயிற்றே, அவனும் இல்லை என்றான பிறகு இவள் வேறு யாரை பற்றி பேசப் போகிறாள் என்ற குழப்பத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்..
"என் ஹஸ்பண்ட் எனக்கு மட்டுமே உரிமையானவர்.. அவரோட மொத்த அன்பும் எனக்கானது.."
"அட யாரடி இவ..! புருஷன்னாலே பொண்டாட்டிக்கு மட்டும் தான் சொந்தம்.. இதுல பெருசா அதிசயம் என்ன இருக்கு.." வெண்மதி குறுக்கிட..
"இல்ல இல்ல என் ஹஸ்பண்ட் எனக்கு மட்டும்தான் சொந்தம்.."
அயோக்கிய தந்தையை நல்லவனாய் சித்தரித்து தன் ஆசைக்கேற்றார் போல் பெருமையாக பேசியதை போல் கணவனையும் தன் கற்பனைக்கேற்றப்படி வர்ணிக்கிறாளோ..! என ஓரளவிற்கு யூகித்திருந்தாள் வெண்மதி..
சாரதா ராஜேந்திரன் கூட அடுத்து என்ன சொல்ல போகிறாளென ஆர்வத்தோடு அவள் முகத்தை பார்த்திருந்தார்கள்..
வருண் கண்களில் கலவரத்தோடு படபடப்பாக தெரிந்தான்.. அவள் பேசியதன் உள்ளர்த்தங்கள் அவனுக்கு மட்டுமே சரியாக புரிந்தது..
கிடைக்காத ஒன்றை தனக்கானதாய் எண்ணிக்கொண்டு பேசுகிறாள்.
"அ.. அவர் கூட நான் நூறு வருஷம்.. இல்ல நுறு ஜென்மத்துக்கு நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்வோம் சந்தோஷமா இருப்போம்.. எங்களுக்கு நடுவுல யாருமே இல்ல.. நா.. நானும் அவரும் மட்டும் தான்.. அ.. அவரோட காதல் பங்கு போட்டு தரக்கூடியது இல்லை.. அது எனக்கு மட்டுமானது.."
அவள் சொன்ன மொத்த வார்த்தைகளின் அர்த்தம் ஒன்றே ஒன்றுதான்.. வருண் எனக்கானவன்..
"தேம்பா ப்ளீஸ் போதும் உட்காரு.." வருண் அவளை அடக்க முயன்றான்.. தேம்பாவணி அதை உணரும் நிலையில் இல்லை..
"எங்க ரெண்டு பேருக்கும் நிறைய குழந்தைங்க.. நானும் அவரும் பேச முடியாத அளவுக்கு குழந்தைகளால தொந்தரவு இருந்தாலும் அதையும் மீறி நாங்க ரகசியமாக காதலிப்போம்.. வெண்மதி அக்கா.. நான் சொன்னேன்ல.. ஐ லவ் யூ மட்டும் காதல் இல்லைன்னு.. என் புருஷன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா அவரோட காதலை எனக்கு உணர்த்திக்கிட்டே இருப்பார்.. அந்த காதல் எப்படி இருக்கும் தெரியுமா.. மூச்சு முட்டற அளவுக்கு அதிகமா இருக்கும்.. ஆனா கொஞ்சங்கூட திகட்டி போகாது.. அவரோட கோபம் கூட காதலோட பிரதிபலிப்புதான்.."
"பொண்டாட்டி பொண்டாட்டின்னு அவர் என்னை மட்டும் தான் கூப்பிடுவார்.. ஏ.. ஏன்னா நான் மட்டும்தானே அவருக்கு பொண்டாட்டி..!"
இதெல்லாம் தேம்பாவணியின் ஆழ்மன ஏக்கம் என்று புரியாமல் ராஜேந்திரன் தலையை சொரிந்தார்..
"ஒருவனுக்கு ஒருத்தி தான்.. என்னவரோட அந்த ஒருத்தி நான் மட்டும்தான்..!" தான் சொன்னதற்கு அப்பாற்பட்டு நிதர்சனம் வேறொன்றாய் தனித்து நிற்பதாய் எண்ணி அவள் கண்களில் கண்ணீர் வழிய.. மற்றவர்கள் சஞ்சலத்தோடு தேம்பாவணியை பார்த்துக் கொண்டிருந்தனர்..
"சாரி கொஞ்சம் எமோஷனலாகிட்டேன்..!" தேம்பாவணி துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டு சிரிக்க..
வேகமாக எழுந்து அவளை அணைத்துக் கொண்டான் வருண்..
அழும் பெண்ணை தேற்றும் ஒரு ஆறுதலான சினேகித அரவணைப்பாகத்தான் தெரிந்தது மற்றவர்களுக்கு..
"டோன்ட் வெரி தேம்ஸ்.. கூடிய சீக்கிரமே அந்த ஒருத்தன் உனக்கே உனக்கானவனாய் மாறுவான்.. நம்பிக்கையுடன் இரு.." வருண் சொன்னது அவளுக்கு புரியவில்லை..
தனக்கு வரப்போகும் வருங்கால துணை பற்றிய எதிர்பார்ப்புகளைத்தான் தேம்பாவணி வெளிப்படுத்தி இருக்கிறாள் என சாரதா ராஜேந்திரன் நினைத்துக் கொண்டிருக்க வெண்மதிக்கோ தேம்பாவணி இப்போதும் புரியாத புதிராகவே தெரிந்தாள்.. அந்தக் கண்ணீர் இன்னும் அதிகமாகவே அவள் மனதை குடைந்தது..
அறைக்குள் வந்த தேம்பாவணி அந்த சின்ன பெட்டியை எடுத்து வைத்து மாத்திரையை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருக்க..
திடீரென அந்தப் பெட்டியை பிடுங்கியது ஒரு கரம்..
திடுக்கிட்டு நிமிர்ந்து போய் பார்க்க எதிரே வெண்மதி..
"என்னது இது..?" என்றாள் கடுமையான குரலில்..
தேம்பாவணியின் முகம் வெளிறி போனது.
"அ.. அது அக்கா வருண் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரை இது.. ஒன்னுதான் மிச்சம் இருந்தது.. அதனால போடலாமா வேண்டாமான்னு யோசிச்சுட்டே உட்கார்ந்து இருந்தேன்.." எச்சில் விழுங்கி தடுமாறினாள்..
"மாத்திரையை பார்த்து எதுக்காக அழுத..! எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு.. இரு நான் வருண் கிட்ட கேட்கறேன்.." வெண்மதி நகர போக ஓடிவந்து அவள் முன்னால் நின்றாள் தேம்பா..
"அக்கா ஏன் இந்த விஷயத்தை பெருசு படுத்தறீங்க.. நான் உண்மையைத்தான் சொல்றேன்.. இது அவர் எழுதிக் கொடுத்த ஆன்டி டிப்ரஷன் டேப்லெட் தான்.. நீங்க நினைக்கற மாதிரி வேறெதுவும் இல்ல..
அவளைக் கூர்ந்து பார்த்தாள் வெண்மதி..
"ஏன் பேச்சுல இவ்வளவு தடுமாற்றம்.. இல்ல.. உன் பார்வை பேச்சு எதுவுமே சரியில்ல.. டிப்ரஷன் டேப்லெட்தான.. சரி நான் போட்டு பார்க்கறேன்.." என்று கையிலெடுக்கப் போக அதை வேகமாக தட்டி விட்டாள் தேம்பாவணி..
"என்னக்கா பண்றீங்க.. எனக்கு மன அழுத்தம்.. அதனால மாத்திரை போடுறேன். உங்களுக்கு ஒன்னும் இல்லையே.. தேவையில்லாத மாத்திரையை போட்டு ஏதாவது ஏடாகூடமாச்சுன்னா என்ன செய்யறது..!" மூச்சு வாங்கி பேசியவளின் குரல் நடுங்கியது..
"ஏய்.. இப்ப எதுக்காக இவ்வளவு பதட்டம்.. ஒரு மாத்திரை போட்டுக்கறதால எனக்கு உயிர் போய்டாது.. இது என்னதுன்னு நான் தெரிஞ்சுக்கணும்.."
"ஐயோ அக்கா விடுங்களேன்.. நான் மாத்திரையே போடல போதுமா..!"
"ராத்திரி நேரத்துல ஏன் இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க..! வெண்மதி நீ இங்க என்ன பண்ற..?" என்றபடியே உள்ளே வந்திருந்தான் வருண்..
"அக்கா ப்ளீஸ் ப்ளீஸ் அவர்கிட்ட சொல்லாதீங்க..!" என்னும்போதே கடகடவென அனைத்தையும் கொட்டி தீர்த்திருந்தாள் வெண்மதி..
"அந்த மாத்திரை எங்க..?" வருண் கேள்விக்கு வெண்மதி அந்த டியூப் மாத்திரை உருண்டோடிய இடத்தை காட்டினாள்..
அந்த இடத்தில் மண்டியிட்டு அமர்ந்து குனிந்து அந்த மாத்திரையை உற்று நோக்கிய வருண் அதில் ஏதோ வித்தியாசம் தெரிவதை உணர்ந்திருக்க.. மாத்திரையை கையால் எடுக்கும் முன் தட்டி விட்டிருந்தாள் தேம்பாவணி..
எழுந்து நின்றவன் கத்தி போன்ற கூர்மையான விழிகளால் அவளை துளைத்தெடுத்துக் கொண்டிருந்தான்..
"ஓகே.. நான் எல்லாத்தையும் சொல்லிடறேன்.. அது மாத்திரை இல்ல விஷம்.." என தான் செய்த காரியத்தை ஒளிவு மறைவின்றி தயக்கத்தோடு பயந்து கொண்டே சொல்ல.. வெண்மதிக்கு மயக்கம் வராத குறை.. வருணுக்கோ முகத்தில் கோபம் கொப்பளித்து சிவந்து போயிருந்தது..
பேசி முடிக்கும் முன் பளாரென்று தேம்பாவணியை அறைந்திருந்தான்..
வெண்மதி உடம்பு தூக்கி வாரி போட..
"ஏய் என்னடா நீ.. அவளே நொந்து போயிருக்கா.. விஷயம் என்னன்னு கேக்காம இப்படி அடிச்சு மென்மேல காயப்படுத்தறியே.." என பரிந்து கொண்டு வந்தவளை..
"நீ வாய மூடு" கண்கள் சிவக்க ஒரே வார்த்தையில் அடக்கிவிட்டு தேம்பாவணியின் பக்கமாக திரும்பினான்..
"சொல்லு எதுக்காக இப்படி செஞ்ச..? அப்போ உன் பிரச்சனையை சரி பண்ணி உன்னை சந்தோஷமா வச்சுக்கணும்னு ராவும் பகலுமா பாடுபட்டுட்டு இருக்கற நாங்கல்லாம் முட்டாள் அப்படித்தானே..?"
"இங்க பாருங்க நான் சாகணும்னு நினைச்சது உண்மைதான்.. ஆனா இப்போ சாகறதுக்காக இந்த டேப்லட்டை எடுக்கல.. இதை எப்படியாவது டிஸ்போஸ் பண்ணிட்டு இந்த வீட்டை விட்டு போயிடலாம்னு.."
"வாட்.. வீட்டை விட்டு போக போறியா..?" ஏற்கனவே அவள் தந்த அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்கள் புதிதாய் வந்த செய்தியில் நிலை குத்திய பார்வையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
"என்ன தேம்பா.. அப்படி என்ன பிரச்சனை உனக்கிங்க..? நாங்க யாராவது உன்னை கஷ்டப்படுத்தினோமா.. உனக்கு இங்க இருக்க பிடிக்கலையா.. இல்ல சொல்ல முடியாத வேற ஏதாவது தொந்தரவா..? எதுக்காக தற்கொலை பண்ணிக்கனும்னு நினைச்சே. இப்ப எதுக்காக வீட்டை விட்டு போகணும்னு முடிவெடுத்த..!" தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கி உதடுகள் உலர்ந்து குரல் நடுங்க கேட்டாள் வெண்மதி..
"சொல்லுடி கேக்கறாங்க இல்ல..!" உதடு கடித்து உரிமையாக டி என்று அழைத்து சீறி கொண்டு வந்த வருணின் கோபம் புதியதாய் தெரிந்தது வெண்மதிக்கு..
"எனக்கு நீங்க வேணும்..! நீங்க இல்லாம இந்த உலகத்துல என்னால வாழ முடியாது.. அதனாலதான் தற்கொலை முடிவெடுத்தேன்.. ஆனா நான் செத்து எல்லாரையும் பிரச்சனையில மாட்டி விட விரும்பல.. அதனாலதான் இந்த விஷ மாத்திரையை தூக்கி போட்டுட்டு கண் காணாத ஒரு இடத்துக்கு போய் உங்க நினைப்பிலேயே காலம் பூரா வாழ்ந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.."
"அப்ப ஆரம்பத்துலருந்து நான் நினைச்சதெல்லாம் சரிதான்.." வெண்மதியின் கருவிழிகள் இடவலமாக உருண்டன..
வருண் தேம்பாவணியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..
"எனக்காக சாக பாத்தியா..?" காற்றும் குரலுமாக வெளிவந்தன வார்த்தைகள்..
ம்ம்..! தலையசைத்து அவனை பார்க்க இருவரின் விழிகளும் சொல்லொண்ணா உணர்வுகளோடு நெருக்கமாக தொட்டு வருடி கொண்டன..
"பாவி.. பாவி அந்த பொண்ணோட மனசை கெடுத்து அவளை கொல்லப் பாத்தியேடா படுபாவி.. திலோத்தமா சொன்னது சரியா போச்சு.. அவளுக்குதான் விவரம் தெரியாது, சின்ன புள்ள.. வளர்ந்த கடாமாடு உனக்கு எங்கடா போச்சு புத்தி.. எல்லாத்தையும் கெடுத்துட்டு வந்து எரும மாடு மாதிரி நிக்கிறான் பாரு.. திலோத்தமாவுக்கு துரோகம் பண்ணி இந்த பொண்ணு மனசுல ஆசையை விதைச்சு ஏண்டா இப்படி ஒரு காரியத்தை செஞ்ச.." பற்களை கடித்து பேசிக்கொண்டே வருண் முதுகில் மொத்தினாள் வெண்மதி..
தேம்பாவணியை பார்வையால் தின்று கொண்டிருந்தவன் அவள் அடித்ததில் "அக்காஆஆஆ.." என முதுகை தேய்த்துக் கொண்டு கோபமாக கத்த..
"என்னடா அக்கா..! எதுக்காக அந்த பொண்ணு மனச கலைச்ச..! நீ விகல்பமில்லாம வெகுளித்தனமாக அந்த பொண்ணு கூட பழகறதா அம்மா அப்பா சொன்னாங்க.. ஆனா நீ அவளோட ரொம்ப நெருக்கமா பழகறது எனக்கும் திலோத்தமாவுக்கும் மட்டும்தான் தெரிஞ்சது.. வாய் புளிச்சதா மாங்கா புளிச்சுதான்னு எதுவும் தப்பா பேசிட கூடாதுன்னு தான் இவ்வளவு நாள் பொறுமையா இருந்தேன்.. இப்ப நான் நினைச்சதெல்லாம் சரியா போச்சு.. ஐயோ இப்ப நான் என்ன செய்வேன்.. உன்னை மறக்க முடியாமல் தற்கொலை பண்ணிக்கற அளவு போயிருக்கான்னா எந்த அளவுக்கு அவர் மனசுல ஆழமா நீ ஊடுருவி இருக்கேன்னு தெரிஞ்சுக்க.. இப்ப எப்படிடா அந்த நினைப்பை அவ மனசுலருந்து அழிக்கறது..?" வெண்மதி காய்ச்சல் கண்டவள் போல் புலம்பிக் கொண்டே செல்ல..
"எதுக்காக அழிக்கணும்..!" என இடைமறித்தான் அவன்..
"என்னது கேள்வியை பாரு.. அழிக்காம.. திலோத்தமாவ கூட்டிட்டு வந்து திறப்பு விழா நடத்தலாம்னு சொல்றியா..! பொண்டாட்டி இருக்கும்போது இப்படி ஒரு காரியத்தை.."சொல்லி முடிக்கும் முன்..
"ஐயோ அக்கா நிறுத்தறியா..! சும்மா என்ன பொண்டாட்டி பொண்டாட்டின்னு.. எனக்கு கல்யாணமும் ஆகல திலோத்தமா எனக்கு பொண்டாட்டியும் இல்லை.."
"கோவத்துல வாய் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனா நிஜம்னு ஒன்னு இருக்குதே..!"
"நான் உண்மையைத்தான் சொல்றேன்.. திலோத்தமா என் பொண்டாட்டி இல்ல.. பொண்டாட்டி மாதிரி நடிக்க வச்சிருக்கேன்.."
"ஏற்கனவே இவ கொடுத்த ஷாக்ல இருந்தே நான் இன்னும் வெளியே வரலடா அதுக்குள்ள புதுசா என்னடா உளர்ற..?"
இழுத்து பெருமூச்சு விட்டவன்..
"நான் சொல்றத கவனமா கேளு.. நேரம் வரும்போது எல்லாத்தையும் முதல்ல உன் கிட்ட தான் சொல்வேன்னு சொன்னேன் இல்லையா..! இப்ப சொல்றேன்.." என்று திலோத்தமாவை மனைவியாக நடிக்க வைத்த சங்கதியை விலாவாரியாக எடுத்துச் சொல்ல..
தேம்பாவணியும் வெண்மதியும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மயங்கி கீழே விழுந்தனர்..
"என்ன ரெண்டும் ஜோடியா மயங்கி விழுந்துருச்சுங்க.." விழித்தபடி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..
தொடரும்..