அக்கா..
சந்திரமதி.. வாசலில் இளசான பழக்கப்பட்ட குரலொன்று கேட்க சீருடையின்மீது துப்பட்டாவை மடித்து பின்குத்தியவாறு வெளியே வந்தாள் சந்திரமதி..
அவள் வகுப்பு தோழி பிருந்தா வாசலில் நின்றிருந்தாள்.. அவள் கையிலிருந்த பாத்திரத்தை கண்டதும் சந்திரமதியின் முகம் சடுதியில் மாறிப்போனது..
"இட்லி வேணும் ஆன்ட்டி இல்லையா..?" சந்திரமதியை தாண்டி பிருந்தாவின் பார்வை உள்ள எட்டிப் பார்த்தது..
"இதோ வந்துட்டேன்" என்றபடியே வெளியே வந்தாள் அருந்ததி..
பாத்திரத்தை வாங்கிக் கொண்டு.. "எத்தனை இட்லி டி.." என்றபடி வராண்டாவின் திண்ணையில் ஓரமாக மூடி வைத்த இட்லி பாத்திரத்தை திறந்தாள்..
"அஞ்சு இட்லி வேணும் ஆன்ட்டி சாம்பார் கொஞ்சம் நிறைய ஊத்த சொன்னாங்க..!" என்ற சிறு பெண்ணை உதட்டோர சிரிப்புடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையில் கவனம் பதித்தாள் அருந்ததி..
பேசிக் கொண்டிருந்த இடைவெளியில் பிருந்தா தன்னை ஏற இறங்க ஒரு மாதிரியாக பார்ப்பது போல் சந்திரமதிக்குள் ஒரு எண்ணம்..
"சந்திரா பிசிக்ஸ் ரெக்கார்ட் முடிச்சிட்டியா..!" பிருந்தாவின் சினேகமான கேள்விக்கு.. பதிலேதும் சொல்லாமல் விறுவிறுவென உள்ளே நடந்தாள் சந்திரமதி..
பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி சமாளிப்பாக.. "நீ சொன்னது அவ காதுல விழலைன்னு நினைக்கிறேன்.. நேத்து ராத்திரி முழுக்க உட்கார்ந்து ஏதோ படம் வரைஞ்சுட்டு இருந்தா..! முடிச்சிருப்பான்னு நினைக்கறேன். இதெல்லாம் எனக்கென்ன தெரியுது.. ஒழுங்கா படிச்சா சரிதான்.." என்றபடி பாத்திரத்தை கொடுத்துவிட்டு பிருந்தா எண்ணித் தந்த சில்லறையை வாங்கிக் கொண்டாள்..
அந்தப் பக்கம் பிருந்தா சென்றதும் உள்ளே வந்ததும் வராததுமாக..
"இந்த இட்லி வியாபாரத்தை நிறுத்தவே மாட்டியா நீ..!" சந்திரமதி அடிக்குரலில் ஆக்ரோஷமாக கத்திய திசையில் புரியாமல் திரும்பினாள் அருந்ததி..
"உன்னால என் மானம் போகுது.. ஸ்கூல்ல எல்லாரும் இட்லிகாரம்மா பொண்ணு.. இட்லி காரம்மா பொண்ணுன்னு கேலி பண்றாங்க தெரியுமா..!" ஆக்ரோஷமான வார்த்தைகள் அழுகையில் போய் முடிந்தது..
"இதுல என்னடி இருக்கு.. உழைச்சு சம்பாதிக்கற எந்த தொழிலும் கேவலம் இல்லை.. கேலி பண்ற உன் பிரெண்ட்ஸ் கிட்ட போய் இதை சொல்லு.."
"அதான் கௌரவமா ஒரு வேலை கையில இருக்குது இல்ல.. அப்புறம் எதுக்கு இந்த இட்லி வியாபாரத்தை புடிச்சுகிட்டு தொங்கற..! உங்க அம்மா என்ன வேலை செய்றாங்கன்னு டீச்சர் கேட்டா ஃபுட் டெலிவரி பண்றாங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி மத்த எல்லாரும் இட்லி விக்கறாங்கன்னு கத்தறாளுங்க.. எனக்கு எவ்வளவு அவமானமா இருக்கு தெரியுமா..?"
"அவமானம் அசிங்கம்னு நீதான்டி நினைக்கற.. உன்னை தவிர வேற யாரும் அந்த எண்ணத்துல நம்மள கேவலமா பாக்கறது இல்ல.. இதோ இப்ப வந்தாளே உன் கூட படிக்கிறவ.. அவ கூட நல்ல விதமாத்தான பேசிட்டு போனா.. உன் அம்மா உழைச்சு சம்பாதிக்கிறேன்னு தலைநிமிர்ந்து சொல்லாம கூனி குறுகி போக இதுல என்னடி கேவலம் இருக்கு.. சம்பாதிக்கிற காசு வாடகைக்கும் வாங்கின கடனுக்கும் சரியா போகுது.. ஏதோ இந்த இட்லி வியாபாரம்தான் வயிறார மூனு வேளை சோறு தின்ன உதவியா இருக்குது.. அதையும் விட்டுட்டு பட்டினி கிடக்க சொல்றியா..?"
"இப்படி வாழறதுக்கு பட்டினி கிடக்கிறது எவ்வளவோ மேல்.. அப்பா கூட போயிருந்திருந்தா இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா நமக்கு..!"
தீ பட்டது போல் துடித்தாள் அருந்ததி..
வேகமாக மகளின் அருகில் வந்து முரட்டுத்தனமாக அவள் தோளை பற்றி திருப்பினாள்..
"என்னடி சொன்ன..? அப்பாவா..! திடீர்னு எங்கருந்துடி வந்தான் உங்கப்பன்.. அந்த ஆள நீ எங்கேயாவது பாத்தியா..?" எச்சில் கூட்டி விழுங்கியபடி படபடப்போடு கேட்டாள்..
"சும்மா கத்தாதம்மா.. அப்பாவை நான் எங்கேயும் பார்க்கல.. ஆனா என் கூட படிக்கிற எல்லா பிள்ளைகளுக்கும் அம்மாவும் இருக்காங்க.. அப்பாவும் இருக்காங்க.. பள்ளிக்கூடத்துல எதுனாலும் இரண்டு பேரும் சேர்ந்து வர்றாங்க.. போன வருஷம் ஆண்டுவிழாவுல கூட எல்லா புள்ளைங்களும் சந்தோஷமா இருக்கும் போது நான் மட்டும் எவ்வளவு அழுதேன் தெரியுமா..?
மகளின் கண்ணீரில் அருந்ததியின் கோபம் குளிர் தண்ணீர்விட்டதை போல் தணிந்து உருகி போயிற்று..
"உனக்கு தான் நான் இருக்கேனேடி.. என்ன வேணுமோ என்கிட்ட கேளு.. நான் செய்றேன்.. " அவள் நாடியை பற்றி தன் பக்கம் திருப்பிட அவள் கரத்தை தட்டிவிட்டாள் மதி..
"என்ன செஞ்சிடுவ நீ.. ஒரு நாள் ஒரு மணி நேரம் என் கூட உட்கார்ந்து பேச உனக்கு நேரமில்ல.. அன்னைக்கு கடையில் ஆசைப்பட்டு அந்த அனார்கலி சுடிதார் கேட்டேன்.. உன்னால வாங்கித் தர முடியல.."
"அது அஞ்சாயிரம் ரூபாய்டி மதி..! நம்ம குடும்பத்தோட ஒரு மாச சாப்பாட்டு செலவு.."
"இதுதான்.. இதுதான் உன் பிரச்சனை.. என் ஆசையை உன்னால நிறைவேத்தவே முடியாது.. அப்பா இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமையே வந்திருக்காது.."
"ஓஹோ..! நாள் பூரா மழையிலயும் வெயில்லையும் முதுகெலும்பு தேய வண்டி ஓட்டி உன்னைய காப்பாத்தற நான் உங்கண்ணுக்கு பெருசா தெரியல.. நீ பொறந்த நிமிஷத்துல இருந்து ஒரு முறை கூட உன்னை கையில தூக்கி பாக்காத உன் அப்பன் பெருசா போய்ட்டானா..! பழைய வீட்ல தெருவுல நின்னு சந்தி சிரிக்க அந்த ஆள் அசிங்கமா கத்தி பேசினதெல்லாம் மறந்து போச்சுதா உனக்கு..!"
"அவர் உன்னைத்தானே பேசினார் என்னை பேசலையே.. என் பொண்ண தந்துடுன்னு கேட்டாரே.. அப்பவே அப்பாகிட்ட என்னை தூக்கி குடுத்திருக்க வேண்டியதுதானே.. சும்மா எதையாவது சொல்லி அப்பா மேல வெறுப்பை வளர்க்காத.. உன் கூட பேச எனக்கு நேரமில்ல.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சு.." என்றபடி பையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே நடந்தாள் சந்திரமதி..
சடசடவென்று நூறு கத்திகளால் நெஞ்சை தாக்கிய வலி.. அப்போதும் கூட சுதாரித்துக் கொண்டு அவசரமாக பனியனை அணிந்தபடி மகளை அவசரமாக பின்தொடர்ந்து வெளியே வர..
"நீ ஒன்னும் என் கூட வர வேண்டிய அவசியமில்ல.. இனி நான் தனியாவே போய்க்கறேன்.. உனக்கு பொண்ணா பொறந்த பாவத்துக்கு இதையெல்லாம் பழக்கிக்கத்தான் வேணும்..!" என்றபடி முதுகில் மாட்டிய பையோடு விறுவிறுவென நடந்தாள் சந்திரமதி..
எலும்புகளை உருவி எடுத்தது போல் உடம்பே துவண்டு போனது.. ஓய்ந்து போனவளாக உள்ளே வந்து அமர்ந்தாள் அருந்ததி..
முயன்று பார்த்தும் முடியாமல் மன வலியோடு கண்ணீரை பிரசவித்து விட்டன கண்கள்..
என்ன பேச்சு பேசி விட்டு போகிறது இந்த பொண்ணு.. ஜீரணிக்கவே முடியவில்லை..!
எப்போது மகள் பேசும் படபடப்பான பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை அருந்ததி.. அடிமனம் வரை எடுத்துச் சென்று இந்த வார்த்தைகளை ஆராய்ந்தால் சீழ் பிடித்து மேலும் மேலும் ரணம் கூடும்..! கடமைகள் தலைக்கு மேல் வரிசையில் காத்திருக்கையில் வருத்தங்களை வலிய இழுத்து மனதுக்குள் போட்டு குழப்பிக் கொள்வானேன்.. என்ற ரீதியில் சின்ன பெண்ணின் எடுத்தெறியும் பேச்சுக்களை கருத்தில் கொள்வதில்லை..
ஆனால் இன்று அப்பா வேண்டுமென சந்திரமதியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளில்.. இதயத்தை புரட்டிப்போட்ட அதிர்ச்சியும் அதைத்தொடர்ந்து பயமும்.. வேதனையும் என்று கலவையான உணர்வுகளால் நொறுங்கிப் போனாள் அருந்ததி..
ஒருவேளை சந்திரமதியை பள்ளிக்கூடத்திற்கு சென்று பார்த்திருப்பானோ..
வாய்ப்பில்லை அப்படியானால் அக்கம் பக்கத்தில் யாரேனும் வந்து எனக்கு தகவல் சொல்லி இருப்பார்களே..
இந்த பொண்ணுக்கு ஏன் திடீரென்று புத்தி இப்படி பேதக்கிறது..
ஏற்கனவே இந்த குட்டி படபடவென வெடிக்கும் பட்டாசாக நெருப்பு பொறிகளோடு என்னை பார்க்கிறதே.. ஒருவேளை அந்த ஆள் வந்து அழைத்தால் என்னை விடுத்து அவனோடு சென்று விடுவாளோ..!
அவன் மகள் என்ற பாசத்தில் அழைத்திருந்தால் கூட பரவாயில்லையே.. அருந்ததியின் மனம் ஆறியிருக்கும்.. குழந்தை பிறந்திருந்த காலங்களில் கூட அருந்ததியை விடாமல் வதைத்தவன்..
பச்சிளங்குழந்தை அழும்போது "இந்த சனியன் வேற நடுவுல தொண தொணன்னு.. உண்டானது முன்னவே தெரிஞ்சிருந்தா ஆஸ்பத்திரி கூட்டிட்டு போய் கலைச்சி விட்டிருக்கலாம்.. வயிறு பெருத்து போன பிறகுதான் புள்ள உண்டானது உனக்கே தெரிஞ்சுது.. இப்ப இந்த சனியன் பிறந்து என் சந்தோஷத்துக்கு இடைஞ்சலா வந்து நிக்குது.." பெற்ற மகளை பச்சிளங் குழந்தை என்று பாராது துர் வார்த்தைகளால் ஆராதித்தவன் பாசத்தோடு அழைத்தானா..? நம்புகிறாளா அவள்!
மகள் குப்புற விழுந்தது தவழ்ந்தது நடந்தது எதையும் பிரபாகர் கண்டு கொண்டதும் இல்லை.. ரசித்ததும் இல்லை..
அருமை மகள் பெயர் கூட தெரியாது.. சந்திரமதியை கண்டாலே அவன் வாயிலிருந்து வரும் வார்த்தை சனியன் மட்டுமே..!
வெளிவேஷம் போட்டு பெத்த மகள் மீது பாசம் கொண்டவன் போல் இப்போது அழைப்பது எதற்காகவாம்..?
சுயநல பிசாசு தன் இயலாமையை வெளி உலகத்திற்கு மறைத்து தனக்கும் வாரிசு உண்டு என்று பெருமையாக காட்டிக் கொள்ள அருங்காட்சியகம் போல் காட்சி பொருளாய் வைப்பதற்காக சந்திரமதியை கேட்கிறான்..
மகளைக் கொண்டு போய் அந்த நரகத்தில் தள்ளுவதோடு அவன் வேலை முடிந்துவிடும்.. ஆனால் மருமகளை மகளாக பார்க்காத அந்த வீட்டு மிருகம் பேத்தியை மட்டும் குழந்தையாகவா பார்க்க போகிறது..
நினைக்கும் போதே நெஞ்செல்லாம் நடுக்கம்..
தண்ணீரை மளமளவென குடித்து படபடப்பை குறைத்துக் கொண்டாள்..
சின்ன கோடு பக்கத்தில் பெரிய கோட்டை இழுப்பது போல் தேவையில்லாத உபரித் துளியாய் இந்த பிரச்சினை..
ஏற்கனவே தீர்க்க வேண்டிய.. தீர்க்க முடியாத பிரச்சனைகள் ஆயிரம் உண்டு..
வீட்டு உரிமையாளர் கொடுத்த கெடு முடிந்து இரண்டு நாட்களளாகிவிட்டது..
வாடகைக்கு வீடு ஒன்றும் கிடைக்கவில்லை..! இரண்டு வீடுகள் காலியாக இருப்பதாக சிலர் சொல்ல கேள்வி பட்டு அருந்ததி போய் அந்த வீட்டை பார்த்தாள்..
ஒரு வீடு சந்திரமதி படிக்கும் பள்ளியிலிருந்து மிக தொலைவில் இருந்தது.. இன்னொன்று தீப்பெட்டி அளவுதான்.. படுத்தால் கால் இடிக்கும்.. நின்றால் தலைமுட்டும்..
அந்த வீட்டிற்கு ஐம்பதாயிரம் வாடகை என்று மனசாட்சி இல்லாமல் வீட்டின் உரிமையாளர் பத்து அம்ச கோட்பாடுகளை வகைப்படுத்தியதில் வெறுத்துப் போய் வீடு திரும்பியிருந்தாள்..
"வீடு எப்ப காலி பண்ண போறீங்க..?" போன வாரமே இரண்டு முறை அழைத்து கேட்டு விட்டார் ஹவுஸ் ஓனர்.
"சார் வீடு எங்கேயுமே கிடைக்கல ஒரு ரெண்டு மாசம் டைம் குடுங்க.. கண்டிப்பாக காலி பண்ணிடுவேன்.." அவள் கெஞ்சல்.. வேண்டுகோள் விளக்கம் எதுவும் அவர் காதுகளில் விழுந்ததாய் தெரியவில்லை..
"நான் தான் ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேனேம்மா..! ரெண்டு நாள் தான் டைம்.. அதுக்குள்ள நீங்க வீட்டை காலி பண்ணலனா சாமானையெல்லாம் எடுத்து நானே வெளியே போட வேண்டியதா வரும்.."
வாழ்ந்து காட்ட வேணும் என்று நினைக்கும் போதுதான் அடி மேல் அடி.. சுதாரித்து எழ வழியின்றி சறுக்கல்..
"வயசு புள்ளைய வச்சுக்கிட்டு நடுத்தெருவிலயா நிக்க முடியும்.. கொஞ்சம் உதவி பண்ணுங்க சார்.. நான் ஒன்னும் காலி பண்ண மாட்டேன்னு சொல்லலையே.. கொஞ்சம் டைம் கொடுங்கன்னு தானே கேட்கிறேன்.."
"அப்படியே டைம் கேட்டு கேட்டு நிரந்தரமா அங்கேயே தங்கிட ப்ளான் பண்றீங்கன்னு எனக்கு தெரியாதா..? என் அனுபவத்துல எத்தனை பேரை பார்த்திருப்பேன்.. அதெல்லாம் முடியாது.. ரெண்டு நாள்ல வீட்டை காலி பண்ணிடுங்க அவ்வளவுதான்.."
அந்த இரண்டு நாள் கால அவகாசமும் முடிந்து மூன்று நாட்களாகிவிட்டிருந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று பதைபதைத்து கொண்டிருக்கும் வேளையில் மகள் வேறு இல்லாத தலைவலியை இழுத்து விடுகிறாளே..!
வெளியில் தன்னை இயல்பாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அத்தனை மன போராட்டங்கள்..
"என் கஷ்டம் என்னோடு போகட்டும்.. சிறு பெண்ணாவது சந்தோஷமாக இருந்துவிட்டு போகட்டுமே.. என்று அருந்ததி எண்ணியது அவளுக்கே வினையாகி போனது..
தற்போதைய குடும்ப நிலவர பிரச்சனையின் தீவிரமும் தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு செல்கிறது இந்த சின்னது..!
யோசித்துக் கொண்டே நின்றால் தீர்வு கிடைக்காது ஏதேனும் செய்ய வேண்டும்.. முதலில் வேலைக்கு புறப்பட வேண்டும்.. மடிந்து கசங்கி போயிருந்த துணியை கஞ்சியில் நனைத்து விரைப்பாக மாற்றியது போல் சட்டென எழுந்து பையை மாட்டிக் கொண்டு புறப்பட்டாள் அருந்ததி..
ஏற்கனவே அன்றைய நாள் பிரச்சினையில் இன்சென்ட்டிவ் சம்பளத்தை தரமுடியாது என்று நிர்வாகம் கறாராக சொல்லிவிட.. துண்டு விழும் பற்றாக்குறையை சமாளிக்க ஓவர் டைம் பார்க்க வேண்டுமே..! வெளியே வைத்திருந்த இட்லி சாம்பார் பாத்திரத்தை எடுத்து உள்ளே வைத்து மூடிவிட்டு யோசித்துக் கொண்டே அவள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே நடக்க வாசலுக்கு நேராக ஒரு பெரிய எய்ச்சர் வண்டி வந்து நின்றது..
வண்டி முழுக்க பாத்திரங்கள்.. அதுவும் வசதியான வீட்டு மனிதர்கள் பயன்படுத்தும் உயர்தர வீட்டு உபயோக பொருட்கள்..
"இங்க எதுக்காக இந்த வண்டி வந்து நிக்குது" என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த வண்டிக்கு பின்பக்கம் பைக்கை கொண்டு வந்து நிறுத்தினான் மகரிஷி..
அவன் முகத்தை பார்த்ததும் கண்கள் இடுங்க.. இவரு..? அருந்ததி அன்றைய நாள் அவனை சந்தித்த தருணங்களை நினைவுபடுத்தி அசை போட்டுக் கொண்டிருந்தபோது..
போனில் யாருடனோ பேசிக்கொண்டு உரிமையாக கேட்டை தெரிந்து கொண்டு உள்ளே வந்தவன் எதிரே நின்றவளை பார்த்து திகைத்து நின்றான்..!
டி-ஷர்ட் ஜீன்.. அணிந்திருந்தவன் அன்றைவிட இன்று மிக இளமையாக தெரிந்தான்.. அவனைப் பின்தொடர்ந்து வெள்ளையில் ஆங்காங்கே சீரற்ற கருப்பு புள்ளிகளை தூவியதே போல் காது மடிந்து ஒரு நாய் ஓடி வந்தது..
நாய்க்குட்டியை பார்த்ததும் அருந்ததியின் முகத்தில் பயமும் இதயத்தில் படபடப்பும் கூடவே ஒரு அருவருப்பும் சேர்ந்து கொண்டது..
அலைபேசியில் என்ன சொல்லப்பட்டதோ..! அவளிடம் கை நீட்டி நின்றான் மகரிஷி..
நீட்டிய கரத்தையும் அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்தவள்.. புரியாமல் "எ..எ.. என்னது?" என்று கேட்க..
"ஏ இன்ட்டி தாலம் காவாலி..!" வீட்டின் மீது பார்வையை பதித்து கணீர் குரலில் சொன்னான் மகரிஷி..
அப்போதும் அருந்ததி புரியாமல் விழிக்கவே..!
"ஓ.. ஐ அம் சாரி.. இந்த வீட்டோட ச்சாவி வேணும்..! என்றான் தடுமாறிய தமிழில்..
"எதுக்கு..?" அருந்ததியின் முகம் மாறியது
"இந்த வீட்டோட டெனன்ட்டா வந்திருக்கேன்.. வீட்டை காலி பண்ணிட்டு போறவங்க புதுசா குடி வர்றவங்க கிட்ட சாவியை ஹான்ட் ஓவர் பண்றது தான் நியாயம்.." பொறுமையான குரலில் சொன்னான் அவன்..
"நாங்க இன்னும் காலி பண்ணவே இல்லைங்களே.. இங்க தான் குடி இருக்கோம்..! நாங்க குடியிருக்கிற வீட்ல நீங்க எப்படி வாடகைக்கு வர முடியும்..!" அவள் குரலில் பதட்டத்தையும் மீறி ஒரு கோபம் தெரிந்தது..
மகரிஷியும் இதை எதிர்பார்த்திருக்க வில்லை போலும்.. யோசனையாக இடுங்கிய புருவங்களோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..
கடுமையான முகத்தோடு மீண்டும் ஹவுஸ் ஓனருக்கு அழைத்து "சார் என்கிட்ட நீங்க என்ன சொன்னீங்க.. தனி வீடு.. தொந்தரவு இல்லாம இருக்கலாமுன்னு சொல்லி ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் வாங்கினீங்க.. இங்கே ஏற்கனவே வேற ஆளுங்க இருக்கிற மாதிரி தெரியுதே.. என்னை ஏமாத்தணும்னு நினைக்கிறீங்களா..? அவன் குரலில் அருந்ததியும் சற்று மிரண்டு போனாள்..
"சார் சார் ஒரு நிமிஷம் அவசரப்படாதீங்க..! அவங்க இன்னும் ரெண்டு நாள்ல காலி பண்ணிடுவாங்க.. உங்க சாமான்களை அந்த பெரிய ரூம்ல இறக்கி வச்சுக்கங்க.. வீடு உங்களோடது.. நீங்க உங்க இஷ்டப்படி இருக்கலாம்.. ஃபோன அந்த பொண்ணு கிட்ட குடுங்க.." வீட்டு உரிமையாளர் சொன்னதும் இறுகிய முகத்தோடு அலைபேசியை சட்டையில் துடைத்து அவளிடம் நீட்டினான் துரோணா மகரிஷி..
ஒன்றும் புரியாமல் அருந்ததி அவனைப் பார்த்துக் கொண்டே நிற்க..
"மாட்லாடு..!" அதிகார குரலோடு ஐபோனை மீண்டும் அவள் முகத்திற்கு நேரே நீட்டினான்..
யோசனையோடு போனை வாங்கி காதில் வைத்தாள் அருந்ததி..
"சார்.. என்ன சார் நடக்குது..! யாரோ வந்து நினை இந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறதா சொல்றாங்களே.."
"ஆமா.. அந்த சார் அட்வான்ஸ் கொடுத்துட்டாரு. இனி அந்த வீட்ல தான் குடியிருக்க போறார்.."
"சார் அப்ப நாங்க என்ன செய்யறது..?"
"வீட்டை காலி பண்ண சொல்லி எத்தனை நாளாச்சு.. மதிக்கலைன்னா இப்படித்தான் செய்ய முடியும்.. உங்களை வெளியே அனுப்ப இதை விட்டா எனக்கு வேற வழி தெரியல..! இந்த பாரும்மா.. இன்னைக்குள்ள உங்க பொருளையெல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டை காலி பண்ணி குடுத்துடுங்க.. இல்லனா நான் போலீஸ்க்கு போக வேண்டியது வரும்.. இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி வேணும்னா அந்த வீட்ல தங்கிட்டு நாளைக்கு வேற இடம் பாத்துக்கங்க.. இவ்வளவுதான் என்னால செய்ய முடியும்!"
ஆஹா.. எவ்வளவு கருணை..! அருந்ததிக்கு அவர் பெருந்தன்மை ஆத்திரத்தை மூட்டியது..
"சார் ஒரு ஆம்பளையோட நாங்க எப்படி தனியா தங்க முடியும்.."
"அது உங்க பிரச்சனை.. இது கூட ஏதோ போனா போகுதுன்னு பாவப்பட்டு சொன்னேன்.. அவரை சகிச்சுக்க முடியலன்னா இந்த நிமிஷம் கூட நீங்க வெளியே போகலாம்.."
"சார் இதெல்லாம் ரொம்ப அநியாயம்..!" அருந்ததிக்கு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது..
"முடிஞ்ச அளவு நியாயமா நடந்துக்கிட்டேன். நீங்கதான் சொன்ன தேதியில வீட்டை காலி பண்ணி தரலயே.. இதுக்கு மேல இப்படி செய்யறதுதான் நியாயம்னு எனக்கு தோணுச்சு.. வீட்டு சாவியை அவர்கிட்ட குடுத்துடும்மா.."
காதில் போனை வைத்தபடியே எதிரில் நின்றவனை வெறுப்பாக பார்த்தபடி.. சட்டை பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து மகரிஷியிடம் தந்தாள் அருந்ததி..
தொடரும்..